Monday, October 11, 2010

பா.கே.ப.இ

வேற என்ன? அதேதான். சிங்கைல ரெண்டாம் நாளே கொஞ்சம் காத்தாடினாலும், மூணாம் நாள் போய் பார்த்தோம். நிறைய எழுதணும்தான். டெக்னிகலா சுபீரியர் படம். ஆனா, க்ரிடிகலா எழுதினா வயித்தெரிச்சல் கோஷ்டிங்கறாங்க. சிலரெல்லாம் விமர்சனம் எழுதியிருக்கவே வேண்டாம்னு வேற. அந்தப் படத்தை சொன்னாங்களா... இந்தப் படத்தை மட்டும் சொல்றாங்களேன்னு கேள்விகள். நாளைக்கு கல்மாடி மேல விசாரணை வெச்சா, அவரும் 'ராசாவைக் கேட்டிங்களா? லாலுவைக் கேட்டிங்களா? என்னை மட்டும் கேக்கறீங்களே'ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம். என்னுடைய பார்வையில்:

1. இவ்வளவு கோடி பணத்தைப் போட்டு மீண்டும் ஒரு காதல் கதைன்னு எடுக்காம, இன்னும் தெம்பாவே பண்ணியிருக்கலாம்.
2. 'ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ்' - கான்செப்ட் ரொம்பவே டைல்யூட் ஆயிடுச்சு.
3. ஒரு ப்ரோடோடைப், மாஸ் ப்ரொடக்சன்க்கு போகணும்னா ஒரு க்ரிடிகல் வால்யூம் வேணும். அது எதுவுமே இல்லாம செல் மாதிரி இரட்டிப்பாகி நூற்றுக்கணக்கா பல்கிப் பெருகறது.....ஹ்ம்ம்ம்...
4. இந்த மாதிரி ப்ராஜெக்ட் எல்லாம் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஃபண்ட் பண்ணி நடக்கறது. ஆனா, என்னமோ தன் சொந்த சொத்து மாதிரி தனக்கு எதிரியா நினைக்கிற ரோபோவை வெட்டி(!!!) பெருங்குடி குப்பை மேட்டுல போடறது...ம்ஹூம்ம்ம்...

சுஜாதா இருந்திருந்தார்னா இன்னும் பெட்டராயிருந்திருக்குமோன்னு சில கருத்துகள். ஆனா அவர் இருந்தபோது, அவரைப் பக்கத்துல வெச்சுக்கிட்டே, அவரே எழுதின "விக்ரம்" கதையை நாறடிச்சாங்க. அந்தப் படத்துக்கு கமல் வேற. சரி.... போதும்.

"காதல் அணுக்கள்" பாடல். ஒரு சந்தேகம். "செந்தேனில் வஸாபி...." வஸாபி ஒரு ஜப்பானிய கிழங்கு. மொளகா மாதிரி காரம். அதைத் தேனில் ஊறப்போட்டா ரெண்டுமே சகிக்குமான்னு தெரியல. ஒரு வேளை "செந்தேன்ன வஸாபி..."யா இருக்குமோ? அம்மிணி கண்ணு அவ்வளவு ஷார்ப்பா?

நண்பர் ஃபேஸ்புக்ல எழுதியிருந்தார். "முதல் டெஸ்ட் மேட்ச் கடைசி ஓவர்கள்ல விவிஎஸ்ஸை கொஞ்சம் 'கன்னிங் லிப் ரீடிங்' பண்ணினேன். ஓஜாவை திட்ற மாதிரி இருந்தது"ன்னு. இப்பிடி ஒரு லிப் ரீடிங் தேவையான்னு கமெண்ட். அதுக்கு அவர் சொன்ன பதில் டாப். "அவனவன் இதழ்ல கதையே எழுதறான். படிக்கலைன்னா கோச்சுக்க மாட்டானா?". நன்றி ஸ்ரீஜி.

காமன்வெல்த் விளையாட்டு. அந்த ஊழல் சந்தி சிரிச்சாச்சு. 70000 கோடியாம். எத்தனை சைபர்னு எண்ணும்போதே கொட்டாவி வருது. அட... வீட்டுக்கு கட்டிக்கிட்டு போங்கப்பா. அதையெல்லாம் நாங்க ஒண்ணுமே சொல்ல முடியாது; வெறுமனே வேடிக்கை பாத்துட்டு, பஸ்லயும், ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் பேசி பொழுது போக்கிப்போம். போட்ட பட்ஜெட்ல உள்ளூர் விளையாட்டு வீரர்களையும் கொஞ்சம் கவனிச்சு நல்ல பயிற்சி குடுத்திருக்கலாமே. குமுதம்களும், விகடன்களும் வசதியில்லாத எத்தனையோ விளையாட்டு வீரர்களைப் பத்தி எழுதியிருக்காங்க. அந்த அபாக்கியவான்களும் கண்ல தண்ணி வர கெஞ்சியிருக்காங்க. அவங்கள்லாம் கண்லயே படலயா? இவ்வளவு ஊழல் பண்ணியாச்சு. பயிற்சின்னு தனியா ஒரு பட்ஜெட் போட்டு அதுலயும் கொஞ்சம் ஏப்பம் விட்டிருந்தாலும் மிச்சமாவது அந்த பாவப்பட்ட ஜீவன்களுக்கு போயிருக்கும். என்ன செய்ய? மேரா பாரத் மஹான் !!

கொசுறு : ஃபேஸ்புக்கை "முகநூல்"னு தமிழ்ப்'படு'த்தறாங்க. அப்பிடிப் பாத்தா ட்விட்டரை "கீச்சான்"ன்னு மொழிபெயர்க்கலாமே. ட்விட்டை "கீச்"சுன்னும் ட்விட்டுகிறேன்கறதை "கீச்சுகிறேன்"ன்னும் சொல்லலாமே. சில அடிப்படை விதிகளின்படி பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. அப்படியேதான் பாவிக்கணும்னு சொல்றாங்க. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகில் இதெல்லாம் ப்ராண்ட் பெயர்கள். அப்படியே இருக்கட்டுமே. (சிங்கையில் நமது பதிவர்கள் ப்ராண்டுக்கு "பொரிம்பு" என்ற அழகான பதத்தை உபயோகிக்கிறார்கள்)

Sunday, July 25, 2010

பா.கே.ப.இ.




போனவார சென்னைப் பயணத்தின்போது.........

பார்த்தது : போக்குவரத்து நெசவாளர்கள் (traffic weavers)னு கேள்விப்பட்டிருக்கேன். சென்னை இரண்டு சக்கர வாகன ஓட்டிகளோட சாகசங்களை நேர்ல பாத்தபோதுதான் புரிஞ்சது. ஊடுபாவு மாதிரி இங்க இருந்து அங்க... அங்க இருந்து இங்கன்னு... கிடைக்கிற சின்னச் சின்ன இடைவெளிகள்ல புகுந்து புகுந்து ஓட்டறதைப் பாக்கவே பயமா இருக்கு. அதுவும் முன்னால ஒரு பையன், பின்னால மனைவி (கைல குழந்தை) நடுவுல ஒரு பொண்ணுன்னு போறதைப் பாக்கும்போது.... நினைக்க சங்கடமா இருந்தாலும் 'நம்ம வண்டில வந்து இடிச்சு விழாம இருக்கணுமே; அனாவசிய சிக்கல்ல சிக்காம இருக்கணுமே'ங்கற சுயநல எண்ணம் வராம இல்லை. அலைபேசக் கூடாது, தலைக்கவசம் போடணும்னு எல்லாம் கரடியாக் கத்தறாங்க. (யாரும் கேக்கறதில்லைங்கறது வேற விஷயம்) இந்தமாதிரி ஏகப்பட்ட பேர் உக்காந்து போகக்கூடாதுன்னு ஒரு சட்டம் கிடையாதா?

கேட்டது : படம், எழுதியது, பாடியது.... எதுவும் தெரியல... ஆனா பாடல் வரிகள் நல்லா இருந்தது...

ஒரு கல்... ஒரு கண்ணாடி..
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்...

ஒரு சொல்... சில மௌனங்கள்...
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்....

நல்லா இருக்குல்ல?

படித்தது : மியான்மரின் இன்றைய நிலை. ராணுவ அதிகாரிகள், உள்ளூர் தாதாக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - இந்த முக்கோண அமைப்பு செய்யும் அட்டுழியமும், செய்யும் ஊழலும், அள்ளும் பணமும்.... அடேங்கப்பா. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மேலும் மேலும் அளவிட முடியாத செல்வத்தை திரட்டுவதும் நாட்டிலுள்ள மீதி 99% கடும் ஏழ்மையில் உழல்வதும்.... படிப்பவர் கண்ணில் ஒரு சொட்டு கன்ணீர் வரவில்லையென்றால்... ஒருவேளை இடிஅமீனுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம்.

இடித்தது : குமுதத்தில் ஞானி. இந்திய ரூபாய்க்கு கிடைத்துள்ள சின்னம் பற்றி. இந்தியைத் திணிக்கிறார்களாம். எப்பேர்ப்பட்ட ஆளாய் இருந்தாலும் இந்த தமிழுக்கு குரல் கொடுக்கிறேன்னு எதற்காவது எப்போதாவது ஜல்லியடிக்கிறார்கள். ஆங்கில சின்ன எழுத்து "r" பயன்படுத்தியிருக்கலாமே என்று ஆலோசனை வேறு. புதிய சின்னத்துக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான யோசனைகள் வரப்பெற்று, பல நிலைகளில் பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளது. இவரும் அனுப்பியிருக்கலாமே.

Monday, June 14, 2010

ரத்தமும் தக்காளித் தண்ணியும்......

வடிவேல் காமெடி மாதிரிதான் இருக்கு. ஆனா வேதனை.......

1984 போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்து மேல போட்ட வழக்குல ஒரு வழியா 26 வருஷத்துக்கு அப்பறம் தீர்ப்பு வந்தாச்சு. அவ்வளவு பெரிய பேரிடர். அன்னிக்கு ராத்திரி மட்டுமே 2500 உயிரிழப்பு. அதுக்கு அப்பறமா இந்த 25 வருஷத்துல சாவுகள், உடல் குறைபாடுகள், பிறவிக் குறைபாடுகள், குடிதண்ணீர் மாசு, நிலத்தடி நீர் மாசுன்னு இன்னிக்கு வரைக்கும் அதோட தாக்கம் தொடர்ந்து இருக்கு. இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குமோ தெரியாது.

2010. மெக்சிகோ வளைகுடால ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனியோட ஆழ்கடல் எண்ணை கிணறு. 10000 அடி கீழ குழாய் உடைஞ்சு ஒரு நாளைக்கு 40000 பீப்பாய் அளவுக்கு எண்ணைக் கசிவு. 2 மாசம் ஆச்சு. ஆயிரக்கணக்கான சதுரமைல் பரப்புக்கு கடல் மேல எண்ணை மிதக்குது. தண்ணிப் பரப்புக்கு கீழ இருக்கறது இன்னும் கணக்குல எடுத்துக்கல. எடுத்துக்க முடியல. கண்க்கில்லாத கடல் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு. பரவிப் பரவி இப்ப கடற்கரைகளையும் தொட்டாச்சு. சுற்றுச் சூழல் பாதிப்பு, குடிதண்ணீர் பாதிப்பு, காத்துல எண்ணை வீச்சம், கடல்லயே பாதி எண்ணையை எரிக்கறதுல வர புகை, கடலோட மேல்பரப்பு சூடாகுதல்னு அழிவுகள் தொடருது. இன்னிக்கு வரைக்கும் உடைஞ்ச குழாயை முழுசா அடைக்க முடியல. எடுத்த சில முயற்சிகளும் தோல்வி. உலகமே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருக்கு.

முதல் கொஞ்ச நாளைக்கு நான் இல்லை அவன், நானும் இல்லை இவன்னு ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தாங்க. ஆனா இந்த எண்ணைக்கசிவுனால ஆன இழப்புகளுக்கு ஒவ்வொரு பைசாவையும் ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனி திருப்பியே ஆகணும்னு ஒபாமா கண்டிப்பா சொல்லிட்டாரு. பல பில்லியன் டாலர்கள். இதுல நீக்குப்போக்குக்கு இடமே இல்லைன்னு சொல்லிட்டாரு. நல்ல விஷயந்தான். இது மாதிரி அழிவுகளுக்கு காரணமானவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமா இருந்தாலும் விடவே கூடாது. முழுப் பொறுப்பையும் சுமந்தே தீரணும். ஒபாமான்னா சும்மாவா?

ஆனா அதே பெருந்தகையாளர் ஒபாமா போபால் விஷவாயு கசிவு இந்தியாவின் உள்நாட்டு ப்ரச்னைன்னு சொல்றாரு. எவ்வளவோ அழுத்தம் குடுத்து யூனியன் கார்பைடு முதலாளிகளுக்கு வெறும் 2500$ அபராதம், 2 வருஷம் சிறை, அதுலயும் அப்பீலுக்கு இடம் இருக்கு. சும்மா உலுலாயிக்கு. இதைப் பத்தி ஒபாமா வாயே திறக்கலியே. ஏன்னா எண்ணை கசிவு அமெரிக்காவுல. விஷவாயு கசிவு இந்தியாவுல. ரெண்டுமே பேரிடர்தான். பெரிய இழப்புகள்தான். மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா ஒபாமாவுக்கு.... ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு.

அமெரிக்காவுக்கு வந்தா அது ரத்தம். அதுவே இந்தியாவுக்கு வந்தா வெறும் தக்காளித்தண்ணி. ஹ்ம்ம்ம்ம்......

Saturday, May 22, 2010

க்ரீஸ்..... கிறீச்.... கிறீச்.....


அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தாச்சு. நாம எல்லாம் ஆஹா ஓஹோ அட்டகாசம்னு நினைச்சுக்கிட்டு இருக்கற ஐரொப்பிய யூனியன்ல இருக்கற க்ரீஸ் (Greece) நாட்டோட பொருளாதார இயந்திரம் இப்ப கிரீஸ் இல்லாம கிறீச்... கிறீச்சுன்னு கதறுது. நாரசமா இருக்கு சத்தம். என்னதான் ஆச்சு? சிம்பிளா சொன்னா வரவு எட்டணா செலவு பத்தணா. அதோட விளைவு. இது எல்லா நாட்டுலயும் நடக்கறதுதானே? நம்ம இந்திய பட்ஜெட்லயெல்லாம் சாதாரண துண்டா விழுகுது? ஈரோடு ஸ்பெஷல் ஜமுக்காளமே இல்ல விழுகுது. அங்க மட்டும் என்ன ஆச்சு? (போச்சுடா... எங்கயாவது பொருளாதார சரிவுன்னா இவன் ஆரம்பிச்சுடுவானேன்னு நீங்க முனகறது கேக்குது. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை... எழுதி உங்களை குழப்பியே ஆகணும்)

மொத காரணம் போன வருஷம் க்ரீஸ் நாட்டோட கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) யில் 13%க்கு மேல. ரொம்ப ஒண்ணும் அதிகமில்ல ஜென்டில்மென்... ஜஸ்ட் 400 பில்லியன் டாலர்கள் மட்டுந்தான். சரி அதனால? அதனால என்ன.... அதிக வட்டி, அதிக தவணை, இன்னும் அதிக கடன், அதிக அவநம்பிக்கை. க்ரெடிட் ரேட்டிங் குறைவு. அனுமானிச்சதை விட பட்ஜெட் பற்றாக்குறை ரெண்டு பங்கு. அவ்வளவுதான். யாரும் முதலீடு செய்ய தயாரில்லை. ஐரோப்பிய யூனியனுடைய தலையீடு, க்ரிஸ் எடுத்த செலவு கட்டுப்பாடு மற்றும் சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் முதலீட்டளர்கள் கிட்ட நம்பிக்கையை உண்டாக்கலை. கொஞ்சம் ஊதாரித்தனமான செலவுக் கொள்கைகள். உதாரணத்துக்கு, அரசு ஊழியர்கள் 40 வயசுலயே ஓய்வு பெறலாம். அவ்ஙளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க மனைவி அல்லது மணமாகாத பிள்ளைகள்/பெண்கள் இவங்க அந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வாங்கிக்கலாம். இன்னும் மத்த ஐரோப்பிய நாடுகள்ல இல்லாத அதிகப்படியான சலுகைகள். எப்பிடி சமாளிக்க முடியும்?

இப்ப சர்வதேச நிதியும், யூனியனும் சேர்ந்து பணத்தைக் கொட்டி மீட்கறோம்னு சொல்றாங்க. யூனியன்ல 15க்கு மேல நாடுகள் இருக்கு. "நான் இங்க ராப்பகலா உழைக்கிறேன். எவனோ அளவுக்கு அதிகமா செலவு பண்ணி போண்டியானதுக்கு என் நாடு ஏன் பணம் குடுத்து அந்த அழுகிப் போன கடன்களை வாங்கி வெச்சுக்கணும்? தலையெழுத்தா?"னு கேக்கறாங்க. நியாயந்தானே.

ஐரொப்பிய யூனியன்ல சேரறதுக்கு உண்டான தகுதிகளை காமிச்சு யூனியன் சேர்ந்த எல்லா நாடுகளும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில பல கட்டுப்பாடுகளையும் விதிகளையும் அனுசரிக்கணும். ஒவ்வொரு பட்ஜெட்லயும் இவ்வளவு உற்பத்தி, இவ்வளவு செலவு, இவ்வளவு முன்னேற்ற இலக்குன்னு காமிக்கணும். இந்த இலக்கு யூனியனோட மொத்த பட்ஜெட்டோட ஒத்துப் போகணும். இப்பிடியெல்லாம் இருந்தும் ஏன் இந்த மாதிரி சரிவுகள்?

ஐரொப்பிய யூனியனில் 27 நாடுகள் இப்ப இருந்தாலும் 16 நாடுகள்தான் "யூரோ"வுக்கு மாறியவை. இந்த 16 சேர்ந்தது Euro Zone. பொதுவான நிர்வாகம் ஒரு மையத்துல இருந்தாலும் , "யூரோ"வைப் பொறுத்தவரை, அது ஒரு கரன்ஸி அடிப்படையிலான யூனியன் (monetary union). அரசியல் அடிப்படையிலோ அல்லது முழுமையான பொருளாதார யூனியனோ அல்ல. பொருளாதார அடிப்படையில் சில கட்டுப்பெட்டியான நாடுகளும் உண்டு சில ஊதாரி நாடுகளும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முதிர்வடையாத கரன்ஸி யூரோ. உள்நாட்டு உற்பத்தி, செலவு வகைகள், சேமிப்பு வழிகள், பல்முனை வளர்ச்சி என்று எல்லா வகையிலும் வேறுபட்ட நாடுகள்.

இப்படியான ஒரு கூட்டமைப்பில், கரன்ஸி மட்டும் ஒன்றே என்ற நிலையில் போட்டித்தன்மையை (competitive edge) தக்கவைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமே. முன்பு இருந்த நிலையை விட ஏற்றுமதிகள் குறையலாம். உதாரணத்திற்கு, இத்தாலி தானியங்கி வாகன வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு. இருந்தாலும் யூரோ அடிப்படையில், ஜெர்மனி உற்பத்தி ஆகும் வாகனத்துடன் ஒப்பிடும்போது விலையில் போட்டித்தன்மை குறையும்போது, அந்த விலை வேறுபாடு கூட வாகனத்தை விற்பனையிடத்திற்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்துக் கட்டணத்தில் அடிபட்டுப் போகும் எனும்போது ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. கரன்ஸி ஒன்றாகும்போதிலிருந்தே, வருமான குறைபாடுகளை எதிர்பார்த்து செலவினங்களையும் மாற்றியமைப்பது கட்டாயம் என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அன்னியச் செலாவணி ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வேலை குறைவு, சுலபமான வியாபாரம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகள் இருக்கலாம், எப்படி சமாளிப்பது போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி வைத்தனர். போகப் போக சரியாகும் என்ற அனுமானங்களும் இருந்தன. இப்போது சர்வதேச நிதியமும், யூனியனும் சேர்ந்து க்ரீஸின் கடன்களை வாங்கி 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணத்தைக் கொட்டினாலும் மட்டும் உடனே எல்லாம் சரியாகி விடப் போவதில்லை. க்ரீஸ் தனது செலவினங்களை இறுக்கிப் பிடிக்க வேண்டும். மக்கள் அதிக கட்டுப்பாடுகள், வரிவிதிப்புகள், வங்கி கெடுபிடிகள் எல்லாம் இருக்கும். மக்களோட வாழ்க்கை முறையே மாறலாம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கும்.

க்ரீஸ்க்கு பின்னால் போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் என்று சரிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஸ்பெயினும் இத்தாலியும் கூட சமாளித்து விடும். ஆனால் போர்ச்சுகல் சவாலாக இருக்கும்.

இது இப்பிடியேதான் இருக்குமா? நிலையான வழி எதுவும் இல்லையா? க்ரீஸ்க்கு தனியான கரன்ஸி இருந்தா அதை மதிப்பு குறைச்சு போட்டித்தன்மையை கொண்டுவர முடியும். ஆனா யூரோவுல இருந்து வெளியில வர அரசியல் உறுதி வேணும். அது இப்போதைக்கு இன்னும் கடினமா இருக்கலாம் ஆனா நீண்டகால தீர்வு அதுவாத்தான் இருக்க முடியும்.

மக்கள் ஒப்புதலோடதான் யூரோவுக்கு வந்தோம்னு சொல்லலாம். ஆனா பின்னணி அரசியல் விளையாட்டுகள் ரொம்ப. கரன்ஸியை வெச்சுதான் இன்னிக்கு சர்வதேச அளவுல போட்டித்தன்மையை தக்க வெச்சுக்க முடியும். இல்லைன்னா அமெரிக்கா சைனா கிட்டப் போய் யுவான்-டாலர் மதிப்பை சரி பண்ணச் சொல்லி ப்ரஷர் குடுப்பாங்களா?

1999ல அர்ஜென்டினால இதே மாதிரி நிலைமை வந்து 3 வருஷம் ஆச்சு நிமிர்ந்து உட்கார. அப்ப பெசொவைத் தவிர இன்னொரு கரன்ஸியை உருவாக்கி உள்நாட்டு புழக்கத்துக்காக விட்டு, பெசோவை டாலருக்கு எதிரா குறைச்சு ஏற்றுமதியை அதிகரிச்சு, இறக்குமதிகளை தடை பண்ணி, வங்கிகள்ல இருந்த டாலரை எல்லாம் பெசோவா மாத்தின்னு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒருவழியா மேல வந்தது. பார்க்கலாம் க்ரீஸ் என்ன ஆகுதுன்னு. இப்போதைக்கு நம்ம நாட்டு பங்கு மார்க்கெட் ரொம்ப விழாம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.



Sunday, May 9, 2010

கிச்சடி 11.05.2010

"சொறா" படத்தைப் பாக்காமயே நிறையப் பேர் நிறைய எழுதியாச்சு. நான் ஒருத்தந்தான் பாக்கின்னு நினைக்கிறேன். அது ஒரு குறையா இருக்கலாமா? நம்ம நண்பர்கள் வட்டத்துல பேசும்போது கேட்டவை:

"கமல் ஒரே படத்துல் பத்து ரோல்ல நடிச்சாரு ; விசய் பத்து படத்துல ஒரே ரோல்ல நடிக்கிறாரு (!!) "

"நல்ல வேளை.... ஒவ்வொரு படத்துலயும் வேற வேற ஹீரொயின்க... இல்லாட்டா என்ன படம் பாத்துக்கிட்டுருக்கோம்னே தெரியாது"

"இது ஒருதடவை பாக்கறதுக்கு வேட்டைக்காரன் 100 தடவை பாக்கலாம்"

"அம்பது படம் ஆயிடுச்சா? சீக்கிரம் அரசியலுக்கு இழுத்துக்கிட்டு போங்கப்பா.... அங்கயாவது வேற மாதிரி நடிக்கிறாரான்னு பாக்கலாம்"

*****************************



சிங்கப்பூரின் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட "மரினா பே சேண்ஸ்" உல்லாச/சூதாட்ட நகரம் (சிலருக்கு நரகம்) திறந்தாச்சு. (அதுலயும் அந்த டி.என்.ஏ ஏணி மாதிரி நடைபாலம்... க்ளாஸ்... அது ஒரு ஆர்கிடெக்சுரல் மார்வல்!!) சூதாடறதுக்கு க்யூவுல நின்னு என்னவோ தலைவர் படம் ரிலீஸ் முதல் ஷோ பாக்கற மாதிரி திடுதிடுன்னு ஓடறாங்க மக்கள். யார் அதிர்ஷ்டம் எப்பிடியோ? திறந்து 3 வாரம் ஆச்சு. தினமும் ஏதாவது பிரச்னைக இருந்துக்கிட்டே இருக்கு போல. "கரண்ட் இல்ல ; ஏசி நின்னு போச்சு ; லிஃப்ட்ல மாட்டிக்கிட்டாங்க ; சிங்கப்பூர் இமேஜ் டேமேஜ்"ன்னு தினம் ஒரு புலம்பல். இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா.




*****************************

நண்பர் ஒருத்தர் சவுதில வேலை பாக்கறார். ஊருக்கு வந்துபோக 3 மாசம் முன்னாலயே லீவு வாங்கி, டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டு, கிளம்பறதுக்கு 2 நாள் முன்னால போய் ஆபீஸ்ல பாஸ்போர்ட் கேட்டிருக்காரு. பகீர் !!! பாஸ்போர்ட்டைக் காணோமாம் !! மறுநாளும் அகப்படல. நொந்து போய், கிளம்பற அன்னிக்கு கார்த்தால போய் நானே தேடிப் பாக்கறேன்னு சொல்லி தேடியிருக்காரு. இன்னொரு பகீர் !! டேபிள் ஆடுதுன்னு டேபிள் காலுக்கு முட்டுக் குடுக்கறதுக்காக ரெண்டு பாஸ்போர்ட்டுகளை வெச்சுருக்காங்க. எப்பிடிடா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கன்னு மனசுக்குள்ள வசவு பாடிட்டு, அடிச்சு புடிச்சு ஊர் வந்து சேந்தாச்சு. ஆனா அவங்க ரொம்ப சாதாரணமா "அதான் கிடைச்சுடுச்சுல்ல... கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்"னு விரட்டிட்டாங்களாம். மூளை தலைக்குள்ளதான் இருக்கா இல்லை முட்டில இருக்கான்னு புலம்பித் தள்ளிட்டாரு. ராட்சசன் உசுரு ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளி கிட்ட இருக்குங்கற மாதிரி, நம்ம உசுரு அந்த பாஸ்போர்ட். அதுவும் சவுதி மாதிரி நாட்டுல.... ம்ம்.... என்ன சொல்ல?

*****************************

ஓசில டிக்கட் கிடைச்சுதுன்னு "அயர்ன் மேன் 2" குடும்பத்தோட போனோம். காமிக் புக்கை விடவும் காமிக்கலா இருந்தது. படம் அமெரிக்காவுல ஹிட்டாம். என்னங்கடா உங்க ரசனை? டைட்டானிக், பொசைடான், ஐடி4, ஆர்மகெட்டான்ன்னு பிரமாண்ட படங்களை எடுத்த கை காயறதுக்குள்ள இது மாதிரி பேத்தல் படங்களும் எடுக்கறீங்க. அம்புட்டு பெருசா ஒரு வில்லனை டெவலப் பண்ணிட்டு பொசுக்குனு அவன் கதையை முடிச்சுட்டு, கதையை முடிக்க முடியாம.... போங்கப்பா. அடுத்த"அயர்ன் மேன்3" ஓசி டிக்கட் கிடைச்சா ....பாக்கலாம்......பாத்துட்டு இதே மாதிரி......

*****************************

Wednesday, April 28, 2010

ஆழ்கடல்... ஒற்றைப்படகு... உறுதியான மனம்

Solo Circumnavigation - உலகத்தை தன்னந்தனியாக ஒரு படகில் சுற்றி வருவது. இமயத்தின் உச்சியை அடைவது போல ஒரு உலக சாதனையாகக் கருதப்படும் இந்தப் பயணத்தை வெகு சிலரே முயற்சி செய்துள்ளனர். 15-ஆம் நூற்றாண்டில் மெகலனின் பயணத்தை ஒப்பிட்டு அதிலிருந்து சில விதிமுறைகளை வகுத்து இந்த "தனி உலகப்பயணம்" மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.

விதிகள் ரொம்பவே "சுலப"மானவை:
1. பூமியின் விட்டத்தில் இரண்டு நேரெதிர் இடங்களைக் கடக்க வேண்டும்.
2. பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை இவைகளை இரண்டு முறை கடக்க வேண்டும்.
3. குறைந்தது 40,000 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
4. பனாமா, சூயஸ் போன்ற பெருங்கால்வாய் வழிகளைத் தவிர்க்க வேண்டும். எனவே தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து போன்ற நாடுகளின் தென்முனைகளை சுற்றியே வர வேண்டும்.
5. பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து சேர வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு கடுமையான சாதனைப் பயணத்தை மேற்கொள்ள உடல்வலிமையை விட அதிகமான மனவலிமை தேவை. நமது இந்தியக் கடற்படையின் கமாண்டர் திலிப் டோண்டே சென்ற ஆகஸ்ட் 15 அன்று இந்த பயணத்தை மும்பையிலிருந்து துவக்கி கிட்டத்தட்ட 75% தூரத்தைக் கடந்து விட்டார். இந்த பயணத்திற்காகவே கோவாவில் உள்ள ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தால் "மாதெய்" என்ற கண்ணாடிநார் பாய்மரப்படகு (fibreglass sail) பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் விசேடமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்திய கடற்படை செய்துள்ளது. ஏறத்தாழ ஒரு வருட காலம் பிடிக்கும் இந்த பயணத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு சிறப்பு குழுவே அமைக்கப்பட்டிருக்கிறது.

சுவாரஸ்யாமான அவரது பயண அனுபவங்களை அவருடைய இந்த வலைப்பூவில் காணலாம். இந்திய விமானப்படையில் இருக்கும் என் அண்ணன் கமாண்டர் திலிப் டோண்டேவின் நண்பர் என்பது ஒரு பெருமையான செய்தி.



ஆகஸ்ட் 28, 2009



ஏப்ரல் 22, 2010


கொசுறு: இந்த செய்தியை ஒரு நண்பரிடம் மிகவும் சிலாகித்து சொன்னபோது, "அடப் போய்யா, நாட்டுல ஆயிரம் பிரச்னைக.... முக்காவாசி ஜனத்துக்கு கஞ்சிக்கு காசில்ல.... இவுங்க கடல்ல உலகத்தை சுத்தறாங்களாம்.... உருப்படியா எதாவது பண்ணச்சொல்லு" என்றார். ஒருவகையில் நியாயமான கேள்விதான் என்றாலும், சிக்கல்கள் தீர்ந்த பின்னரே சாதனை என்றிருந்தால் நாம் என்றுமே சாதனை புரிய முடியாது.

Monday, April 26, 2010

நான் என்றால் அது கவிதை !!


என் கவிதைகளைப் வாசித்ததும்
உன் கண்களில் வழியும் ரௌத்திரம்தான்
என் மகிழ்ச்சியின் இடுபொருளாகிறது,
காரணம் நானெனில் நொடிப்பொழுதில் மிதக்கிறேன்.

உனது கோபமோ அழகைக்கூட்டிச் செய்யப்பட்டது,
ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.
எனது மகிழ்ச்சியோ நறநறக்கும் உன் பற்களின் ஓசையில்
பிறந்து தொடரும் உனது சினத்தில் பல்கிப் பெருகுகிறது.
அந்தப்பல் வரிசையை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

எந்தக் கவிதையில் எந்த கருப்பொருளில் ஒளிந்திருக்கிறது
என் கவிதையின் ஜீவன் எனும் தேவரகசியங்களையெல்லாம்
நீதான் கற்றுத்தருகிறாய்.
உன் கோபங்கள் பசியாற்றுவதாய் ஒருபோதும் இருப்பதில்லை,
அதை மேலும் கிளறிக்கொண்டேயிருப்பதாயிருக்கின்றன.

நீ என் கவிதைகளின் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு ,
ஐ பி எல் போட்டி முடிவுகள் மீது ரசிகர்களுக்கிருக்கும்
எதிர்பார்ப்பை விடவும் அதிகமானது
என்பதை பெருமிதத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.

உன் சினம் அது என்னால், கவிதை எனில் அது நான் என்றிருக்க
நான் எண்ணத்தான் செய்கிறேன்.
ஆனால் நீ அதை சொல்லியே விடுகின்றாய் உன் பின்னூட்டத்தில்...

கவிதையின் முதல் வரிக்கு நீ சொல்வது,

'அய்யோ... அய்யோ... அய்யோ....'

உனக்கான எனது இரண்டாவது கவிதைக்கு நீ சொல்வது,

'முடியல.... முடியவே இல்ல....'


*****************************

கவிஞர் ஆதியின் விருப்பத்திற்கிணங்க நிகழ்ந்த கவிதை இது. இது அவருடைய இந்தக் கவிதைக்கு எதிர் கவிதையாக இருக்குமோ என்று நினைப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல.

@ ஆதி : ச்சாட்ல வந்து கவிதையா கேட்கிறீர் கவிதை? இந்த கவிதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

Wednesday, March 24, 2010

த்யானமும் வியாக்யானமும்


போன மாதம் பதிவர்கள் ஸ்வாமி ஓம்காரும் கேபிள்காரும் ... மன்னிக்க... கேபிள் சங்கரும் வந்திருந்தனர். வேலைப்பளு காரணமாக முதல் இரண்டு நாட்கள் தவிர சந்திக்க முடியவில்லை. பதிவர் சந்திப்புக்கும் செல்ல இயலாத நிலை. வந்த மறுநாள் வடபத்திரகாளியம்மன் கோவிலில் திரு.ஓம்காரின் "தினம் தினம் திருமந்திரம்" சொற்பொழிவுக்குப் போனதில் செவிக்கும் வயிற்றுக்கும் நிறையவே உணவு கிடைத்தது.

சொற்பொழிவின் முடிவில் கேள்வி நேரத்தின்போது "த்யானம் செய்வதன் மூலம் நாம் அடையும் பயன்கள் என்ன?" என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஸ்வாமி ஓம்கார் பதிலிறுக்கும்போது "பயன்கள் என்று எதுவும் சொல்ல முடியாது. அது ஒரு அனுபவம். அது தனிப்பட்ட முறையில் அவரவர் அனுபவத்தில் உணர வேண்டியது" என்று சொன்னார். அதை ஒட்டி நாமும் ஒரு இடுகை இடலாமே என்று கணநேரத்தில் தோன்றினாலும், இன்றுதான் அதை தட்டச்ச நேரம் கிடைத்தது.

பொறுப்பி : இந்த இடுகையிலுள்ள கருத்துகள் நான் படித்து, கேட்டு, உணர்ந்ததன் மூலமான சொந்தக் கருத்துக்களே.

***

அரசன் ஒருவனுக்கு திடீரென ஒருநாள் ஒரு கேள்வி எழுந்தது. அந்த ஊரிலிருந்த ஒரு ஆசிரமத்தில் உள்ள துறவிகள் என்ன செய்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்? தன்னை விட அதிகமாக மக்களால் மதிக்கப் படுவதற்கு என்ன காரணம்? இதை தெரிந்து கொண்டு வரலாம் என்று அங்கே சென்று தலைமை குருவை சந்தித்தான்.

"நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து இப்படி ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கொஞ்சம் விளக்க முடியுமா?

"தாராளமாக. என்னோடு வாருங்கள். இதோ படித்துறை. இங்கே நாங்களெல்லாம் குளிக்கிறோம். இதோ கற்கள். இங்கே துணிகளைத் துவைத்து அந்த மரங்களில் உலர்த்தி காய வைக்கிறோம். பிறகு அதோ அந்த சிறிய கூடத்தில் அமர்ந்து உண்கிறோம். இந்த மடத்தில் மக்களை சந்திக்கிறோம். அவ்வளவுதான்..."

மிகுந்த கோவத்துடன் கேட்டான். "என்னை கேலிக்குள்ளாக்குவது போல இருக்கிறதே? அதோ... அந்த தியான மண்டபத்தில் என்ன செய்கிறீர்கள்? அங்கேதானே விஷயமே இருக்கிறது...."

"அதுவா? நீ என்னிடம் கேட்டது நாங்கள் என்ன செய்கிறோம் என்பது. நாங்கள் செய்வதையெல்லாம்தான் உனக்கு எடுத்துச் சொன்னேன். அந்த தியான மண்டபத்தில் நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை. "

***

த்யானம் "செய்தல்" என்பதே சரியா? த்யானிப்பதே நாம் செய்து கொண்டிருக்கிறவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக விடுவதற்காகத்தான். தியானம் என்பதன் பொருள் "ஆழ்ந்து நோக்குதல்". மனம் அமைதியாவது ஒன்றுதான் நாம் தியானத்தில் இருப்பதன் மூலம் "அடைவது". ஆனால் மனத்தை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல. இன்றைய பரபரப்பான உலகில் ஒரே சமயத்தில் பல வேலைகளை (multi tasking) செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது தியானிப்பது என்பது கடினமான காரியமே. தியானத்தில் இருக்கலாம் என்று அமரும்போதுதான் ரேஷன் சர்க்கரை, மின்வெட்டு, தண்ணீர் வராதது, கொடுத்த கடன் எல்லாம் நினைவில் ஓடும். மனதை ஒருமுகப் படுத்தி எண்ணங்களே இல்லாமல் ஓயச் செய்வது என்பது எளிதில் கைகூடாத ஒரு கலை.

அதனால்தான் நம் முன்னோர்கள் ஏதோ ஒன்றில் மனதை நிறுத்தி அதனை ஆழ்ந்து கவனிப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும் என்று உணர்ந்தனர். உணர்த்தினர். அதற்கு பக்தி ஒரு சிறந்த வழி எனவும் வலியுறுத்தினர். கண்ணனோ கீதையில் கர்ம யோகத்தை வலியுறுத்தினான். ஏனெனில் பக்தியை வலியுறுத்துவது கூட ஒரு சாராருக்கு ஏதோ ஒன்றைத் திணிப்பது போல இருக்கலாம் என்பதாலும், உலக வாழ்க்கையில் செயல் (கர்மம்) இல்லாமல் இருக்க முடியாது என்பதால் செய்யும் செயலில் மனதை நிறுத்தி செயலையே தியானிப்பதன் மூலம் மனம் அமைதி பெறும் என்பது கண்ணனின் பார்வை.

(ஒரு இடைச்செருகல். கர்ம யோகத்தை சொல்லும்போது "செயலைச் செய்; பலனை எதிர்பாராதே" என்ற விளக்கம் பரவலாக இருக்கிறது. ஆனால் கீதையில் சொன்னது "செயலைச் செய்வதில் மட்டுமே நமக்கு choice உண்டு ; அதன் விளைவில் அல்ல ; எப்போதும்... ; எனவே விளைவில் பற்று இல்லாமல் இரு ; அதற்காக செயல் செய்யாதவனாகவும் இருக்காதே" என்பதே. அதனால்தான் செய்யும் செயலையே தியானித்து செய் என்கிறான் கண்ணன்)

என்றாலும் இப்படித்தான் தியானிக்க வேண்டும், இதுதான் சிறந்த வழி என்றெல்லாம் எதுவும் இல்லை. அவரவருக்கு தெரிந்த முறையில் ஒரு பொருளையோ, ஒரு கருத்தையோ பற்றி ஆழ்ந்து கவனிப்பது கூட ஒரு வகையில் தியானமே. நமக்குப் பிடித்த நடிகர், தலைவர், சினிமா, மலர், பாடல் , முதுகு வலி, கொசுக்கடி.... இப்படி எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஆழ்ந்து அனுபவிக்கும்பொழுது முடிவில் அது தன்னை - ஒரு உண்மையை, ஒரே உண்மையை - வெளிப்படுத்தும். அது ஒரு அனுபவம். ஆனந்த அனுபவம். ஒரு உணர்வு. ஒரு awareness. விவரிக்க வார்த்தைகளற்ற உணர்வு. பிறரிடம் விவரிக்க தோன்றக் கூட செய்யாத ஒரு உணர்வு. அந்த awarenessதான் மோட்சம், நிர்வாணம், சூன்யம், enlightenment, liberation என்று பல விதமான வார்த்தைகளால் சொல்லப்படுகிறது.

பக்தி யோகமோ, கர்ம யோகமோ, நாத யோகமோ, ஸ்புரண யோகமோ எதை வேண்டுமானாலும் - அதன் மையக்கருத்து அல்லது தன்மை மனத்தை அமைதிபடுத்துவது ஒன்றே என்று இருக்கிற வரையில் - பின்பற்றலாம். வழி எதுவாக இருந்தாலும் முடிவு ஒன்றுதான். அவரவர் சொந்த அனுபவத்தில் பெறவேண்டிய ஒன்றை யாரும் யாருக்கும் விளக்கவோ, விளங்க வைக்கவோ முடியாது.

அப்படி விளங்க முடியாத ஒன்றுக்காக எதற்காக மெனக்கெட வேண்டும்? விளங்காத புதிராகவே இருந்து விட்டுப் போகட்டுமே.... எனக்கு என்ன இழப்பு வந்து விடும்? மிகச்சரி. தியானத்தில் "அடைவது" என்று ஒன்றும் இல்லை என்பதால் "இழப்பு" என்றும் எதுவும் இல்லை. சரியா?

Sunday, February 21, 2010

கிச்சடி 08.03.2010


மன்னிக்கணும் மக்களே.... ரொம்ப நாளாச்சு வலைப்பக்கமா வந்து. "ஏன் இன்னும் எழுதல? என்னதான் வேலைன்னாலும் ஒரு இடுகை கூட எழுத முடியாதா என்ன? எப்ப அடுத்த இடுகை வரும்னு உங்க திண்ணைலயே குத்த வெச்சு உக்காந்து முட்டி வலிக்குது. சீக்கிரம்... சீக்கிரம்.... " இப்பிடியெல்லாம் தினமும் ஏகப்பட்ட கடுதாசி, மெயில், ஃபோன் வந்ததுன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க? ஒரு 'பிரபல' பதிவன் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பான்னு கவுண்டர் தட்டிக் குடுத்ததுனால போனாப் போகுதுன்னு விட்டுட்டு மறுபடி வந்தாச்சு. ம்ம்..ம்ம்.. மேல... மேல....

* * * * * * * * * * * * * * *

கொஞ்ச நாள் அசந்து மறந்து இருந்தா நாட்டுல என்னென்னமோ நடந்து போச்சு.

முதல்ல மகிழ்ச்சிகள் :

- கேபிளார் & பரிசலாரின் புத்தக வெளியீடுகள்
- கேபிளார் வழக்கம்போல தினம் 5000, 6000 ஹிட்டுனு போட்டு 8 லட்சம்
தாண்டிட்டார்
- நண்பர் அருமை அண்ணன் அப்துல்லா மூணு இடுகைகள் எழுதிட்டார்
- சிங்கை சிங்கம் "அறிவிலி ராஜேஷ்" இடுகைகளை கடுகு, ஜெ.மோ. போன்ற ஜாம்பவான்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்
- பல புதிய பதிவர்கள் வருகை

எல்லாருக்கும் ஊர்ல உலகத்துல இருக்கற எல்லா சாமி மற்றும் ஆசாமிகளோட ஆசிகளும் வாழ்த்துகளும். சும்மா வெச்சுக்கோங்க.....

சில அசௌகரியங்கள் :

- பழமையார் vs வினவு குரூப்
- தண்டோரா vs வினவு குரூப்
- பரிசலாருக்கு நேர்ந்த விபத்து

எல்லாரும் இப்ப பரம சௌக்கியம்.

* * * * * * * * * * * * * * *

கதவைத் தொறந்து வெச்சா காத்து வருமா? வரும் வரும். ஆனா கேமராவை ஆன் பண்ணி வெச்சா? என்னென்னமோ வந்துது.

"நித்தமும் ஆனந்தமே" சொன்னவர் வீட்டினுள்
சத்தமின்றி யோர்கருவி வைத்து - அத்தனையும்
அம்பலம் ஏற்றிட அயராது (உ)ழைத்திட்ட
பின்புலத் தாருக்கு நன்றி.

* * * * * * * * * * * * * * *

சமீபத்துலதான் "அபியும் நானும்" டிவில பாத்தேன். சில டயலாக்குகள் அற்புதம். குறிப்பா "உனக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கறது உன்னோட உரிமை மட்டுமில்லை; கடமையும் கூட"ன்னு பிரகாஷ்ராஜ் த்ரிஷா கிட்ட சொல்றது.... அருமை. ராதாமோகனுக்கு சுத்திப் போடணும்.

இன்னொரு படம் "The Shahshawnk Redemption". படத்தைப் பத்தியோ மார்கன் ஃப்ரீமன் நடிப்பைப் பத்தியோ, டைரக்சன், எடிட்டிங் பத்தியோ சொல்ல எனக்கு அவ்வளவு அறிவு இல்லை. வாய்ப்பு கிடைச்சா நீங்களே பாத்து அனுபவியுங்க.

நம்மாளு க்றிஸ்டஃப் வால்ட்ஸ் ஆஸ்கார் வாங்கிட்டாரு. Inglourious Bastards பத்தி நான் ரொம்ப சிலாகிச்சு எழுதும்போதே நினைச்சேன். இதெல்லாம் போய் ஊருக்குள்ள சொல்லுங்க "அண்ணன் நல்லவரு ; ம்ம்ம்ம்... வல்லவரு ; ஆஸ்காராலாஜி தெரிஞ்சவரு "ன்னு.

* * * * * * * * * * * * * * *

கீ போர்ட் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஆசையைப் பாத்து புல்லரிச்சுப் போன ஒரு நண்பர் "ஆஹா... அதுக்கென்ன... நானாச்சு"ன்னு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுட்டாரு. அடுத்த மாசம் "பில்ஹார்மோனிக்" ஆர்கெஸ்டிராவுல ஒரு சிம்ஃபனி பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன். "ஹங்கேரில அவுக கூப்டாக ; லண்டன்ல இவுக கூப்டாக ; ஆஸ்திரியாவுல அல்லாரும் கூப்டாக" அப்பிடின்னெல்லாம் நான் பீலா உடற ஆள் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆகவே, ஆன்றோர்களே சான்றோர்களே... கீ போர்ட் (அல்லது எதோ ஒண்ணு) கத்துக்க ஆசையிருந்தா உட்னே ஆரம்பிங்க. என்ன மாதிரி ஏப்ப சாப்பைகளே கத்துக்க முடியும்போது நீங்கள்லாம் ஓஹோ..... அப்பறம் நான் "தேவாரம்" கம்போஸ் பண்ண ஹங்கேரிக்கு கூட்டிக்கிட்டு போகலைன்னு வருத்தப் பட்டு பிரயோஜனம் இல்லை

* * * * * * * * * * * * * * *

Saturday, January 9, 2010

அவசர உதவிக்கு அமைச்சர்


"தலைவருக்கு இடது கை சுண்டு விரல் லேசா வீங்கியிருக்காமே..... 1/2 மணி நேரம் முன்னாடி கூட நல்லாத்தான் இருந்தாரு. என்னன்னு தெரியலயே? உடனேயே அப்போலோவுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஒரே படபடப்பா இருக்கே? என்னாச்சோ ஏதாச்சோ?..... எதாவது விஷயம் தெரிஞ்சுதாய்யா? அசிஸ்டெண்டுக்கு ஃபோன் போட்டுக் கேட்டுச் சொல்லேன்யா..... அடாடா... அடாடா.... வலின்னு சொல்லி 5 நிமிஷம் கழிச்சுத்தான் போயிருக்காரு... பாவம்... எப்பிடித் தவிச்சாரோ?...."

* * * * * * * * * * * * * * * * *

"என்னங்க இது அநியாயம்.... அம்மாவுக்கு இன்னிக்கு மாஸ்டர் செக்கப்புக்கு போகணும்னு போன மாசமே தெரியுமே.... 8 மணிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கணும்... இப்பவே மணி 7 ஆச்சு. இன்னும் எப்ப கிளம்பி எப்ப போய்.... ஒருத்தனுக்கும் பொறுப்பே இல்லை... வரானுக பாருங்க தூங்கி வழிஞ்சுக்கிட்டு.... இந்த டிரைவர், செக்ரடரி, சமையல்காரன், செக்யூரிடி எல்லார் சீட்டையும் கிழிச்சாத்தான் அவனுகளுக்கும் புத்தி வரும் மத்தவனுகளுக்கும் பயம் இருக்கும்... என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கானுக....ம்ம்...."

* * * * * * * * * * * * * * * * *

"கொடுமையைக் கேட்டீங்களா? அய்யாவுக்கு நேத்து தோட்டத்துக்கு போகும்போதே தலைவலி. அய்யாவே டாக்டர்தான். இருந்தாலும் ஆஸ்ப்ரோ, அனாசின்னு பாக்கெட்லயேவா வெச்சுக்கிட்டு சுத்த முடியும்? ஆனா கூட போனவனுக ஒருத்தன் கிட்டக் கூட ஒரு தலைவலி மாத்தரை கூட இல்லை... இது கூடவா வெச்சுக்க முடியாது? ஒரு ஆத்தரம் அவசரத்துக்கு உதவாத உதவாக்கரைகளையெல்லாம் வெச்சுக்கிட்டு அய்யா பாடு திண்டாட்டந்தான்.... எப்பிடி இருந்த ஆளு...ஹ்ம்ம்ம்..."

* * * * * * * * * * * * * * * * *

டமார்......

அய்யோ.... அம்மா......

க்ரீச்ச்..... க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்..... டம்......டம்....

"அய்யய்யோ... வெடிகுண்டா? அய்யோ.... என்ன இது... இன்ஸ்பெக்டரோட காலையே காணோம்... என்னய்யா ரத்தம் இப்பிடி போகுது.... என்ன பண்றது... வாங்கய்யா... ஓடி வாங்கய்யா....."

"என்னய்யா கலாட்டா? நான் வரேன்னு எவனாவது கருப்புக் கொடி காட்றானா?"

"இல்லீங்கய்யா.... எவனோ வெடிகுண்டு வீசிட்டான்யா... இன்ஸ்பெக்டர் கால் போயிடுச்சு.... இன்னும் ரெண்டு பேரு வந்து வெட்டிட்டு ஓடறானுக.... பாக்கவே சகிக்கலைய்யா...."

"அப்பிடியா. ம்ம்ம்.... அதென்ன நம்பருய்யா... 100ஆ... ஓ... அவங்களுக்குத்தான் ப்ரச்னையா?.. ம்ம்ம்.... 106.. 107......ஆங்.... 108. நூத்திஎட்டுக்கு போன் போடுய்யா.... ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்க....."

"அய்யா.... சொல்லிட்டேங்கய்யா.... எப்பிடியும் வர 1/2 மணி நேரம் ஆகும் போல இருக்குய்யா....."

"அதுக்கு என்னய்யா பண்ண முடியும்.... பாரு இப்பவே டிராஃபிக் ஜாம் ஆகி நம்ம 15 வண்டிக கிளம்பறதே கஷ்டம் போல... என்ன பண்றது.... வெய்ட் பண்ணுவோம்.... யோவ்... நீ என்னய்யா பெரிய கர்ண பரம்பரை... போய் தண்ணி குடுத்துக்கிட்டு இருக்க.... சட்டைல ரத்தக்கரை பட்டா போகவே போகாது தெரியும்ல.... "

"அய்யா.... உயிர் போயிடும் போல இருக்குய்யா... தாமதிக்கக் கூடாதுய்யா... பாவமா இருக்குய்யா.... ரொம்ப நேரம் ஆச்சுய்யா...."

"என்னய்யா பெரிய ரோதனையா இருக்கு.... சரி.... அந்த போலீஸ் வேன்ல ஏத்திக்கிட்டு போங்க..... நமக்கு பாதுகாப்புக்கு வர வேன்.... என்ன பண்றது.... பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சு... கொஞ்சம் விட்டுக்குடுத்துதான் போகணும்.... எஸ்.ஐ என் கூடவே என் கார்ல வரட்டும்.... "

"அய்யா... உயிர் போயிடுச்சு மாதிரி தெரியுது.... ச்ச்ச்ச்.....ச்ச்ச்ச்..."

".............................................................ம்ம்ம்... ஆக வேண்டியதை கவனிங்க.... நான் கிளம்பறேன்....."

* * * * * * * * * * * * * * * * *

Thursday, January 7, 2010

டிஜம்பர் - மீஜிக் ஜீஜன் இன் சென்னை


டிசம்பர் வந்துட்டா போதும். சென்னைல கர்நாடக சங்கீதம் திகட்டத் திகட்ட புகட்டப்படும். வருஷம் பூரா ஸ்ப்ரெட் பண்ணி வெச்சா நல்லா இருக்கும்னு என்ன கரடியாக் கத்தினாலும் அது என்னவோ ஒரே மாசத்துல ஒரு நாளைக்கு 4 வீதம் 25 சபாக்கள்ல 2000க்கு மேல கச்சேரி, டான்ஸ், ஹரி கதை லொட்டு லொசுக்குன்னு... போட்டு ஒரேடியா தாக்கிடறாங்க. சில சமயம் இங்க போறதா அங்க போறதான்னு ஒரே கன்ஃப்யூஷன் ஆயிடும்.

இது போக ஜெயா, ராஜ், விஜய்னு அவங்க வேற ஒரு தனி டிராக்ல தினம் ஒரு மணி நேரம் சங்கீத சேவை. புடிச்ச சாப்பாடு என்ன, திட்றதுக்கு உபயோகிக்கற வார்த்தை என்னன்னு... கெக்கெ பிக்கேன்னு கேள்விகள் வேற. சம்பிரதாயமா கேக்கற கேள்விகள் "இன்றைய ரசிகர்களுக்கு உங்க அட்வைஸ்?" "அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும்.............?". ஆற்காட்டார் அப்பப்ப கரண்ட் சப்ளையையை விடற மாதிரி ஒரு சில நயமான கேள்விகளும் அப்பப்ப யாராவது கேட்கறதுண்டு.

* * * * * * * * * * * *

"ஏன் மாமி.... நடபைரவிதானே இது?"

"அதேதான்... எங்காத்து ஸ்ரீநிதி கூட கனமா சங்கதி போடறா... இவ என்னவோ நீர்க்க இழுக்கறா... அது என்ன ரூபியா?"

"ரூபி மாதிரியா தெரியறது? சாதா கல்தான்.... எங்க ஆசாரி அப்பயே சொன்னான்... எல்லாரும் வாயைப் பொளப்பான்னு..... சுதா ரகுநாதன் கூட போன வருஷம் போட்டிருந்தாளே... அதே மாடல்ல இன்னும் ஃபேஷனா.... ஆமா.. சாரி என்ன என்ன போத்தீஸா ஆரெம்கேவியா?"

"ரெண்டும் இல்ல... நல்லி.... "

"அதானே பாத்தேன்... "

* * * * * * * * * * * *

"இந்த வார துக்ளக் படிச்சேளா சார்? ஆனாலும் சோ ரொம்பத்தான் கிண்டல்.... "

"நேத்து டி.எம்.கிருஷ்ணா கேட்டு அசந்துட்டேன்... என்னமா பாடறான்? அதுலயும் அந்த ஷண்முகப்ரியா... ஏ க்ளாஸ்...."

"நேத்து என் ஷட்டகன் பொண்ணு டான்ஸ்.... ஹிண்டு ரிவ்யூ பாருங்கோ..."

"முந்தாநா பார்த்தசாரதில உன்னி கச்சேரில காபி...."

"குழைஞ்சுருப்பானே...."

"அது இல்ல... அறுசுவை நடராஜன் கேண்டீன்ல காபி சாப்டுட்டு சித்தே பேசிப்டு போறதுக்குள்ள 'தனி' வந்துடுத்து.... அப்பறம் கெளம்பிட்டேன்..."

"பாருங்கோ.. பேசிண்டே இருந்ததுல இங்கயும் 'தனி'.... வாங்கோ... போய் மொத ஈடு போண்டா சாப்டுடுவோம்... கூட்டம் அப்பிடும்...."

"ஆமா... இது பாடறது யாரு... மச்சினன் பாஸ் குடுத்தானேன்னு வந்தேன்..."

"யாருக்குத் தெரியும்? சபா செக்ரடரி பக்கத்து ஃப்ளாட்... 4 பாஸ் குடுத்துருக்கார்... நமக்கும் பொழுது போகணுமே..."

* * * * * * * * * * * *

"ராட்டன் ஃபெலோஸ்... எப்பிடி கார் பார்க் பண்ணிருக்கான் பாரு... எங்க போய்த் தொலஞ்சானோ? இப்ப நம்ம காரை எப்பிடி எடுக்கறது?"

"இன்னா சார்... நீ ரிவர்ஸ் வா சார்.... நா பாக்கறேன்... அப்பிடீக்கா லெப்ட் ஒட்ச்சு வா சார்..."

"எப்பிடிப்பா வரது?"

"செரி... அப்டியே குந்தினே இரு. வரப்ப வருவாங்கோ...."

"ஏய்... ஏய்... இந்தாப்பா ஏய்.... போயிட்டானா..... பேதில போக....."

"ஒங்க மூஞ்சியப் பாத்தாலே எல்லாருக்கும் பளிச்னு தெரிஞ்சுடுமே.... இந்த அசத்துக்கெல்லாம் எவன் லைசன்ஸ் குடுத்தான்னு.... "

"திருவாயைத்தான் கொஞ்சம் மூடேன்... "

* * * * * * * * * * * *

(சன்னக் குரலில்....)

"என்னடா ராகம்? சொல்லு பாப்போம்...."

"...."

"பல்லவியே ஆரம்பிச்சாச்சு... இன்னுமா தெரியல? என் ஸ்டூடண்ட்னு வெளில சொல்லிண்டு திரியாத... "

"...."

"அமுக்கராக்கெழங்கு மாதிரி உக்காந்திருக்கறதைப் பாரு...."

".....ம்....ம்..... மலயமாருதமா?"

"ரிஷபம் எங்கேர்ந்து முட்டித்து உன்னை? நாந்தான் செவுத்துல முட்டிக்கணும். வலஜிடா... வலஜி.... ச க ப த நி ச.... புரியறதா?"

"...."

(கொஞ்சம் சத்தமாக...பக்கத்தில் இருப்பவரிடம்)

"எல்லாம் நம்ம ஸ்டூடண்ட்ஸ் சார்.... எல்லாரும் ஜெம்ஸ்... தூக்கத்துல எழுப்பிக் கேட்டாக் கூட பட்டுனு சொல்லிப்பிடுவா.... இந்தாங்கோ விசிட்டிங் கார்ட்... நம்ம கொழந்தேள் யாரான கத்துக்கணும்னு சொல்லுங்கோ...."

* * * * * * * * * * * *

அசல் சங்கீத ரசிகர்கள் மன்னிப்பார்களாக.

Wednesday, January 6, 2010

பாபாஸி சென்னை புக் ஃபேர் 2010

அதிர்ஷ்டவசமாக சென்னையில் இருந்ததால் புத்தக கண்காட்சிக்கு கட்டாயம் போக வேண்டும் என்று இருந்தேன். முதல் நாள் (30ந்தேதி) மாலை நண்பர் போனபோது முதல்வர் தலைமையில் புத்தக வெளியீடுகள் முடிந்து முறைப்படி திறப்பு விழாவுக்கு பிறகுதான் விற்பனை என்று சொல்லிவிட்டார்களாம். பல கடைகளில் அப்போதுதான் புத்தகத்தை அடுக்கவே ஆரம்பித்திருந்தார்களாம். முன்வாசலில் இருந்து கண்காட்சி நுழைவாயில் வரையிலும் போலீஸ்கள் இருந்தும் கூட போவோர் வருவோரை யாரும் எதுவும் விசாரிக்கவோ பரிசோதனைகளோ செய்யவில்லை போல. இத்தனைக்கும் அடுத்த சில மணி நேரத்தில் முதல்வர் வர இருந்திருக்கிறார். யாராவது போய் எதாவது திரிசமன் செய்திருந்தால் என்ன ஆவது? கவலை அளிக்கும் விஷயம்.

மறுநாள் மதியம் புது ஆவடி ரோடு பக்கம் ஒரு வேலையாக போக வேண்டியிருந்ததால் போகும் வழியில் 1:45க்கு காரை நிறுத்தி விட்டு (பார்க்கிங் ஏறக்குறைய காலி) உள்ளே போனால் நுழைவு வாயிலில் சுமாரான கூட்டம். முன்னால் இருந்த நான்கு நுழைவுச்சீட்டு வழங்குமிடங்களிலும் ஒரு 50-60 பேராவது நின்றிருப்பார்கள். 2:05 ஆனபிறகும் நுழைவுச்சீட்டு வழங்கவில்லை. திடீரென ஒரே ஒரு கவுண்டரில் கொடுக்க ஆரம்பிக்க எல்லா கூட்டமும் இங்கே அங்கே என அலைபாய்ந்தனர். உள்ளே கண்காட்சி அலுவலகத்தில் விசாரிக்கப் போனால் "அதான் பேசிட்டிருக்கோம் சார். வாலண்டியர்ஸ் யாரும் இல்லை. என்ன பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்றோம்" என்றார் ஒருவர். உச்சி மண்டையில் சுர் என்று ஏற "ஏன் சார்.... மதியம் 2 மணிக்கு திறக்கறீங்க. இப்ப போய் வாலண்டியர் இல்லை... என்ன பண்றதுன்னு யோசிக்கிறீங்களே? இவ்வளவு பெரிய கண்காட்சி. ஒவ்வொரு வருஷமும் நல்ல கூட்டமும் வருது. இதைக் கூடவா உங்களுக்கு ஆர்கனைஸ் பண்ண முடியல? கூட்டம் 1:30ல இருந்து வரிசைல நிக்கறாங்க. பாத்துட்டுக் கூடவா எதாவது பண்ணணும்னு தோணலை?" என்று கேட்டதற்கு பதில் இல்லை. பிறகு யாரோ இருவர் கொஞ்சம் சீட்டுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு கவுண்டருக்கு ஓட பின்னாலேயே போய் மக்கள் சீட்டுகளை வாங்கினர். கவுண்டருக்குள் ஒரு மேசை, நாற்காலி ஒன்றும் இல்லை. எவ்வளவு சீட்டு விற்றது, என்ன கணக்கு.... எப்படி சரி செய்தார்களோ?

இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. என்னவோ முதல் நாள் மாலைதான் முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்தது போன்ற தோற்றத்தை கொடுத்தது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. இந்நாட்களில் "ஈவண்ட் மேனேஜ்மெண்ட்" என்பது ஒரு கலை. நல்ல திட்டமிடல் தேவை. அதுவும் ஒரு வியாபார நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சி கூட இப்படி மந்தமாகக் கையாளப்பட்டால்? அடுத்த கண்காட்சியிலாவது கவனிப்பார்களா?

வேறு வேலைக்காக சீக்கிரம் போக வேண்டியிருந்ததால் விகடன், பயனீர், உயிர்மை, விசாவில் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு அரைமணிக்குள் திரும்ப வேண்டியதாயிற்று.

Monday, January 4, 2010

நிகழ்ந்ததும் நிகழாததும்....


எல்லாருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


ஒரு மாசம் வலையில சிக்காம இருந்தது ஒரு சாதனைதான். இனிமேல்தான் நண்பர்களோட போன மாச இடுகைகளையெல்லாம் படிக்கணும். இந்தியா பயணம். சென்னை போய் இறங்கிய நாள்ல இருந்து பல விதமான வேலைகள். ஆனாலும் முதல் நாளே சைதாப்பேட்டை தண்டோரா ஆஸ்ரமத்தில் மணிஜியையும் கேபிள் சங்கரையும் சந்திக்க முடிந்தது. மணிஜி தயவில், கேபிளார் பரிந்துரையில் தி.நகர் 'மன்சுக்'கில் திவ்யமான குஜராத்தி மீல்ஸ். அதோடு சரி. அதற்குப் பிறகு யாரையும் சந்திக்க முடியவில்லை. அப்துல்லா, ஆதி மற்றும் நர்சிம் ஆகியோருக்கு தொலைபேசியில் அட்டெண்டன்ஸ் மட்டும். எல்லாருமே நல்ல புரிதல் உள்ளவர்கள் என்பதால் வித்தியாசமாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்பிடி போடு அருவாளை !!

பிறகு மைசூர், பெண்களூர், எங்களூர் (உடுமலை) மற்றும் கோவை பயணம். கோவையில் இரண்டு வேலைகளுக்கு இடையில் கிடைத்த சைக்கிள் கேப்பில் வேலன் அண்ணாச்சி மற்றும் ஸ்வாமி ஓம்காருடன் ஸ்வாமியின் வீட்டில் ஒரு துரித சந்திப்பு. அண்ணாச்சி ஆபீசில் செல்வேந்திரனையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி. அப்பிடியே அண்ணாச்சி தயவில் வடவள்ளி ஆனந்தா பவனில் ஃபுல் மீல்ஸ். ஓசி சாப்பாடு கணக்கே ஓவரா இருக்கே !!

உடுமலைப்பேட்டையில் உடுமலை.காம் ஆபீஸ் கம் ஷோரூமில் "டீ வித் சிதம்பரம்". நாகா ஊரில் இருந்தாலும் அந்த தினம் வெளியே சென்றிருந்ததால் சந்திக்க முடியவில்லை. பழமைபேசியாருடன் தொலைபேச (மட்டும்) முடிந்தது. வேறு அவசர வேலையாக கிளம்ப வேண்டியதாயிற்று. அவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்களாக. ரைட்டு !!

மறுபடி சென்னை திரும்பியதும் குடும்பத்துடன் (வழக்கம்போல) கோயில்கள் டூர். திரும்பிய பிறகு கார் ரிப்பேர், வீடு ரிப்பேர், பேங்க், இன்சூரன்ஸ்னு தினமும் 9 டூ 9 பல வேலைகள். லீவுல இருந்த மாதிரியே இல்லை. என்ன வெகேஷனோ போங்க.