Wednesday, July 22, 2009

(சு)வாசித்ததும்.... யோசித்ததும்...

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3 ...4 ...5 ...6 ..7



Tao of Physics
Author : Dr Fritjof Capra

விஞ்ஞானம், ஆன்மிகம் இரண்டிலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கலாம். நவீன இயற்பியலையும் கீழை நாடுகளின் நம்பிக்கைகளையும் இணையாய் வைத்து பார்க்கும் புத்தங்களில் முக்கியமான ஒன்று. பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

பொதுவா எல்லாரும் சொல்றதுண்டு "நம்ம வேதங்களில் சொல்லாததா? இன்னிக்கு அறிவியல் சொல்ற எல்லாம் எங்காளுக என்னிக்கொ சொல்லி வெச்சுட்டாங்க"ன்னு. இதுவும் அதேமாதிரி வரிசைல ஒரு புத்தகம்னு சிலர் நினைக்கலாம். ஆனால் என் பார்வையில், அவர் சொல்லியிருக்கறது, நவீன இயற்பியல் எப்பிடி கீழை நாடுகளின் தத்துவ கட்டமைப்புக்குள்ள (philosphical framework) தன்னை பொருத்திக் கொள்ள இடம் கொடுக்குதுங்கறதுதான். அதாவது ஒரு அறிவியலாளனுக்கு 'ஆராய்ச்சி'யின் மூலம் ஞானம் கிடைச்சா கீழை நாட்டவருக்கு 'அனுபவ'த்தின் மூலமாவே கிடைச்சுருக்கு. இந்த ஒப்புமை மேலாக பாக்கும்போது கொஞ்சம் வினோதமாத் தெரியலாம். ஏன்னா அறிவியல் சோதனைகள்ங்கறது பல பேர் சேர்ந்து நூதன தொழில்நுட்பங்கள் மூலமாவும் கருவிகள் மூலமாவும் ஆராய்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரது. ஆனா மற்றது ஒரு சிலரோட தனிமைல அவங்க தியானத்தின் மூலமா ஒரு அனுபவம் கிடைச்சு அதை ஒரு நம்பிக்கையா வெளியிடறது. அறிவியல் சோதனைகள் மூலமா மறுபடி மறுபடி செய்து பார்த்து ஒரே முடிவுகளை பலமுறை கண்டறியலாம். ஆனா ஆன்மிக அனுபவங்கள்கறது ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு சில நேரங்களில் நிகழறது. புத்தக ஆசிரியர் சொல்றது என்னன்னா அணுகுமுறைகள் வேற மாதிரி இருந்தாலும் சொல்ல வந்த கருத்துகளோட ஸ்திரத்தன்மையும் நம்பகமும் ஒண்ணேதான்.

"டாவோ"ங்கறதை "பாதை" அல்லது "வழி"ன்னு சொல்லலாம். அறிவியலின் பாதையும் கீழை நாடுகளின் மதம் / நம்பிக்கை சார்ந்த பாதைகளும் கடைசியில் ஒரே இடத்துலதான் சந்திக்கும்... சந்திச்சாகணும். நவீன இயற்பியலாளர்களான நீல்ஸ் போர், ஒப்பன்ஹீமெர், ஹீசென்பெர்க் இவங்கள்லாம் கூட இந்து, புத்த மதங்கள், டாவோயிச தத்துவங்களுக்கும் அறிவியலுக்கும் உள்ள இணைகளைப் பத்தி பேசியிருக்கறதையும் ஆசிரியர் மேற்கோள் காட்டியிருக்காரு.

ஆரம்பத்துலயே ஆசிரியர் காரண ஞானத்துக்கும் (rational knowledge) முழு ஞானத்துக்கும் (absolute knowledge) இருக்கற வித்தியாசங்களை (ஆராய்ச்சி , அனுபவம்) சொல்லி, ஆராய்ச்சியில் நமக்கு இருக்கற எல்லைகள், புலன்களோட திறன் போன்ற நெருக்கடிகளையும், அனுபவத்திற்கு இந்த கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாததையும் விளக்கி எழுதியிருக்காரு. ஆனா எதுவா இருந்தாலும் செய்தியின் நம்பகத்தன்மை ரெண்டுலயும் ஒத்துக்கற மாதிரிதான் இருக்குங்கறதையும் தெளிவாக்கிடறாரு.

இன்னும் க்வாண்டம் அறிவியல் பத்தியும், கீழை நாட்டு சித்தாந்தங்களையும் ஒப்புமைப் படுத்தி சொல்லும்போது நமக்கும் இந்து, புத்த மத கோட்பாடுகளுக்கு கொஞ்சம் அறிமுகம் இருக்கறதால சுலபமா புரியுது. ஏத்துக்கவும் முடியுது. ஒரு சின்ன உதாரணம். ஒளி அலையா, துகளான்னு கேக்கும்போது விஞ்ஞானி ஷ்ரோடிங்கர் தன் ஆராய்ச்சி முடிவுல, அது பார்வையைப் பொறுத்தது; சாட்சி பார்க்கும்போது அலையாகவும் பார்க்காதபோது துகளாகவும் (photon) இருக்குன்னு சொன்னார். அறிவியலில் அடிப்படையா everything is objective. No influence from a subject is accepted. இருந்தாலும் அந்த ஒளி அலை ஒரு mathematical wave னு சொன்னதால ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே மாதிரி, கீழை நாட்டு சித்தாந்தங்கள்ல இந்த ப்ரபஞ்சத்தின் இயக்கத்துக்கெல்லாம் ஒரு பரமசாட்சி இருக்குன்னு சொல்றதையும் சுட்டியிருக்கார்.

பிரபஞ்சத்தோட இயக்கம் ரொம்ப dynamic ஆ இருந்தாலும் அதுல ஒரு ஒழுங்கும் (rhythm) ஒத்திசைவும் (harmony) இருக்கறதையும், இதையே இந்து மதத்தின் நம்பிக்கைப்படி சிவனோட தாண்டவம் (நடராஜர்) உருவகப் படுத்தறதையும் ஒப்பிட்டுப் பேசும்போது ஆச்சரியமாத்தான் இருக்கு.

இந்தப் புத்தகத்தைப் பத்தி என்னால் ரொம்ப எழுத முடியல. அவரே சொல்லியிருக்கற மாதிரி சில விஷயங்களை சுயமா நம்ம புலன்களோட ஆராய்ஞ்சும், கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாம கற்பனைலயும் அனுபவிச்சும் பாக்கும்போது ஒவ்வொருவர் பார்வைலயும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கும்கறதால 'புரிதல்'ங்கறதே ஒரு தனி அனுபவமாயிடும்.

படிச்சுப் பாருங்க.... உங்க பார்வை மாறலாம்....

Sunday, July 19, 2009

விழுதாகும் விருதுகள் !!

சிங்கைப் பதிவர் அறிவிலி தடாலடியாக என் பதிவுக்கு இந்த விருதைக் கொடுத்து விட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சாதாரணமா இது மாதிரி விருதெல்லாம் அங்க இங்க சுத்தி அலுத்துப் போய் கடைசிலதான் நமக்கு வரும். என்னமோ இந்தத் தடவை சீக்கிரமே வந்துடுச்சு. ஆரம்பிச்சு வெச்ச செந்தழல் ரவிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.




இந்த எம்.எல்.எம்.க்கு ஜெயலட்சுமி அக்கா (ஆண்ட்டி??) கிட்டயெல்லாம் ட்யூஷன் எடுக்க வேண்டியதில்லை. கிடைக்கிற கொஞ்சமே கொஞ்சம் நேரத்துல நாம நமக்குத் தெரிஞ்ச, ரெகுலராப் படிக்கற நாலு பேருக்கு தாராளமாக் குடுக்கலாம்.


கிரி. தீவிர ரஜினி ரசிகர். எந்த விஷயத்தைப் பத்தி எழுதினாலும் ஒரு தேர்ந்த நிருபருக்கு உண்டான மெனக்கெடல் இவர் எழுத்துல பாக்கலாம்.


பூக்கடைக்கு விளம்பரம் தேவையா? பதிவு தலைப்பைப் போலவே இவர் எழுத்தும் தெள்ளிய நீரோடை மாதிரி. இப்ப சமீபமா அப்பப்ப கொஞ்சம் வெள்ளம் பெருக்கெடுக்குது.


வித்தியாசமான பேருக்காகவே படிக்க ஆரம்பிச்சேன். இவரோட விக்கிரமாதித்தன் கதைகள் அட்டகாசம். என்னவோ இப்பல்லாம் இவர் அதிகமா எழுதறதில்லை. இதுக்கப்பறமாவது எழுத ஆரம்பிங்க..


ரவிசங்கர். இவரும் ஒரு வித்தியாசமான பதிவர். தமிழ் / ஆங்கில ஹைக்கூக்கள் எழுதுவது மற்றும் படித்தவைகளை நல்ல அறிமுகம் செய்து வைப்பார். சமீபத்துல ராணி, தினத்தந்தி மாதிரி பத்திரிக்கைகளைப் பத்தி ஒரு நினைவோடை எழுதியது என்னை ரொம்பக் கவர்ந்தது.

சொல்லப் போனா எல்லாப் பதிவர்களும் வித்தியாசமான சிந்தனைகளோட வித விதமா எழுதறாங்க. எல்லாமே இண்டரெஸ்டிங்காத்தான் இருக்கு. இருந்தாலும் விருது விதிப்படி 4 பேருக்கு குடுத்து சந்தோஷப்பட்டுக்கணும். மனசுல டக்குனு தோணுன நாலு பேருக்கு இந்த விருதை பாஸ் செய்யறதுல ரொம்பவே சந்தோஷம்.

அண்ணாச்சிகளா.... இந்தத் தம்பி குடுக்கறதை வாங்கிக்கோங்க. அப்பிடியே நீங்களும் பாஸ் பண்ணி விடுங்க.

Wednesday, July 15, 2009

இப்ப என்னதான் பண்றது?


இந்த இடுகை எழுதின நேரமே சரியில்லை போல...

முதல்ல யாரையெல்லாம் வம்புக்கு இழுக்கலாம்னு ஒரு லிஸ்ட் போட்டா, நமக்குன்னு வந்து மெனக்கெட்டு பின்னூட்டம் போடறவங்க நாலு பேரு... அவங்களுக்கும் கரச்சலைக் குடுத்தா எப்பிடின்னு அந்த லிஸ்டைத் எடுத்துட்டேன்.

யாருக்காவது எதிர்பதிவு எழுதலாம்னா முழுசா படிக்கக் கூட விடாம நாம படிச்சுக்கிட்டிருக்கும்போதே பிடுங்கி இடுகையைக் கிழிச்சுப் போட்டுடறாங்க.... சரின்னு ரீடர்ல ஓடிப் போய்ப் பாத்தா ரீடர்ல படம் தெரியறதில்ல... என்ன சொல்லியிருப்பாங்கன்னு யோசிக்கறதுக்குள்ள டைம் ஆயிடுது..

அட.. பின்னூட்டத்துக்காவது எதாவது எடக்கு மடக்கா பதில் சொல்லலாம்னா எல்லா பின்னூட்டமும் டிலீட் பண்ணி வெச்சுருக்காங்க...

ஒவ்வொரு ப்ளாகாப் போய் அவங்க எழுதினதுல எதாவது நுண்ணரசியல் கண்டுபிடிச்சு சாம்பிராணி போடலாம்னா, இடுகை எழுதி முடிச்சவுடனே அதையும் அவங்களே அனானி பேர்ல போட்டுக்கறாங்க....

நம்மளோட அல்லது நண்பர்களோட பழைய பதிவுகள்லயே எதையாவது புடிச்சு எப்பிடியாவது சிண்டு முடியலாம்னு முயற்சி பண்ணினா.... கற்பனை பயங்கரமா ஓடி மொத்த ப்ளாக்கர் சைட்டையே தூக்கணும் போல ஆயிடுமோன்னு தோணுது.

எங்கிட்ட ஈ-மெய்ல் பேக்கப்பும் எதுவும் இல்லை....

சரி.. நமக்கு நாமளே எதிர்பதிவு போட்டுக்கலாம்னு உக்காந்தா இடுகை ரொம்ப ஆபாசமா வருது... தலைப்பு எழுதறதுக்குள்ளயே எரிச்சலாகி எஸ்கேப்....

இப்ப என்னதான் பண்றது?

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது....

Saturday, July 11, 2009

கலைநகரம் "லூசெர்ன்"



லூசெர்ன். ஸ்விஸ்சோட முக்கிய நகரங்கள்ல ஒண்ணு. கலைகளுக்குன்னே நேந்து விட்ட ஊர். ஓவியத்துறையில் "க்யூபிஸ"த்தை அறிமுகப்படுத்திய 'பாப்லோ பிகாஸோ' வாழ்ந்த ஊர். போன ஞாயிற்றுக்கிழமை லூசெர்னுக்கும்,அதுக்குப் பக்கத்துல இருக்கற 'பிலாடுஸ்' மலைக்கும் நண்பர்களோட (பின்ன... கேமரா இல்லாமயா?) பயணம்.

ஜெனீவால இருந்து 3 மணி நேரம் லூசெர்ன். போய் சேரும்போதே 11 மணி. உடனேயே பிலாடுஸ்க்கு போக டிக்கட் வாங்கிட்டு இன்னொரு பிளாட்ஃபாரத்துல இன்னொரு குட்டி ரயில். பிலாடுஸ்க்கு போய் வரதே ஒரு தனி அனுபவம். லூசெர்ன்ல இருந்து 'அல்ப்னாச்ஸ்டெட்'க்கு ரயில்ல 20 நிமிஷம். அங்கிருந்து உலகின் மிகவும் சாய்வான பாதையில் (48% சாய்வு) போற பல்சக்கர வின்ச் ரயில் 40 நிமிஷம் பிலாடுஸ் மலை உச்சிக்கு. திரும்ப வரும்போது ஒரு கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கிட்டு (15 நிமிஷம்)அங்கிருந்து சின்னச் சின்ன கேபிள் கார்ல (25 நிமிஷம்) கீழ 'க்ரியன்ஸ்' வந்து பஸ் புடிச்சு (15 நிமிஷம்) லூசெர்ன். அட்டகாசமான பயணம். அதுவும் அந்த வின்ச் ரயில் கிட்டத்தட்ட செங்குத்தா போற மாதிரி இருக்கு. 3-4 ரயிலுக ஒண்ணு பின்னால ஒண்ணு வரிசையா ஏறறது அற்புத காட்சி. ஒத்தை ரயில் பாதைதான். அதனால நடுவுல ஒரு இடத்துல மேல போற ரயில் எல்லாம் ஒதுங்கி நிக்குது. நம்ம ரயிலுக்கு முன்னால பாத்தா பாதையே இல்லை. தண்டவாளம் முடிஞ்சு மொட்டையா இருக்கு. கொஞ்சம் முன்னால பாத்தா ஒரு சின்ன ப்ளாட்ஃபாரத்து மேல ரெண்டு தணடவாளத் துண்டுக இருக்கு. கீழ இறங்கற ரயிலுக இறங்கினதும், அந்த ப்ளாட்ஃபாரம் அப்பிடியே வலது பக்கம் நகர, நம்ம ரயில் பாதையும் முன்னால இருக்கற பாதையும் இணையுது. அப்பறம் மேல போற ரயிலுக எல்லாம் மெள்ள க்ராஸ் பண்ணி ஏறுது. என்னா டெக்னாலஜி.... நடுவுல மலைல குடைஞ்சு வெச்சுருக்கற குகைகள் வழியா போறது... சான்ஸே இல்ல...





ஒரு வழியா மேல போய் சேந்தா கொஞ்சம் ஏமாற்றந்தான். திடீர்னு க்ளைமேட் மாறி ஒரே மேக மூட்டம். கீழ பாத்தா ஒரே மேகமா இருக்கு. ஒண்ணும் தெரியல.லேசா தூரல் வேற. மழை பிச்சுக்கிட்டு ஊத்தப் போற மாதிரி ஆயிடுச்சு. ஓரமா நின்னு காஃபி குடிச்சுட்டு இருக்கும்போடு ந்ம்மளைச் சுத்தி கூட்டமா அல்பைன் காக்கா (alpine crow). கையில இருந்து புடுங்கியே தின்னுடும் போல. கொஞ்சம் பிச்சு தூக்கிப் போட்டா அந்தரத்துலயே கேட்ச் புடிச்சுக்கிட்டு பறக்குதுக. மூணு பேர் அங்க ஸ்விஸ்ஸோட தேசிய இசைக்கருவியான அல்ப்ஹார்ன் (alphorn)வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க.



கொஞ்சம் தூரல் நின்னதும் மேல ஏறினோம். மலை உச்சியை 360 டிகிரி சுத்திப் பாக்கறதுக்கு குகைகளும் நடைபாதையும் போட்டிருக்காங்க. அட்டா... மேல இருந்து காட்சிகளைப் பாக்கறதுக்கு ரெண்டு கண்ணு போதாது. அதுவும் குற்றாலம் மாதிரி மெல்லிய சாரலோட... அங்கியே எதாவது ஒரு குகைக்குள்ளயே உக்காந்துடலாமான்னு தோணுச்சு. அதுவும் கீழ ஒரு மலை உச்சில ஒரு சர்ச். என்ன ஒரு ரம்மியமான் சூழல் !! ம்ம்ம்.. ஸ்விஸ் மக்கள் குடுத்து வெச்ச்வங்க. ஒரு ரவுண்டு சுத்தி வந்து மேல உச்சிக்குப் போனா அங்க ஏதோ பீடம் மாதிரி இருக்கு. ஏதாவது வானிலை ஆராய்ச்சிக்குன்னு நினைக்கிறேன். அதுல பூரா வந்தவங்க அவங்கவங்க கைவண்னத்தைக் காமிச்சுருந்தாங்க. உலகத்துல எல்லாப் பகுதிகள்ல இருந்தும் மக்கள் வந்து பேரையோ இல்ல வழக்கம் போல "ஐ லவ் ..."னோ எழுதி வெச்சுருக்காங்க. நாங்களும் பூரா தேடிபார்த்தோம்... தமிழ்ல எதுவுமே இல்லை. அடடா... இது சாமி குத்தமாயிடுமேன்னு சின்னதா ஒரு வெண்பா எழுதலாம்னு பாத்தா அப்பன்னு கற்பனைக்குதிரை எங்கியோ மேயப்போயிடுச்சு. சும்மா எதையோ கிறுக்கிட்டு வந்தோம்.



கேபிள் பஸ்ல பாதி மலை இறங்கி கேபிள் காருக்கு மாறற இடத்துல ஒரு கயிறு விளையாட்டு பார்க் (Rope Park) இருக்கு. 25 ஃப்ரான்க் கட்டினா இடுப்பு பாதுகாப்பு பெல்ட், ஹெல்மெட், க்ளவுஸ் தறாங்க. எல்லாம் போட்டுக்கிட்ட பிறகு கம்பிகள்ல கொக்கியை எப்பிடி மாட்றது, எப்பிடி சின்ன உருளை உதவியோட தொங்கிக்கிட்டே போறதுன்னு ஒரு சின்ன ட்ரெய்னிங் செஷன். அப்பறம் நமக்கு நாமே திட்டம்தான். முதல் ரெண்டு விளையாட்டுக கொஞ்சம் பயமா இருந்தாலும் கழைக்கூத்தாடி மாதிரி கம்பி மேல நடந்து அந்தப்பக்கம் போனதும் பயம் போயிடுச்சு. அப்பறம் தொங்கிகிட்டே சர்ர்ர்ர்னு போனது ஜாலியா இருந்தது. அதுக்குப் பிறகு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி ஆகி, 50 அடி உசர கம்பத்துல செங்குத்தா இருக்கற ஏணில ஏறி ஒரு கொக்கியைப் புடிச்சு தொங்கி கீழ இறங்கினோம். மேல ஏறி போறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சு. கீழ இருந்து ட்ரெய்னர் 'கொக்கியைப் புடிச்சுக்கிடு ஜம்ப் பண்ணு'ங்கறான். இதோ பண்றேன் இதோ பண்றேன்னு 2 நிமிஷம் யோசிச்சிட்டுத்தான் குதிச்சேன். முதல் 10 அடி தடக்குனு இறங்கி அப்பறம் கொஞ்சம் மெள்ள இறங்குது. ஆனா அதுக்குள்ள நமக்குதான் டப்பா டான்ஸ் ஆடிடுச்சு.






இப்பிடி 1 மணி நேரத்துக்கு மேல விளையாடி முடிச்சுட்டு போதுண்டா சாமின்னு கேபிள் கார்ல உக்காந்து கீழ வந்தோம். பஸ்ஸைப் புடிச்சு ஸ்டேஷன் கிட்ட இறங்கினோம். பக்கத்துலயே 'ரோன்' நதி மேல ஒரு மரப்பாலம். அதுக்குப் பக்கத்துல 'நீர் கோபுரம்' (water tower). ஸ்விஸ்ல மிக அதிகமா போட்டோ எடுக்கப்படற இடம். அந்த பாலத்துக்கு உள்ள மேல இருக்கற முக்கோண ஃப்ரேம்கள்ல ஸ்விஸ் வரலாறு ஓவியங்கள். கிட்டத்தட்ட 400 ஓவியங்கள். பிறகு அங்கிருந்து அடுத்த புகழ் பெற்ற 'சாகும் சிங்கம்' (The Dying Lion) பூங்காவுக்குப் போனோம். ஃப்ரான்ஸ் - ஸ்விஸ் சண்டைல இறந்து போன ஸ்விஸ் வீரர்கள் நினைவுச் சின்னம். ஒரு பெரிய சிங்கம் (ஸ்விஸ் தேசிய சின்னம்) முதுகுல பாஞ்ச ஈட்டியோட சாகற தருவாய்ல இருக்கற மாதிரியான ஒரு புடைப்பு சிற்பம். அருமையான் சூழல் அற்புதமான சிற்பக் கலை. முன்னால இருக்கற சின்ன குளத்துல காசை எறியறாங்க. இந்த பழக்கம் எப்பிடி உலகம் முழுக்க பொதுவா இருக்குன்னு ஆச்சரியமா இருக்கு.


அதுக்குள்ள நல்ல பசி. போகும்போதே 'காஞ்சி' ன்னு ஒரு ஹோட்டலை பாத்தோம். போய் சாம்பார் ரசத்தோட சாப்பாடு. சுமாரா இருந்துது. அப்பறம் திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து 8 மணிக்கு ட்ரெய்னைப் புடிச்சு 11 மணிக்கு ஜெனீவா வந்து சேந்தோம். லூசெர்ன்ல மட்டுமே பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய. சில வருஷங்களுக்கு முன்னால போனபோது பிகாசோ வீட்டுல மட்டும் 4 மணி நேரம் இருந்தேன். இன்னொரு முறை சாவகாசமா போய் மத்த இடங்களைப் பார்க்கணும். பாக்கலாம்...


மலை மேல இருந்து துண்டு துண்டா 3 படம் எடுத்து ஒரே பனோரமா ஷாட்டா 'ஸ்டிட்ச்' பண்ண படம் இது.... லைட்டிங் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்...

Monday, July 6, 2009

இங்கிட்டு மஹேஷ்.... அங்கிட்டு ?



....நீங்கதான்..... நீங்களேதான். பின்ன என்னங்க? நீங்க இல்லாம இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? என்னதான் மொக்கை போட்டாலும், கவிதை (!!) வடிச்சு இம்சை பண்ணினாலும், வெண்பா படைச்சு துன்புறுத்தினாலும், சிறுகதை எழுதி சிலிர்க்க வெச்சாலும், நெடுங்கதை எழுதி நடுங்க வெச்சாலும், போட்டிக் கதை அனுப்பி பயமுறுத்தினாலும், அறிவியல் புனைவு படைச்சு அலட்டிக்கிட்டாலும், பயணக் கட்டுரைகள் போட்டு பந்தா பண்ணினாலும், கிச்சடி பண்ணி உங்களை பச்சிடி பண்ணினாலும், கடவுளைப் பத்தி எழுதி கல்லா கட்டுனாலும், கடவுள் இருக்கான்னு கேள்வி கேட்டாலும், எதிர்பதிவுல எசப்பாட்டு பாடினாலும், துணைப்பதிவுல திகைக்க வெச்சாலும், சொந்த ஊரைப்பத்தி கொஞ்சம் பெருமை பேசினாலும், பேட்டி எடுத்தாலும், சினிமா விமர்சனம் பண்ணினாலும், படிச்ச புத்தகங்களை உங்களுக்கு பிரிச்சுக் காட்டினாலும், சுயவிமர்சனம் பண்ணிக்கிட்டாலும், சின்ன வயசு அனுபவங்களை அசை போட்டாலும், கற்பனைல பதிவர் சந்திப்புகள் நடத்தினாலும், பகிரங்கக் கடிதம் எழுதினாலும், இவ்வளவு ஏன்..... வலைப்பூவுக்கு "துக்ளக்"னு பேர் வெச்சாக் கூட.... இப்பிடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும், பல வேலைகளுக்கு நடுவுலயும் வந்து பொறுமையாப் படிச்சுட்டு 'அருமை தல.... கலக்கல்.... ஜூப்பரு... அசத்தல்...' ன்னெல்லாம் வஞ்சனையில்லாம தாராளமா கமெண்ட் போடற உங்களை மாதிரி பதிவர்கள், வாசகர்கள் (சரி...சரி... மேல... மேல...) மற்றும் நண்பர்களோட ஊக்குவிப்பு இல்லைன்னா இப்ப நானெல்லாம் இதை 100வது பதிவுன்னு போட முடியுமா?


யம்மாடி.... மூச்சு வாங்குது !! அண்ணன்களே... தம்பிகளே.... அக்காக்களே... தங்கைகளே... ஆன்றோர்களே.. சான்றோர்களே.. எல்லாருக்கும் நன்றிகள் பல.



Thursday, July 2, 2009

என் பாக்களா? வெண்பாக்களா?

நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் வெண்பா முயற்சி. வழக்கம்போல நண்பர் திரு.அகரம்.அமுதாவின் உதவியுடன். ஈற்றடிகளை அவர் கொடுக்க, பாக்களை நான் இயற்ற (சரி.. சரி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்) சிலவற்றிற்கு அவர் தளை தட்டும் இடங்களை சரி செய்து கொடுக்க, அவற்றை நான் இங்கு படைக்க, அவற்றை நீங்கள் படிக்க..... அவரது/உங்களது பொறுமைக்கும், நன்றிகள் பல.


உலகம் சூடாகுதல்



மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்

கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்

கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட

வெப்பம் உயரும் உலகு !



கூட்டணி


கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்

சேருவோர் யாரெனக் கேட்டேன் - பெருமைமிகு

நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உன்றன்

கூட்டணி யாருடனோ கூறு !



ஊருக்கு உழைத்தல்


கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்

துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்

(ச்)சேரிலே இருந்தபடி நாட்டாமை செய்வதினும்

ஊருக்(கு) உழைத்தல் உயர்வு.



டாஸ்மாக்கும் படிப்பும்


டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு

ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு

வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு

தேங்கியே போனதே படிப்பு.

சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?

என்னோட முதல் முயற்சி உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம்... மறுபடி இங்க ஒரு தடவை ஞாபகப்படுத்திடறேன்.

புத்திரசோகம் :(


நான் வேலை தேடி டெல்லியில் என் தமக்கையின் வீட்டுக்குச் சென்றிருந்த சமயம். அவனுக்கு அப்போது 7 வயது இருக்கும். அவனுடைய தந்தையின் அலுவலகத்திலேயே எனக்கும் ஒரு வேலை கிடைத்தது. போய் வர சௌகரியமாக இருக்குமென்று அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தேன். பெரும்பாலான நாட்கள் இரவு உணவு அவர்கள் வீட்டில்தான். அவனும் அவன் அண்ணனும் (11 வயது) பிகுந்த பாசத்துடன் பழகினார்கள். வார இறுதிகளின் மாலைப்பொழுதுகளில் அவர்களோடுதான் விளையாட்டு. சில நாட்கள் சினிமா, சர்க்கஸ், பார்க் என பொழுது போகும்.


என்னைப் பார்த்ததும் ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்வான். பிறகு என் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு மரம் ஏறுவது போல் உடம்பின் மீது ஏறி தலையில் அமர்ந்து கொள்வான். அவனுக்கு அது ஒரு பிடித்தமான விளையாட்டு. சிரிக்க சிரிக்க பேசுவான். அவன் அண்ணன் நன்றாக கீ போர்ட் வாசிப்பான். தபேலாவும் கற்றுக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியான குடும்பம். எந்த விதமான உள்/வெளித் தொந்திரவுகளும் இல்லாத அழகான குடும்பம். பெரியவன் பெங்களூரில் இஞ்சினியரிங் முடித்து, பிறகு அமெரிக்காவில் எம்.எஸ். முடித்து அங்கேயே நல்ல வேலையில். சின்னவனுக்கு சிறுவயது முதலே ட்ரம்ஸ் போன்ற கருவிகளில் ஆர்வம் அதிகம். ப்ளஸ்2விற்கு பிறகு மும்பையில் ஒரு பெரிய கல்லூரியில் சவுண்ட் இஞ்சினியரிங் படிப்பில் சேர்ந்து போன மாதம் 3 வருட படிப்பையும் முடித்து விட்டான்.


போன வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசியில் வந்த அதிர்ச்சி செய்தி. சின்னவன் மும்பையில் தான் வசித்து வந்த அபார்ட்மெண்ட்டில் 5 வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டானென்று. ஏன் எதற்கு எப்படி என்பதெல்லாம் இந்த நிமிடம் வரை புரியாத புதிர். வீட்டாரைத் தேற்ற வார்த்தைகளில்லை. 4 நாட்கள் அழுது பின் வற்றிய கண்களுடன் அந்த அழகான குடும்பம் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. என் மனவேதனை சொல்லி மாளாது.


அந்த 20 வயது இளைஞனது ஆன்மா சாந்தியடையவும், அந்த குடும்பத்தார் இந்த துயரிலிருந்து மீண்டு வரவும் நம்மை விட உயர்நததொரு சக்தியைப் பிரார்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.