Thursday, October 30, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர் - 2

பனித்தொப்பி அணிந்த மலைகள்

மறுநா குல்மார்க் (Gulmarg) போகறதா திட்டம். காலைலயே கெளம்பிட்டோம். அண்னன் அவரோட ஆர்மி நண்பர் கிட்ட மொதல்லயே சொல்லி வெச்சுருந்தாரு. ஸ்ரீநகர் - ஊரி வழியில இடது பக்கம் போகணும். சுமார் 120 கி.மி பயணம். 3 மணி நேரத்துல போயிடலாம். அவ்வளவா ட்ராஃபிக் இல்ல. போற வழியெல்லாம் பச்சப் பசேல்னு இருக்கு. நெல்லு போட்ருக்காங்க. தை மாசம் அறுவடைக்கு தயாராயிடும். வரப்புல நம்ம பக்கம் புளியமரம் இருக்கற மாதிரி அங்க ஆப்பிள் மரங்க இருக்கு. சில மரங்கள்ல கொத்து கொத்தா ஆப்பிள். 11 மணி சுமாருக்கு குல்மார்க் போய் சேந்தோம்.

அண்ணனோட நண்பர் அவரே கைப்பட சமைச்சு ரெடியா வெச்சுருந்தாரு. நல்லா மூக்குப்புடிக்க சாப்டுட்டு, அப்பிடியே கொஞ்சம் மேல போனோம். அங்க ஆர்மியோட விருந்தினர் குடில்கள் இருக்கு. (குடில்களா அது.... 7 ஸ்டார் ஹோட்டல் சூட் மாதிரி இருக்கு... ஜகுஸி கூட இருக்கு) நல்ல இளம் வெயில். அங்கங்க மேக மூட்டம். மலை உச்சிகள்ல பனி படிஞ்சு வெயிலுக்கு சின்ன ஆறு மாதிரி உருகி ஓடி வருது. வெயில்ல பாக்க ஒரு வெள்ளி ரிப்பன் மாதிரி மினுக்குது. குடிலுக்கு வெளிய பெரிய பூந்தோட்டம். நல்ல சூடா டீ கெடச்சா நல்லா இருக்குமேன்னு நினைக்கும்போதே டீ வந்துடுது. அட.. நாம நிக்கறது எதாவது கற்பக மரத்துக்கு கீழயான்னு ஆச்சரியமா இருந்துது.

குலமார்க்ல விசேஷமானது "கோண்டோலா"ன்னு (Gondola) சொல்ற கேபிள்கார் பயணம். டூரிஸ்டுக இல்லாததால ஒடாதுன்னு சொல்லிட்டாங்க. ஒரே ஏமாத்தமாப் போச்சு. ஆனாலும் விடல. இன்னும் சில ஆர்மிக் காரங்களும் இதுக்குன்னெ வந்திருந்தாங்க. அதனால சரின்னு ஓட்ட சம்மதிச்சாங்க. இந்த கேபிள் கார் ரென்டு கட்டமா இருக்கு. முதல் கட்டத்துல குல்மார்க்ல இருந்து ஒரு 500 மிட்டர் உசரத்துல இருக்கற கோங்டோரிக்கு (Kongdori) போகலாம். ரெண்டாவது கட்டத்துல, அங்க இருந்து இன்னும் மேல 500 மீட்டர் போகலாம். ஆனா ரெண்டாவது கட்டம் டுரிஸ்டுக இல்லாததால சில மாசங்களாவே ஓட்டமே இல்ல. அத ஓட்ட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வந்தவரைக்கும் லாபம்னு கோங்டோரி போனோம். குட்டி குட்டி கேபிள் கார்ல நாலு பேர் உக்காரலாம். வரிசையா பெட்டிக வந்துகிட்டே இருக்கும். ஸ்டேஷனுக்குள்ள வந்ததும் வேற ட்ராக்குக்கு மாறி மெதுவா நகரும். கதவு தானா தெறந்துக்கும். அப்பிடியே ஏறி உக்காந்துட்டம்னா மறுபடி மெயின் ட்ராக்குக்கு மாறி வேகமா மேல போகுது. சுமாரா 20 மிட்டர் உயரம் இருக்கலாம். 50 மிட்டருக்கு ஒரு டவர் இருக்கு.
கோண்டோலா பயணம்

15 நிமிஷ பயணம். மேல போயிட்டோம். அப்பிடியே பெட்டி மெதுவா நகரும்போதெ இறங்கி வெளிய போனோம். பின்னால பெரிய மைதானம் மாதிரி இருக்கு. குதிரைக்காரங்க கிட்டப் பேசி ஆளுக்கொரு குதிரை மேல ஏறி கொஞ்ச தூரத்துல இருக்கற ஒரு சின்ன அருவிய பாக்கப் போனோம். 2 கி.மி தூரம்தான்னாலும், கரடு மொரடான பாதைல குதிரை எப்ப நம்மள கீழ தள்ளுமோங்கற பயத்தோடயே சவாரி. நம்ம குதிரைக்காரர் வேற தனியா விட்டுட்டாரு. குதிரை நம்மள விட புத்திசாலின்னாரு. அதுக்கு மேல நான் ஒண்ணும் பேசல. சும்மா கொஞ்ஞ்ஞ்ஞ்சமா தண்ணி ஓடிக்கிட்டுருந்துது. சுத்திப் பாத்துட்டு திரும்பிட்டோம். திரும்ப வரும்போதுதான் இன்னும் கஷ்டம். இறக்கத்துல குதிரை தட்டு தடுமாறிக்கிட்டே போகுது. புரவிபாளையம் அய்யனார்தான் காப்பாத்தணும்னு வேண்டிகிட்டேன்.

நானும் என்னுடைய அண்ணியும்

மறுபடி பெட்டில ஏறி கீழ வந்து சேந்தோம். இதுக்கே 3 மணிக்கு மேல ஆயிடுச்சு. திரும்ப ஸ்ரீநகர் வரும்போது 6:30 மணி போல ஆயிடுச்சு. வீடு வந்து, எடுத்த ஃபோட்டோவெல்லாம் பாத்து, திருத்தி......

பீர் பஞ்சால்


இங்க ஒரு சின்ன செய்தி. பொதுவா எல்லாரும் நினைக்கறது காஷ்மீர்ல இருக்கறது இமய மலைன்னு. ஆனா காஷ்மீர்ல பல மலைத்தொடர்கள் இருக்கு. காரகோரம், ஷிவாலிக், பீர் பஞ்சால், மேற்கு இமயம்... இப்பிடி இன்னும் சிலது கூட இருக்கு. குல்மார்க் இருக்கறது பீர் பஞ்சால் மலைத்தொடர்ல. காரகோரம்ல தான் K2 (எவெரெஸ்டுக்கு அடுத்தது) மலைஉச்சி, பல்டோரோ க்ளேசியர் எல்லாம் இருக்கு. நங்க பர்பத் தொடர் POKல இருக்கு.

அடுத்த நாள் சோனாமார்க் பயணம். அதுவும் 3 மணி நேர தூரத்துல இருக்கு. மலைப்பாதை வளைஞ்சு வளைஞ்சு போகுது. ட்ரக்குகளும் டேங்கர் லாரிகளும் (99% டாடா வண்டிக) சர்புர்னு போறதப் பாத்தாலே பயமா இருக்கு. வலப்பக்கம் சரிவுல சிந்து நதி சலசலன்னு ஓடுது. பல இடங்கள்ல மலைச்சரிவுனால பாதிரோடுதான். குளிர் வரதுக்குள்ள வேல முடியணும்னு ரோடு போடற வேலை ஜரூரா நடந்துக்கிடுருந்துது. நிறைய இடங்கள்ல நதியக் கடக்க வேண்டியிருக்கு. பல பாலங்கள் இரும்புதகடுகளால் ஆனது. ஒரு வண்டி அகலந்தான். எதிர்ல வர வண்டி போகற வரை காத்திருந்துதான் போகணும். பஸ்களை குறிப்பிட்டு சொல்லணும். நாலு டயர்களுக்கு மேல ஒரு பெரிய இரும்புப்பெட்டி. அது எப்பிடி ஓடுது, மக்கள் எப்பிடி அதுல தைரியமா பயணம் பண்றாங்கங்கறது இன்னும் எனக்கு தெளிவாகல.


ஒருவழியா சோனாமார்க் போய் சேந்தோம். அதி உயர போர்ப் பள்ளி (High Altitude War School - HAWS) அங்கதான் இருக்கு. கேம்பஸ்க்கு உள்ள இருக்கற மெஸ்லதான் மதிய உணவுக்கு சொல்லி வெச்சுருந்துது. அந்த மெஸ் இருக்கற எடத்தப் பாக்க கண்ணு ரெண்டு போதாது. சுத்திலும் மலை. அடிவாரத்துல மெஸ், வெளிய அரை வட்டமா படிப்படியா ஒரு பூந்தோட்டம். என்னா கலருக, டிசைனுக... அதெல்லாம் சென்மத்துக்கும் மறக்க முடியாத அனுபவம்.

அப்பிடி ஒரு ரம்மியமான இடத்துல மதிய உணவு. சுடச்சுட பூரி சென்னா, வெஜிடபில் புலவு. வாயத் தொறந்தா காக்கா வ்ந்து கொத்திக்கிட்டு போற அளவுக்கு சாப்டுட்டு... கேமரா பேட்டரி தீரற வரைக்கும் பூக்களயும் மக்களயும் ஃபோட்டோ புடிச்சுட்டு திரும்ப மனசில்லாம திரும்பினோம். வர வழியில நதியில கொஞ்சம் கையக் கால நனச்சுக்கிட்ட்டோம். உருகி வர பனிதானே...சும்மா ஜில்ல்ல்ல்ல்ல்லுனு... ஆஹ்ஹ்ஹா...


நாங்கள்...

ரொம்ப பெரிய பதிவாப் போயிருச்சு.... இன்னொரு பகுதி போட்டு முடிச்சுரலாம்.. சரியா?

Wednesday, October 29, 2008

வலைப்பூ ஆரம்பிக்க மாட்டேன் - சச்சின் பேட்டி


"வாங்க சச்சின்... எங்க இவ்வளவு தூரம்?.... ஆச்சரியமா இருக்குது... மொதல்ல வாழ்துக்களை பிடிங்க 12000 ரன் அடிச்சதுக்கு..."

"அது என்னங்க பெருசு.... இப்ப இது உங்களோட 25வது பதிவுன்னு தெரிஞ்சதும் ஒடோடி வந்தேன்.... இன் ஃபாக்ட் 24வது பதிவு படிச்சதுமே டிக்கட் புக் பண்ணிட்டேன்... நேர்ல வந்து சந்திக்கணும்னு..."

"அய்யோ... ரொம்ப புகழாதீங்க... கூச்சமா இருக்கு.."

"இன்னும் புகழவே ஆரம்பிக்கல...அதுக்குள்ள.... ஏங்க உங்க ப்ளாக்குன்னா எனக்கு உசுரு... தெனமும் நீங்க எழுதறீங்களோ இல்லயோ... நான் எல்லாப் பதிவுகளையும் தெனம் ஒரு வாட்டியாவது படிச்சுட்டுதான் தூங்குவேன்"

"அப்பிடியா.... அமாம்... 12000 ரன் அடிச்சு முடிச்ச பெறகு எப்பிடி இருந்துச்சு?"

"சும்மா ஜிவ்வுன்னு இருந்துச்சு... இப்ப உங்களுக்கு இருக்கற மாதிரி...."

"அட... மறுபடி புகழறீங்க.... எப்பிடி.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சோ?"

"புகழறதுல என்னங்க கஷ்டம்?"

"அது இல்லீங்க... ரன் அடிக்கறதுக்கு..."

"பின்ன... முதுகு வலி பின்னிடுச்சு... நானாவது ஆஃப்டர் ஆல் 12000 ரன்... நீங்க 25 (கண்ணை முழிச்சு கைய அகல விரிச்சு ஆச்சரியமா பேசறாரு) பதிவு போட்டிங்களே... உங்களுக்கு கஷ்டமா இல்லயா?"

"நமக்கென்ன கஷ்டம்... படிக்கறவங்களுக்குத்தானே.... அத ஏன் கேக்கறீங்க.... ராப்பகலா யோசிச்சு(!!) மூளைய(!!) கசக்கி புழிஞ்சு ஒரு பதிவு போடறதுக்குள்ள நாக்கு தள்ளிடும்.... எனக்கு மொதல்ல பரிச்சயமான பரிசல்காரரை கேட்டுப்பாருங்க.. அப்பத் தெரியும்... அவரெல்லாம் 100க்கு மேல போட்டாச்சு தெரியுமா... "

"அய்யய்யோ... அவ்வளவு கஷ்டமா?"

"எழுதற நம்மள விடுங்க, பின்னூட்டம் போடறவங்களை யோசிச்சுப் பாருங்க.... விஜய் ஆனந்த் மாதிரி சிரிப்பான் போடுறவங்க கீ போர்டுல கோலன், ப்ரேக்கெட் இந்த ரெண்டு கீயும் தேஞ்சு போய் அடிக்கடி கீபோர்டே மாத்த வேண்டி வருது.... ர்ர்ரிப்பீட்டேய்னு கமெண்ட் போடறவங்க மேல பீவாசுவும் ராம்குமாரும் கேஸ் போடப் போறாங்களாம், அப்துல்லா அண்ணனுக்கு ஒவ்வொரு பதிவையும் கண்ணுல வெளக்கெண்ண விட்டுப் படிச்சுட்டு எதாவ்து நுண்ணரசியலக் கண்டுபுடிச்சு சிண்டு முடியறதுக்கு ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்கு... பழமைபேசிக்கு மொதல்ல அட்டென்டன்ஸ் போட்டுட்டு அப்பறமா வந்து படிக்க வேண்டியிருக்கு, குடுகுடுப்பையாருக்கு நடுச்சாமம் வரைக்கு வெய்ட் பண்ணணும்... இப்பிடி பலருக்கு பல கஷ்டங்கள்..... பதிவு போடறதும், படிச்சு பின்னூட்டம் போடறதும் சும்மாவா..."

"அம்மாடி..... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..."

"பின்ன... சும்மா உங்களை மாதிரி பேடைக் கட்டுனமா, பேட்டை புடிச்சமா, பங்களாதேஷையும் ஸிம்பாப்வேவையும் போட்டு வெளாசினமாங்கற மாதிரியான சோலியா இது..."

"அதென்னமோ வாஸ்தவந்தான்...."

"உங்களுக்காவது பேப்பர் காரங்களும் டி.விக்காரங்களும் வெளம்பரம் பண்ணுவாங்க... ஆனா நாங்க... பதிவு போட்டா மட்டும் போதுமா... தமிழ்மணத்துல இணைச்சு, தமிலிஷ்ல இணைச்சு, ஓட்டு போடுங்கன்னு மெரட்டி.. (கெஞ்சி..) அதெல்லாம் பெரிய வேலைங்க....."

"பிஹைண்ட் தி ஸ்க்ரீன்ஸ் இவ்வளவு இருக்கா....."

"எப்பிடியோ அடிச்சு புடிச்சு நானும் 25 பதிவு போட்டுட்டேன்... நேர்ல வந்து வாழ்த்தினதுக்கு நன்றி..."

"ரொம்ப நன்றிங்க... நான் கூட ப்ளாக் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன்... ஆனா இப்பத் தோணுது இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள 13000 அடிக்கறது ஈசியா இருக்கும் போல இருக்கே..."

"ஆமாம்... நீங்க அதுல கான்சன்ட்ரேட் பண்ணுங்க... வாழ்த்துக்கள்"

அப்பாடா... ஒரு ஆளை ப்ளாக் ஆரம்பிக்க விடாம தொரத்தரதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆயிருது... இப்பவே கண்ணக் கட்டுதே...

மக்களே... என்னயும் மதிச்சு, நம்ம பதிவுகளையும் படிச்சு, அதுக்கு பின்னூட்டமும் போட்டு நாட்டுக்கு பெரும் தொண்டாற்றும் உங்களுக்கெல்லாம் எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல. அடிக்கடி வாங்க... பாராட்டோ, திட்டோ பதிஞ்சுட்டுப் போங்க.

நல்லாயிருங்க மக்களே... நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாயிருங்க....

நன்றி....நன்றி.....நன்றி....நன்றி....நன்றி.....நன்றி....நன்றி.....நன்றி...

Saturday, October 25, 2008

பூலோக சொர்க்கம் காஷ்மீர்

வெறிச்சொடி இருக்கும் தால் ஏரி

போன மாசம் லீவுல ஸ்ரீந‌கர் போய்ட்டு ஒரு வாரம் இருந்துட்டு வந்தோம். திரும்ப வந்து ஒரு மாசம் போல ஆச்சு. ஆனா அது ஏற்படுத்தின பாதிப்பு இன்னும் பல வருசங்களுக்கு இருக்கும்.

அண்ணன் இப்பொதைக்கு ஸ்ரீநகர்ல (இந்திய விமானப் படை) இருக்கறதால தங்கறதுக்கெல்லாம் ஒரு ப்ரச்னையும் இல்ல. டெல்லிலேந்து‍ ஸ்ரீநகர் போகற விமானமெல்லாம் நேரத்துக்கு கெளம்பும்னு சொல்ல முடியாது. நாங்க‌ போக இருந்த ஃப்ளைட்டும் கடைசி நேரத்துல கேன்சல் ஆகி, அடிச்சு புடிச்சு இன்னொண்ணுல புக் பண்ணி மதியம் போய் சேந்தோம். போகும்போதே ஸ்ரீநகர்க்கு கொஞ்சம் முன்னாலயே ஏர் டர்புலன்ஸ்னு விமானம் தூக்கி தூக்கிப் போட்டுச்சு. ஏற்கெனவே கலவரமா இருக்கற ஊருக்குப் போறோம்... இதுல விமானம் வேற வயித்துல புளியக் கரச்சுது.

போன மறுநாள். தால் ஏரி போய் வருவோம்னு கெளம்பினோம். 3,4 மாசமாவே அமர்நாத் ப்ரச்னையால குண்டு வெடிப்பு, ஊரடங்கு உத்தரவுன்னு ஒரே அமர்க்களம். என்னமோ நாங்க இருந்த 6 நாளும் ஊரடங்கு இல்ல. ஆனா பதட்டமான சூழ்நிலைய நல்லா உணர முடிஞ்சுது. குண்டு வெடிச்சு செவுரு உடஞ்ச மேம்பாலம், தீ வெச்சு எரிஞ்சு போன மார்க்கெட் கட்டடம், டூரிஸ்டுகளே இல்லாத தால் ஏரி, வழக்கத்துக்கு மாறா கரையோரமா நிக்கற நூத்துக் கணக்கான சவாரி படகுகளும், படகு வீடுகளும் நெலமைய சொல்லாமலே வெளக்கமா சொல்லுதுக. நாங்க வாடகைக்கு எடுத்த படகு (கஷ்மீரில "ஷிகாரி") ஒட்டி சொன்னாரு, அவுருக்கு ஒரு மாசங்கழிச்சு சவாரி கெடச்சுருக்காம். கேகவே ரொம்ப கஷ்டமாயிருந்துது. சாதாரணமா படகுக கரையிலயே நிக்காது. அவ்வளவு டூரிஸ்டுக கூட்டம் நெரியும். என்னவோ காஷ்மீரோட தலயெழுத்து... சொர்க்கம் மாதிரியான எடத்துல எவனுக்கும் நிம்மதி இல்ல‌, உயிருக்கு உத்தரவாதம் இல்ல, யாவாரம் இல்ல, அன்னாடப் பொழப்புக்கே ததிங்கிணத்தோம் போடறாங்க. நேர்ல பாக்கும்போது சீரணமே ஆகல.

நானும் அண்ணனும்

படகுல போயிட்டுருக்கும்போதே கூடவே படகுல வந்து யாவாரம், பிச்சை எல்லாம் நடக்குது. யாவரிக குங்குமப்பூ, ஷிலாஜித் மாதிரி ரொம்ம்ம்ம்ம்ப காஸ்ட்லி அயிட்டங்க, காய்தக்கூழ்ல பண்ணின வேலைப்படு அதிகமுள்ள‌‌ சின்ன/பெரிய‌ பொம்மைக, ராசிக்கல்லுக, வெள்ளி நகைகன்னு சகலமும் விக்கறாங்க. ஏரிக்கு நடுவுல ஒரு பெரிய மார்க்கெட்டே இருக்கு. துணிக்கடை, மருந்துக் கடைன்னு எல்லாம் இருக்கு. அப்பிடியே படகை ஓரங்கட்டி ஒரு காஃபா குடிச்சோம். (காஃபாங்கறது இஞ்சி, ஏலம், பிஸ்தா, பாதாம்னு எல்லாம் போட்டு டீ மாதிரி இருக்கும்) அப்பிடியே ஒரு ரவுண்டு போய்ட்டு திரும்ப கரைக்கு வந்து ஒரு தாபாவுல மதியச் சாப்பாடு முடிச்சுட்டு ஞாயிறு சந்தைக்குப் போனோம். வெகு நாளைக்கு அப்பறம் சந்தை போடறாங்க போல... "இன்னக்கே வாங்கிறணும்டா, நாளைக்கு கெடைக்காது"ங்கறது மாதிரி மக்க ஓடி ஓடி வாங்கறாங்க. பழசு, புதுசுன்னு எல்லாம் கெடைக்குது. ஆனா தெருவுல எங்க பாத்தாலும், பத்தடிக்கு ரெண்டு BSF ஜவான்க நிக்கறாங்க. ஒருத்தர் கிட்ட பேச்சு குடுத்தபோது அவிக பொலம்பல் அதுக்கு மேல. பாவம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி கஷ்டம். ஊரு நெலம அப்பிடி.

டூரிஸ்டுகளுக்காக காத்திருக்கற சவாரிப்படகுகள்

அப்பறம் "சஷ்மஷாஹி பூங்கா" (Chashm Shahi Park) வுக்குப் போனோம். ஒரு சின்ன மலை மேல இருக்கற பூங்கா. நல்ல சீசன்கறதால பூக்களோ பூக்கள்...கலர் கலரா... இயற்கையோட கைவண்ணம். நெறய இனிப்பு தின்னா தெகட்டும். ஆனா இம்புட்டு வித விதமா, கலர் கலரா, சின்னதும் பெருசுமா, ஒத்தையா, கொத்துக் கொத்தா பூக்கள கண்கொள்ளாம பாத்துக்கிட்டே இருக்கலாம். ஒரு எடத்துல நம்ம சங்ககால பூன்னு சொல்ற "செங்காந்தள்" பூ கூட இருக்கு.

செங்காந்தள்

பூவில் வண்டு கூடும் கண்டு....

இந்தப் பூங்காவுக்குள்ள ஒரு நன்னீர் ஊத்து இருக்கு. சும்மா ஜில்லுன்னு கல்கண்டு மாதிரி தண்ணி கொட்டிக்கிட்டே இருக்கு. பாட்டில்லயும் கேன்லயும் புடிச்சுக்கிட்டு போய்ட்டே இருக்காங்க. இதுல இருந்துதான் இன்னிக்கும் டெல்லில இருக்கற நேரு குடும்பத்துக்கு நெதம் தண்ணி போகுதாம். கேமராவே "டே...போதும்டா"ன்னு சலிச்சுக்கற வரைக்கும் பூக்களயெல்லாம் படம் எடுத்துக்கிட்ட பெறகு, பக்கத்துலயே இன்னும் கொஞ்சம் மேல இருக்கற "பரி மஹல்"க்கு போனோம். அது ஒரு சின்னமா (Heritage Site) அகழ்வாரய்ச்சித்துறை பாதுகாக்கறாங்க. அங்க இருந்து பாத்தா ஸ்ரீநகர் அழகா ரம்மியமா இருக்கு. ஹைதராபாத்துல சார்மினார் மாதிரி, தால் ஏரிக்கு நடுவுல நாலு சினார் மரங்க‌ இருக்கு. அத "சார் சினார்"ங்கறாங்க. அது இங்க இருந்து பாத்தா அட்டகாசமா இருக்கு.



"தால் ஏரி நடுவுல "சார் சினார்" (தெரியுதா??)

அவ்வளவுதான்... மொத நாள் அதுக்கு மேல சுத்த தெம்பு இல்ல... வீடு போய் சேந்தோம்.

நாங்க அந்த வாரம் சுத்திப் பாத்த குல்மார்க், சோனாமார்க் பத்தி, காஷ்மீர் பத்தி, சினார் மரம் பத்தியெல்லாம்... வாரேன்... அடுத்த பதிவுல சொல்றேன்...

மத்தபடி, எடுத்த 100க்கும் மேல படங்கள இங்க பதிவல போட முடியாது. Online album க்கு தொடுப்பு இதோ. அங்க போய் பாத்துக்கங்க...

ம்ம்ம்...ஓட்டு...மறக்காம போட்டுட்டுப் போங்க.

Thursday, October 23, 2008

மொளச்சு வரும்போது...4

பழைய பதிவுகள் ...1 ...2 ...3



ஊர்ல இருக்கற வானரங்களுக்கும் அக்ரஹாரத்துக்கும் இருக்கற பந்தம் அலாதியானது. மார்கழி மாசம் ஆச்சுன்னா எல்லாத்துக்கும் பக்தி எங்கேருந்தோ பீரிக்கிட்டு (நன்றி: வெ.ஆ.மூர்த்தி) வந்துரும். காலங்காத்தால 5 1/2 மணிக்கெல்லாம் ட்ராயர் மேலயே ஒரு வெள்ளத் துண்ட வேட்டி மாதிரி கட்டிக்கிட்டு (அரணாக்கயருக்குள்ள சொருகி வெச்சுக்கணும்... இல்லன்னா நம்ம க்ளாஸ்மேட்டு பொண்ணு வீட்டு வாசல்ல நின்னு அரிசி வாங்கற நேரம் பாத்து அவுந்து மானத்த வாங்கும்) அக்ரஹாரத்து க்ருஷ்ணன் கோயில் மாமா வீட்டுல இருந்து கிளம்பி அப்பிடி மேக்க அக்ரஹாரம் பூரா ஒரு ஊர்வலம். பத்து பேர் பாடிக்கிட்டே போனா பத்து கொரலும் தனித் தனியாக் கேக்கும்.. அவ்வளவு 'ஸின்க்'கா பாடுவாங்க. வீடு வீடா நின்னு கை கால் கழுவி, அரிசி வாங்கி பையில போட்டுக்கிட்டே போய், தளி ரோட்டுல லெஃப்ட். குட்டைப்பிள்ளயார் கோவில் வாசல்ல "கணேச சரணம் ; சரணம் கணேசா"ன்னு ஓங்கி ஒரு கொரல் பாடிட்டு, மறுக்கா லெஃப்ட். கச்சேரி வீதில சப்ஜெயில், கோர்ட்டு, ஜேகப் டாக்டர் வீடு தாண்டி லெஃப்ட். கொஞ்ச தூரம் போனா மறுபடி அக்ரஹாரம். ரைட்ல திரும்பினா அனுமார் கோயில்.

நாமளும் சும்மாவோ இல்ல ஒரு ஜால்ராவத் தட்டிக்கிட்டேவோ போனா, கடைசீல ஒரு 7 மணி வாக்குல அனுமார் கோயிலுக்கு போய் சேரும்போது வெண்பொங்கலோ, சக்கரப் பொங்கலோ, சுண்டலோ சூடா ரெடியா இருக்கும். நமக்கா பொறுமையே இருக்காது. கவுண்டமணி "கெடா எப்ப வெட்டுவாங்க?"ன்னு பொலம்பற மாதிரி, "அனுமாருக்குதான் வெண்ண பூசியாச்சுல்ல?" "அதான் பூஜை முடிஞ்சுதில்ல?"ன்னு பொங்கல் பாத்திரம் இருக்கற டேபிளையே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம். மொதல்லயே பாதாம் எல, வாழை எலன்னு நல்லா பெருசு பெருசா எடுத்து வெச்சுருப்போம். பிரசாதம் குடுக்கறவரு பாத்தரத்து கிட்ட போனவுடனேயெ வானரமெல்லாம் ரெடியாயிரும். ஆனாலும் "இதுக்கு ஒண்ணும் நாங்க ஆலாப் பறக்கல"ங்கற மாதிரி அப்பிடி முஞ்சிய அப்பாவி மாதிரி வெச்சுக்குவோம். கொறவஞ் சாடை கொறத்திக்குத் தெரியாதா? "வாங்கடா...வந்து தொலைங்க"ன்னு அப்பிடியே ஆசை(!)யாக் கூப்புடுவாரு. "நீங்க கூப்டீங்க...அதுனால வரோம்"ங்கற தோரணைல போய் மொதலா நின்னுடுவோம். கையில இருக்கற எல பூராம் பரப்பி போடச் சொல்லி (இதுல என்ன வெக்கம்?!) வாங்கிகிட்டு பின் பக்கமாப் போயி ஒக்காந்து சாப்டுட்டு திரும்பி வந்து, பாத்தரம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சா மறுக்கா நின்னு மறுக்கா திட்டு வாங்கிக்கிட்டே இன்னொடு ரௌண்டு சாப்டுட்டு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு வீட்டுக்குப் போனா, டிஃபன் சாப்ட்டு ஸ்கூலுக்கு கெளம்ப சரியா இருக்கும்.

அக்ரஹாரம் அனுமார் கோவில்ல அடிக்கடி எதாவது காலட்சேபம், கச்சேரின்னு நடந்துக்கிட்டே இருக்கும். கூட்டம்னு ஒண்ணும் பெருசா இருக்காது. 25, 30 பேர் இருந்தாலே அதிகம். "ரெண்டு மாசமா பொண்ணு பாட்டு கத்துண்டு இருக்கா... சரளி வரிசை முடிஞ்சது... கொரல் எழஞ்சு வருது"ன்னு யாராவது அவுங்க வீட்டுப் பொண்ணை மேடையேத்தி விட்ருவாங்க. அது பாவம் கடேசி லைன்ல ஒக்காந்து கண்ணை உருட்டி உருட்டி மெரட்ற அப்பாவப் பாத்துக்கிட்டே எதாவது பாடும். ஸ்ருதி, ராகம், தாளம் இதெல்லாம் பாக்காம இருந்தா, அது பாடற பாட்டு (!!) நல்லா இருக்கும். இல்லேன்னா கேக்கறவங்க படற பாடு இருக்கே....

சரி, விஷயத்துக்கு வரேன். எங்க சித்தப்பாவுக்கு உடுக்கம்பாளையத்துல இருந்து வல்லக்குண்டாபுரத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருச்சு. சித்தப்பா, சித்தி ரெண்டு பேருமே ஒரே ஸ்கூல்ல வாத்தியாருக. சித்தப்பா பசங்களும் ஹை ஸ்கூல்ல படிக்கிறதால உடுமலைக்கே வீடு மாத்தி வந்துட்டாங்க. அக்ரஹாரத்துலதான் வீடு. அவருக்கு பாட்டுல நல்ல இன்ட்ரஸ்ட். அதுவும் சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுன்னா அப்பிடியே சொல்லு பிசகாம அதே கொரல்ல நல்லா கணீர்னு பாடுவாரு. கண்ணை மூடிக்கிட்டு கேட்டா, சீர்காழி பாடற மாதிரியே இருக்கும். அனுமார் கோவில் கச்சேரிக வேற அவர உசுப்பி விட்ருச்சு. விட்டேனா பார்!னு 'கமிட்டி' ஆளுகளோட சோடி சேந்துகிட்டாரு. அப்பப்ப இவரையும் மேடையேத்தி உட்ருவாங்க. இவுரும் அருமையா சீர்காழி பாட்டா பாடினதுல கூட்டமும் கொஞ்சம் சேர ஆரம்பிச்சுது. 'சீர்காழி எதிரொலி'ன்னு பட்டம் வேற குடுத்தாங்க.

நானும் பாலிடெக்னிக் படிச்சுட்டு வேலை தேடி அலைஞ்சுக்கிட்டிருக்குபோது, நெதம் சாயங்காலமானா அவுங்க வீட்டுக்கு போயிர்றது. அண்ணனும் ஒரு மில்லுல ஆடிட்டரா இருந்தாரு. அவுருக்கு செஸ் வெளயாட்டுன்னா உசுரு. 6 மணி போல வந்துட்டார்னா நானும் அவுரும் வாசத் திண்னைல போர்ட வெச்சுக்கிட்டு நேரம் போறது தெரியாம வெளயாடிக்கிட்டுருப்போம். சித்தப்பா உள்ள ஆர்மோனியத்த வெச்சுக்கிட்டு ப்ரேக்டீஸ் பண்ணிகிட்டுருப்பாரு.

ஒருநா அண்ணன் வர லேட்டாயிரும்னு சொல்லிட்டாரு. சித்தப்பா மட்டும் தனியா வழக்கம் போல ப்ரேக்டீஸ்ல இருந்தாரு.

"வாடா.... அம்பி இன்னிக்கு வர லேட்டாகும்... ஒக்காரு... தனன்னன்னன்ன்ன..... காலத்தை உருவாக்கும் காரணனே... "

"எப்ப வருவான்?"

"9 மணி ஆகும்னான். சும்மாத்தானெ இருக்க... அப்பிடி பாட்டு கத்துக்கோயேன்.. வா வா நானே சங்கீதம் சொல்லித் தரேன்..."

நமக்கும் இதுக்குள்ள ஒரளவுக்கு கர்னாடக சங்கீதம் மேல ஒரு 'இது' இருந்துது. சரி...கேப்பமேன்னு ஒக்காந்துட்டேன்.

"உனக்கு என்ன கட்டை வருதுன்னு பாப்பமா... எங்க...பாடு..சாஆஆஆ"

"சாஆஆஆ"

"பாஆஆஆ"

"பாஆஆஆ"

"சாஆஆஆ"

"சாஆஆஆ"

"ம்ம்ம்ம்...1 1/2 க‌ட்டை... கொர‌ல் ரொம்ப‌ ஒட‌ஞ்சு போச்சு... பாட‌ப் பாட‌ ச‌ரியாயிடும்"

"சிம்பிளா சொல்லித் த‌ரேன்... இப்ப‌ மொத‌ல்ல‌ ம‌ல‌ஹ‌ரி...பாரு...வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு, வெள்ளை, க‌ருப்பு... அப்பிடியே பின்னால‌ வ‌ர‌ணும்... புரிஞ்சுதா?"

"................"

"என்னடா முழிக்கற.... வெள்ளை, கருப்பு, கருப்பு, வெள்ளை வெள்ளை, கருப்பு, கருப்பு... சங்கராபரணம்"

இவ்வளவு ஈஸியா இருக்கு...இதுக்கா சங்கர சாஸ்திரி மூணு மணி நேரப் படத்துல அப்பிடி உசுர விட்டாரு?ன்னு நமக்கு யோசனை.

"இப்ப கருப்பு, கருப்பு....................இது கல்யாணி"

"..........." நல்லவேளயா அண்ணன் அதுக்குள்ள வந்துட்டாரு.

"மாட்னியா? நன்ன வேணும்... அப்பா... ரிட்யர் ஆனப்பறம் கழுத்துல மாட்டிக்க‌றா மாதிரி சின்ன ஆர்மோனியமா வாங்கித் தரேன்.. பீச் தாம்பரம் ரூட்டுக்கு சீசன் பாஸ் வாங்கித் தரேன்... மேல கீழ போய் சீர்காழியே வந்து போதும்கற வரைக்கும் பாடிண்டே இரு"

"போடா..ஞானசூன்யம்.. ஒனக்கென்ன தெரியும்... அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு.. கத்துத்தர நான் இருக்கேன்... பாடிட்டுப் போறான்.. போய் வேலயப் பாரு"

"ஆமாண்டா சீர்காழி எதிரொலிக்கு எசப்பாட்டுன்னு பட்டம் வாங்கிக்கோ... ஒழுங்கா வந்து செஸ் வெளயாடு... பாடறானாம்"

"இல்ல... நெஜமாவே இன்ட்ரஸ்டா இருக்கு... தெனம் ஒரு 1/2 மணி நேரம் கத்துக்கறேனே..."

"பாரு... பத்தே நிமிஷத்துல அவன கட்டிப் போட்டுட்டேன் பாரு.. என் சங்கீதத்தோட மகிமை... அடுத்த ஹனுமத் ஜெயந்திக்கு இவன் பாடறான்.. நானாச்சு... நீ மட்டும் தெனம் வந்துடு"

"ஆகட்டும் சித்தப்பா... இன்னிக்கு இது போதும்.. நாளைலேந்து..."

"பாரு அம்பி... அவனை நீதான் கெடுக்கற... சிம்பிள்.. கருப்பு வெள்ள இத வெச்சே சொல்லித் தந்துடுவேன்"

இப்பிடியே கொஞ்ச நாள் ப்ளாக் & ஒயிட்ல பாடம் (!!) நடந்துது. நமக்கோ கலர் கலரா கனவு. ஹனுமத் ஜெயந்தில பாடறோம், கோவிலுக்கு உள்ள, வெளிய வீடுகள்ல, தெருவுலன்னு 1000 பேர் நாம பாடறத கேக்கறாங்க. நல்லா பாடிட்டுருக்கறப்ப யார் அபஸ்வரமா....டர்ர்ர்ர்ர்ர்.....

"நாசமாப் போச்சு.. ஏண்டா... இப்பிடியா போட்டு அமுக்குவ, துருத்தியே கிழிஞ்சு போச்சு பாரு.. நல்ல ஆர்மோனியம்... இப்ப இத சரி பண்ண பழனிக்கு எடுத்துண்டு போயாகணும்..."

அத்தோட நம்ம சங்கீதப் பாடமும் டர்ர்ர்ர்ர்ர்ர்... சரி...இனிமே சமுதாயத்தை சோதிக்க வேண்டாம்... கேக்கறதோட நிறுத்திக்குவோம்னு...

சங்கீதத்துக்கு "மங்களம்...சுப மங்களம்"
(மொளைப்போம்...)

Saturday, October 18, 2008

ஒரு நாடு, ஒரு உலகம் - சர்வ நாசம் : பகுதி 2



முந்தைய பதிவுல இப்பொதைய பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் வீட்டுப் பிரச்சனைதான்னு எழுதியிருந்தேன். அதுசரியோட [ இவரே ஒரு முதலீட்டு வங்கியாளர் (investment banker). இவர் எழுதினா இன்னும் விளக்கமாவே எழுதலாம். இருந்தாலும் நாம கொழப்பறத சரியா கொழப்பிரணுமில்ல.. :)) ] பின்னூட்டத்துல இதுவே காரணம் இல்ல.... இது ஒரு காரணிதான்.... பின்னால CDO,CDS மாதிரி பல விஷயங்கள் இருக்குன்னு எழுதியிருந்தாரு. அவுரு சொல்றது 100% சரி. ஆனா நான் முன்னாடியே சொன்னது மாதிரி இந்த சரிவுக்குப் பின்னால பல விதமான முறைப்படுத்தப்படாத நிதி / முதலீடு / காப்பீடு கருவிகள் (unregulated financial / investment / insurance instruments) இருக்கு. அதுல முக்கியமானது, இந்த சரிவுக்கு பெரிய காரணமா இருந்தது, CDS-உம் CDO-உம்.

இது ரெண்டும் என்னன்னு பாக்கறதுக்கு முன்னாடி அவர் எழுப்பின சில கேள்விகளை பாக்கணும். அதாவது அமெரிக்கவால பல நன்மைகள் கிடைச்சுருக்கு, இப்ப மட்டும் ஏன் அவிங்களை இந்தத் திட்டு திட்டணும்னு. வாஸ்தவந்தான். அவிங்க மார்கெட் பெருசா, ஆழமா, அகலமா இருக்கப் போய்த்தான் சுத்தியிருக்கற பதினெட்டுப் பட்டி நாடுகளுக்கும் பெரிய லாபம் கெடச்சுது. காரென்ன, துணியென்ன, சாஃப்ட்வேரென்ன...இன்னும் பல என்னக்களால நாம் எல்லாம் லாபம் பாத்தோம். ஆன இதுலெல்லாம் அடிப்படையா இருந்தது உற்பத்தி. யூகம் கிடையாது. அவன் கேட்டதை செஞ்சு குடுத்தா காசு. இல்லைன்னா கட்டைவெரல சூப்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். இதுகள்ல உருவகப் பொருட்கள் (Derivatives) கிடையாது. அதாவது வேற ஒரு பொருளை பின்னால வெச்சு ஒரு காய்த சர்டிபிகேட் பண்ணி, பின்னால உள்ள பொருளோட மதிப்பப் பொறுத்து இந்த காய்தத்துக்கு ஒரு விலை வெச்சு, வித்து வாங்கின்னு வியாபாரம் பண்ணல. உழைப்ப மூலதனமாப் போட்டு பொருளை உற்பத்தி பண்ணி வித்து பாத்த லாபம்.

ரெண்டாவது நம்ம வரிப்பணத்தைப் பத்தியது. முன்னால நல்லா போய்கிட்டுருந்தபோது நாமளும் அந்த கம்பெனிகளோட பங்குகள்ல முதலீட்டு செஞ்சுருந்தா நமக்கும் லாபம் கெடச்சுருக்கும். அதுனால நட்டம் வரும்போது வரிப்பணத்தை குடுத்தா பொறுத்துக்கணும்கறது. இந்த லாஜிக் படிப் பாத்தா முதலீடு செஞ்சு லாபம் பாத்தவங்கள் பல பேர் இருக்கலாம், ஆனா முதலீடு செய்ய வக்கில்லாம சொற்ப சம்பளம் வாங்கி, வரியையும் ஒழுங்கா கட்டினவங்க பலப்பல பேரு. அவிங்களோட வரிப்பணம்? அவன் ஏன் இந்த நட்டத்துல பங்கெடுத்துக்கணும்?


யூக வியாபாரம்க்கறது பேராசை இல்லாம வேற என்ன? பொருளை கண்ணால கூடப் பாக்காம, அது கருப்பா செவப்பான்னு கூடத் தெரியாம அதோட விலைய ஏத்தி எறக்கி வெளையாடி, உற்பத்தி பண்றவனுக்கு முக்காடு ; வெலையச் சொல்றவனுக்கு லாபம்னு ஒரு நிலையை கொண்டு வரதுக்கு பேரு பேராசை இல்லாம வேற என்ன? இப்பிடி ஒரு நிலையை பண்ணிட்டு இதுதான் மார்க்கெட், இப்பிடி நாலுந்தான் இருக்கும்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தா? 5 ருவா பொருள் அனாவசியமா 50 ருவாய்க்கு விக்கறதும், அடக்க விலை 100 ருவப் பொருள் 10 ருவாய்க்கு வித்து மக்கள் தற்கொலை பண்ணிக்கறதும்....இதுதான் மார்கெட்டா? எனக்கு தெரிஞ்ச அளவுல இது பேராசைதான். நட்டம்னு வரும்போது ஏசி ரூமுல உக்காந்துட்டு வேணா எதாவது ஒரு கணக்கச் சொல்லி இது இப்பிடித்தான்னு வெளக்கலாம். நேரடியா பாதிக்கப் படறவன் உணர்வு பூர்வமாத்தான் பிரச்சனைய அணுகுவான்.

சரி இப்பொ CDO CDSக்கு வருவோம்.

CDO - Collateralized Debt Obligations

இத தமிழ் படுத்த என்னால முடியல. சுருக்கமா சொல்லணும்னா "கடன் ஒப்புதல்களை" ஜாமீனா வெச்சுக்கறது. முன்னால சொன்ன MBS மாதிரிதான். பல அடகுகளை ஒண்ணா சேத்து ஒரு பெரிய சொத்தா பண்ணி, அத பின்னால வெச்சு பாண்டுக (bonds), சர்டிஃபிகேட்டுக, பங்குகன்னு செஞ்சு, ஒவ்வொண்ணுக்கும் ஒரு ரேடிங் (rating) குடுத்து, கடன்களுக்கு பணம் திரும்ப வர வர இந்த காய்தங்களுக்கு (ரேடிங்குக்கு தகுந்த மாதிரி) வருமானமும் வரும், மதிப்பும் கூடும். இந்த மாதிரி காய்தங்கள்ல பல பேங்குகளும், முதலீடு கம்பெனிகளும் எக்கச்சக்கமா முதலீடு பண்ணியிருந்தாங்க. கடன்காரன் வட்டியோ, அசலோ திருப்பித் தரலைன்னா என்ன ஆகும்? அந்த அடகு மூட்டையோட மதிப்பு கண்டிப்பா குறையும். கூடவே இந்த காய்தங்களோட மதிப்பும், அதுல இருந்த வர வருமானமும் குறையும். சரி, அடகுல இருக்கற சொத்துகள வித்து கணக்கத் தீர்க்கலாம்னா, சொத்துகள வாங்க ஆளில்ல. வாங்க ஆளில்லாத அடகை வெச்சுக்கிட்டு என்ன பண்றது? (அத வாங்கிக்கச் சொல்லி வெளம்பரம் குடுத்து இன்னும் செலவு வேணா கூட ஆகும்.) சொத்து மதிப்பு கொறஞ்சுக்கிட்டே போக...நட்டம் ஆரம்பமாகுதா? இதுல இந்த அடகுகள் அசையும் / அசையாச் சொத்துகளா இருக்கலாம். கடன் அட்டைக மூலமா கண்டபடி செலவு பண்றோமே, அந்த மாதிரி நிறைய சில்லறைக் கடன்கள மூட்ட கட்டின (debt consolidation) ஒரு பெரிய கடனா இருக்கலாம். இது மாதிரி எது வேணும்னாலும் இருக்கலாம். எதுவா இருந்தாலும் கடன் வாங்குனவன் திருப்பித் தந்தாத்தான் அதுக்கு மதிப்பு. இல்லேன்னா ஏ...டண்டணக்கா... ஏ....டணக்குணக்கா தான்.

CDS - Credit Default Swaps

இதுக்கும் தமிழ் வார்த்தை தெரியல. இது ஒரு மாதிரியான காப்பீடு (insurance). அதனாலயே இத CDSனு சொல்றத விட இன்சூரன்ஸ்னே சொல்லலாம். இப்ப நாம ஒரு கார் வாங்குனம்னா அதுக்கு இன்சூரன்ஸ் வாங்கறோமில்ல? எதுக்கு? வண்டிக்கு எதாவத் ஆச்சுன்னா கைக்காசு வீணாகாம அத சரி பண்ணிக்கறதுக்கு. அதுக்கு வண்டி மதிப்பப் பொறுத்து ஒரு பிரிமியம் (வண்டி மதிப்போட ஒப்பிட்டா இது ரொம்ப கொஞ்சம்) கட்டறோம். நட்டம் வரலாம்கற எதிர்பார்ப்புல ஒரு பாதுகாப்பு பண்ணிக்கறோம். அதாவது ரிஸ்கை குறைச்சுக்கறோம். டெக்னிகலா சொன்னா, நம்ம ரிஸ்கை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு மாத்தி (risk transfer / swap) விட்டுடறோம்.

இதே மாதிரி, நாம ஒரு கம்பெனியோட பாண்டுகள்ல ஒரு பெரிய தொகையை முதலீடு செய்யறோம்னு வைங்க. ஆனா நமக்கு கொஞ்சம் பயம்...கம்பெனி ஊத்தி மூடிக்கிட்டா...நம்ம பணம் திரும்ப கிடைக்காட்டா.... (credit default) இப்ப இந்த ரிஸ்கையும் (வண்டி மாதிரியே) ஒரு பிரிமியம் குடுத்து காப்பீடு பண்ணிக்கறது. ஆனா இது கொஞ்சம் வித்தியாசமா, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (வருஷத்துக்கு / மாசத்துக்குஇவ்வளவு, இத்தனை வருஷத்துக்கு / மாசத்துக்கு) பிரிமியம் கட்டறது. இந்த இடைப்பட்ட காலத்துல நாம முதலீடு பண்ணின பாண்டுக்கு எதாவது ஆபத்துன்னா, இன்சூரன்ஸ் கம்பெனி அதுக்கு ஈடு பண்ணும். கூடவே நாம கட்டற பிரிமியம், காலத்துக்கு தகுந்த மாதிரி இன்சூரன்ஸ் கம்பெனி நமக்கு ஒரு ஜாமீன் காமிக்கணும்.

உதாரணத்துக்கு, ஒரு 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு XYZ பாண்டுக்கு வருஷத்துக்கு 1 லட்சம் டாலர்னு 5 வருஷம் கட்டறோம்னா, இன்சூரன்ஸ் கம்பெனியோட ரேடிங் (AAA) ன்னா 5 லட்சம் டாலர் ஜாமீன் (collateral) காமிக்கணும். இப்ப எதோ ஒரு காரணத்துனால இன்சூரன்ஸ் கம்பெனியோட ரேடிங் (BBB) ஆகுதுன்னு வெச்சுக்குவோம். அதாவது ரேடிங் குறையுது. அப்பிடின்னா அந்த கம்பெனியோட நம்பகத்தன்மை குறையுது. ஆனா நாம பாலிசி எடுக்கும்போதே ஒரு ஒப்பந்தம் போட்டிருப்போம். நம்பகத்தன்மை குறைஞ்சா ஜாமீன் அதிகம் பண்ணணும்னு, இப்ப ரேடிங் குறைஞ்சதால, நாம ஜாமீனை 10 லட்சம் காமிக்கணும்னு சொல்றோம். MBS, CDO ப்ரச்னையால இன்சூரன்ஸ் கம்பெனி பண்ணியிருந்த முதலீடுகள்ல நட்டம் வந்ததால ரேடிங் குறைய, ஜாமீன் அதிகம் காட்ட வேண்டி வர..ஒரு சுழல் மாதிரி ஆயிடுது. இதுல இன்னும் சிக்கல் என்னன்னா, இன்சூரன்ஸ் கம்பெனியும் இதே மாதிரி வேற கம்பெனிக / பேங்குக கூட இதே போல பல ஒப்பந்தங்கள் வெச்சுருப்பாங்க. இப்பிடி ஒருத்தர் இன்னொருத்தரோட, அந்த இன்னொருத்தர் வேறொருத்தரோடன்னு மாத்தி மாத்தி CDS பண்ணிப் பண்ணி ஒரு பெரிய வலை மாதிரி பின்னி பிணைஞ்சுருப்பாங்க. AIG, Lehman மாதிரி ஒரு ஆகப் பெரிய கம்பெனிக்கு இந்த மாதிரி அதிக ஜாமீன் காமிக்கற நெருக்கடி வந்து அவுங்க சரிய ஆரம்பிக்கும்போது, கூடவே மத்தவங்களுக்கும் (drag) நெருக்கடி அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமா மொத்தமா சரிவு. கருந்துளை (black hole) ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஒவ்வொண்னா தொடர்ந்து திவால்.

சரிவுக்கான மெக்கானிசம் எதுவா இருந்தாலும், மூல காரணம் திருப்பி கட்டாத / கட்ட முடியாத (default / sub-prime) கடன்கள பின்னால வெச்சு புதுசு புதுசா யூக வியாபாரத்துக்கான கருவிகள உண்டாக்கி, அதுகளை வெச்சு சந்தைல வெளயாண்டு குறுகிய காலத்துல நிறைய லாபம் பாத்தாங்க. நாமளும் நேரடியாவோ மறைமுகமாவோ கொஞ்சம் பலன் அடைஞ்சோம். இல்லேன்னு சொல்லல. ஆனா அமெரிக்கா மாதிரி அதுலயே சுத்திக்கிட்டுருக்கல. இந்த விளையாட்டுல ஆபத்து அதிகம்னு தெரிஞ்சும், முறைப்படுத்தப்படாத இன்சூரன்ஸ், அதுவும் பங்குக (Over The Counter - OTC) வாங்கற மாதிரி செஞ்சு, சுலபமா எல்லாரும் வந்து விழுந்து இன்னிக்கு ஆகப் பெரிய சீரழிவு, பொருளாதாரப் பின்னடைவு, மந்த வளர்ச்சி, உற்பத்தி குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சில்லறை வியாபார பாதிப்பு, பணப்புழக்கம் இல்லாதது, வீடுக இல்லாம பார்க்குலயும் தெருவுலயும் குடியிருக்கறதுன்னு ஒரே சமயத்துல பல விதமான பாதிப்புக. தனி மனுசன்ல இருந்து மொத்த உலகமும் திணறிக்கிட்டுருக்கோம். இதுவரைக்கும் உலகம் பாக்காத பெரிய சரிவு. இதுல கத்துக்க வேண்டிய பாடங்கள் நிறைய. கத்துப்போமா?

இப்பவும் நான் எனக்குப் புரிஞ்சதை சிம்பிளா சொல்ல முயற்சி பண்ணினேன். தப்ப இருந்தா தெரிஞ்சவங்க திருத்துங்க. நன்றி.

அப்பிடியே Tamilish ஓட்டு... ஹி ஹி ஹி..

Thursday, October 16, 2008

ஒரு நாடு, ஒரு உலகம் - சர்வ நாசம்

Greed is a bottomless pit which exhausts the person in an endless effort to satisfy the need without ever reaching satisfaction.

- Erich Fromm (1900–1980), U.S. psychologist. Escape from Freedom, ch. 4 (1941).

இன்னி தேதிக்கு ஹாட் டாபிக் பேங்குகள் திவாலாகறதும், அத வால் புடிச்சு வந்திருக்கற பொருளாதார நெருக்கடியும். அப்பிடி என்னதான் ஆச்சு ராத்திரியோட ராத்திரியா? ஏன் எல்லாரும் ஒரு நா காலங் காத்தால திடீர்னு மஞ்சக் காய்தம் குடுத்துட்டு தலைல முக்காடு (அவிங்களுக்கு இல்ல, நமக்கு... அதுவும் நம்ம கோமணத்தயே உருவி !!) போட்டுட்டு போயிட்டாங்க? தென்ன மரத்துல தேள் கொட்டுனா பன மரத்துல நெறி கட்ற மாதிரி அமெரிக்காவுல பேங்க் திவாலானா ஆஸ்திரேலியாவும் ஐரோப்பாவும் ஏன் மருந்து போட்டுக்கறாங்க? நாலு பக்கம் விசாரிச்சுப் பாத்தப்பறந்தான் ஓரளவுக்கு புரிஞ்சது (அப்பிடின்னு நான் நெனச்சுக்கிட்டுருக்கேன்). சரி நமக்கு புரிஞ்சத ஒரு பதிவாப் போட்டோம்னா இன்னும் நாலு பேரு தலயப் பிச்சுக்கிட்டு திரியலாம்... நமக்கும் கம்பெனி வேணுமே.

மொதல்ல இது திடீர் வீழ்ச்சியே கிடையாது. கிட்டத்தட்ட ஒரு வருஷமா கரையான் அரிக்கிற மாதிரி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நடந்துருக்கு. முதலீட்டு ஆராய்ச்சியாளர்கள், ஆலோசகர்கள், வங்கிகள், கடன் குடுக்கறவங்க, வாங்கறவங்க, சில்லரை/பெரு முதலீட்டாளர்கள் அப்பிடின்னு பல "எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள்" இந்த இன்னிய நெலமைக்கு பொறுப்பு. இன்னும் கொஞ்சம் கீழ போய் பாத்தா.... ஒரே ஒரு காரணம்தான்.....பேராசை.

நம்ம எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கு. நமக்குன்னு ஒரு வீடு வாங்கிறணும். இந்தக் கனவை ரொம்ப கச்சிதமா எக்ஸ்ப்ளாய்ட் பண்ணப் போய் இன்னிக்கு இவ்வளவு சீரழிவுல நிக்கறோம். நம்ம ஊர்ல ஒருத்தன் வீட்டுக்கடன் வேணும்னு கேட்டா, என்ன வேலை பண்றோம், என்ன சம்பளம் வாங்கறோம், என்ன செலவு பண்றோம், எவ்வளவு சேத்துருக்கோம் / சேத்து வெக்கறோம், குடும்ப சூழ்நிலை எப்பிடி, ஜாதகம் நல்ல இருக்கா, கடன திருப்பிக் கட்டுவானா, ஜாமீன் யாரு, பெரிய வீடு எவ்வளவு, சின்ன வீடு எவ்வளவு அப்பிடின்னு எல்லாம் பாத்துட்டு திருப்தி இருந்தாத்தான் பேங்க் கடன் தருது. இல்லயா? (இல்லயா??? !!!) அமெரிக்காவுலயும் இப்பிடித்தான் நடந்துக்கிட்டு இருந்துது. ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும். சில மாகானுபாவனுங்க ரூம் போட்டு யோசிச்சாங்க. இப்பிடியே போனா மார்க்கெட் எப்ப பெருசாறது, எப்ப நெறய காசு பாக்கறது? என்ன பண்ணலாம்? சரி. அடிப்படையான ஒரு அனுமானம் பண்ணிக்குவோம். அதாவது வீட்டுல போடற காசு கண்டிப்பா வளரும், குறையவே குறையாது அப்பிடின்னு தீர்மானம் போட்டங்க. ஆச்சா? இந்த (வரட்டு) சித்தாந்தத்தை சந்தைல எப்பிடி கொண்டு போய் சொருகறது? தகுதி இருக்கோ இல்லயோ, எல்லாருக்கும் கடனக் குடு. கொஞ்சம் சலுகைகள், குறந்த வட்டி, சந்தைக்கு தகுந்த மாதிரி மாறுகிற வட்டி விகிதம் (Variable Interest Rate) அப்பிடின்னு அள்ளி வீசு. எல்லாரும் வீடு வாங்கட்டும். டிமேண்ட் அதிகமாகும். வீடுகளோட மதிப்பு அதிகமாகும். கொஞ்ச நாள்லயே நெறய காசு பண்ணலாம். இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம். இது மாதிரி குடுக்கற கடனுக்கு அந்த சொத்துதான் அடகு. இந்த அடகுகளையெல்லாம் பண்டில் பண்டிலாப் பண்ணி "அடகு பின்நிறுத்திய பங்குகள்" (Mortgage Backed Securities MBS) அப்பிடின்னு பண்ணினாங்க. [உதாரணத்துக்கு, இப்ப 2 லட்சம் டாலர் மதிப்புள்ள 10 வீடுகள் அடகுல இருந்தா, மொத்தம் 20 லட்சத்தை 10 டாலர் முக மதிப்புள்ள (face value) 2 லட்சம் பங்குகளா மாத்திடறது.] அந்தப் பங்குகள பங்குச் சந்தைல வித்தாங்க. சாதாரணமா கம்பெனி பங்குகள் வாங்கற மாதிரி, இதுகளையும் பேங்குகளும், சின்ன/பெரிய முதலீட்டாளர்களும் வாங்கி குவிச்சாங்க. மத்த பங்குகள விட இதுல லாபம் நெறய கிடைச்சுது. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான். கடன் குடுத்த கம்பெனிக்கு பங்குகளை வித்தா பணம் திரும்ப கெடச்சுரும். கடன் வாங்கினவன் பணத்தை திருப்பி குடுக்க குடுக்கத்தான் அடகு ஸ்டெடியா இருக்கும். ஆனா கடன வாங்கினவங்கள்ல பாதிப் பேரோட செக்குக மொத மாசத்துல இருந்தே திரும்பி வர ஆரம்பிச்சுது. இன்னும் கொஞ்சம் சலுகை குடுக்கறது, அடகை மாத்தி விடறதுன்னு என்னென்னமோ குட்டிகரணம் போட்டுப் பாத்தாங்க. அப்பறம் வேற வழியில்லாம, கடன்காரனை வெரட்டி விட்டுட்டு சொத்தெல்லாம் விற்பனைக்கு வந்துது. இப்ப சப்ளை அதிகமாக ஆரம்பிச்சுது. விலை தானா குறைய ஆரம்பிச்சுது. MBS வாங்கினவங்க பாடு திண்டாட்டமாயிருச்சு. பங்குக்கு பின்னால இருக்கற அடகுகளோட மதிப்பு குறைஞ்சதால பங்கோட விலையும் சரிஞ்சுது. அதனால வந்த வரைக்கும் லாபம்னு பங்குகளை விக்கலாம்னா சந்தைல இது மாதிரி ஏகப்பட்டது விற்பனைக்கு இருக்கு. இன்னும் சரிவு. சொத்து விலையும் குறையுது, பங்கு விலையும் சரியுது. போட்ட முதலுக்கே மோசம்னு ஆயிருச்சு. Avalanche Effect மாதிரி பெரிய...பெரிய்ய்ய்ய்ய்ய சரிவு. பில்லியன் கணக்குல மதிப்பு இருந்த சொத்தெல்லாம் சில மில்லியன்கள், சில ஆயிரங்கள்னு படு பயங்கரமா சரிஞ்சாச்சு. என்னதான் தலை கீழா தண்ணி குடிச்சாலும் இந்த சரிவுல ஆகற நஷ்டத்தை குறைக்கவே (hedge) முடியாது.

இன்னொரு பக்கத்துல, இந்த அடகுப் பங்குகளை வாங்கின கம்பெனிக எல்லாம் இத தங்களோட சொத்து (asset) கணக்குல காமிச்சதால அவங்க கம்பெனியோட பங்குகள் விலையும் ஏறிடுச்சு. மத்த நாடுகள்ல (குறிப்பா ஜப்பான், சைனா) இருக்கற முதலீடு கம்பெனியெல்லம் அமெரிக்க பேங்குகளோட பங்குகளையோ அல்லது அமெரிக்க பேங்குகள் மூலமா அடகுப் பங்குகள்லயோ பெரிய அளவுல வாங்கி முதலீடு செஞ்சு வெச்சுருந்தாங்க. அவங்களுக்கும் தாங்க முடியாத அளவுக்குப் பெரிய அடி.

எங்கியோ அமெரிக்கவுல சில பேரு பேராசை புடிச்சு திருப்பித் தர முடியாதவனுக்கு (sub-prime) எல்லாம் கணக்கில்லாம கடன் குடுக்கப் போக, இன்னிக்கு உலகம் பூரா பேங்குக திவாலாகற சூழல். இத சரி பண்ண கெவுர்மெண்டுக எல்லாம் பில்லியன் பில்லியனா பணத்தை கொட்டறாங்க. யார் பணத்த? நம்ம வரிப் பணத்தை. இந்த பேராசை புடிச்ச பேங்குகளும் கம்பெனிகளும் கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சப்ப நமக்கு ஒரு பைசா கிடைச்சதில்ல. இப்ப அவங்களோட அறிவுஜீவித் தனத்தால ஆன நட்டத்தை சரிக்கட்ட நம்ம வரிப்பணமெல்லம் தண்ணி மாதிரி செலவழியுது. என்ன கொடுமை சரவணன் சார்? இதெல்லாம் சரியாக இன்னும் 3 குவாட்டர் ஆகும் 4 குவாட்டர் ஆகும்கறாங்க. அதான் ஃபுல்லா ஊத்தி மூடிட்டாங்களே. இங்க பணத்தப் போட்டு நட்டமானவனுக்கு இப்ப ஒரு 90 கட்டிங்குக்கே லாட்டரி.

இதுதான் எனக்குப் புரிஞ்சு சிம்பிளா சொல்ல முடிஞ்சது. (இதுல எதாவது தப்ப இருந்தா விசயம் தெரிஞ்ச மக்கள் தயவு செஞ்சு சரி பண்ணிடுங்க.) இன்னும் இதுக்குப் பின்னால இன்னமும் சிக்கலான வியாபாரங்கள் நிறைய இருக்கலாம். Derivatives, Options, Oil Futures, Commodity Futures, Structured Products...இப்பிடி நிறைய.... இதெல்லாமும் இந்த நெருக்கடிக்கு எப்பிடி துணை போச்சு, எப்பிடி உலக அளவுல திடீர்னு விலைவாசி உயர்வுக்கு ஏணி வெச்சுக் குடுத்துதுன்னு இன்னொரு நாள் சாவகாசமா கொழப்பறேன்.

பேராசை பெரு நஷ்டம்

Greed brings grief.

Tuesday, October 14, 2008

சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)


இந்த தொடர் பதிவுக்கு அழைத்த நர்சிம்-க்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

5 அல்லது 6 வயது இருக்கலாம். அப்பா மிலிட்டரியிலிருந்து லீவுல வந்தப்ப உடுமலை கல்பனா தியேட்டர்ல "மேரா நாம் ஜோக்கர்". அதுல "ஜானே கஹாங் கயே வோ தின்..." பாட்டுல ஒரு கோமாளி பொம்மை முன்னால வரும். அது மட்டுந்தான் ஞாபகம் இருக்கு. அது ரொம்ப நீளமான படம். 20 ரீலோ இல்ல மேலயோ. ரெண்டு இன்டெர்வல் உண்டு. ஆனா அப்ப சாப்ட்ட கடல மிட்டாயோட இனிப்பு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம் - சமீபத்துல அப்பாவும் அம்மாவும் சிங்கப்பூர் வந்து 2 மாசம் இருந்தபோது எங்க கூட்டிட்டுப் போறதுன்னு தெரியாமா, பக்கத்துல இருக்கற (பாசிர் ரிஸ் - டௌன்டௌன் ஈஸ்ட்) தியேட்டர்ல பாத்தோம். அது ஒரு ப்ரிவ்யூ தியேட்டர் மாதிரி சின்னதா இருக்கும். கொஞ்சம் பெரிய சைஸ் டி.வில பாக்கற மாதிரி இருக்கும். அவ்வளவா ரசிக்க முடியல. என்ன இருந்தாலும் நம்மூரு மாதிரி "கமல்"னு பேர் போடும்போது கற்பூரம் காட்டறது, ஸ்க்ரீன் மேடை மேல ஏறி டான்ஸ் ஆடறது.... அதெல்லாம் தனிதான்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தில்லு முல்லு. டி.வி.யில். எவ்வளவு தடவை பாத்தாலும் அலுக்காத படம். ரஜினி கூட இவ்வளவு காமெடி பண்ண முடியுமான்னு பாத்த ஒவ்வொருத்தரும் ஆச்சரியப்பட்ட படம். தேங்காய் நடிப்பும், டயலாக் டெலிவரியும்... ஏ ஒன். ("சட்டைல என்ன படம்?" - "பூனை சார்" - "அதுல என்ன ஒரு பெருமை?")

அதோட ஒரிஜினல் ஹிந்தி "கோல்மால்"ல அமோல் பலேகர், உத்பல் தத் இன்னும் நல்லா பண்ணியிருப்பாங்க.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

அக்னி நட்சத்திரம். கதைன்னு பெருசா ஒண்ணும் இல்லாட்டாலும், டெக்னிகலா ரொம்ப வித்தியாசமா இருந்தது. பி.சி.ஸ்ரீராம் லைட்டிங்க்ல வெளயாடியிருப்பாரு. தமிழ் சினிமாவை சட்டுனு ஒரு உயரத்துக்கு கொண்டு போச்சோன்னு நெனச்சு பெருமைப்பட்ட படம்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சினிமா-அரசியலோட பெரும் தாக்கம் எம்.ஜி.ஆர். யானை, ரயில், ஏரோப்ளேனுக்கப்பறம் அது ஒரு தீராத ஆச்சரியம். அவர் மாதிரி ஒரு கெரிஸ்மேடிக் & மெஸ்மரைசிங் தலைவர்...ம்ஹூம்.. நோ சான்ஸ்... மாஸ் சைக்காலஜிக்கு ஒரு சிறந்த ஆராய்ச்சிப் பாடம். அதோட ஒப்பிடும்போது மத்ததெல்லாம் ரொம்ப சின்ன மேட்டரா தெரியுது. (பாபா, விருமாண்டி, தங்கர் பச்சான், குஷ்பூ, காதலில் விழுந்தேன் எல்லாமே)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

"தாக்கிய"ன்னு சொல்ல முடியாது. ஆனா ரொம்ப ரசிச்சு "அட" போட வெச்சது சமீபத்துல வந்த "ஓரம்போ" படம். எடிட்டிங் ரொம்பவே நல்லா இருந்தது. அதே மாதிரி தசாவதாரம் ஆரம்ப காட்சிகள்ல கேமரா....

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதம் "லைட்ஸ் ஆன்" வினோத்தை தெரியாதவங்களே இருக்க முடியாது. தினமலர் வாரமலர்ல "இதப் படிங்க மொதல்ல" மற்றும் "துணுக்கு மூட்டை" - ஞாயிறு மட்டும் நெட்ல படிச்சுக்கறது. மத்தபடி கல்கில சிவகுமாரோட "இது ராஜபாட்டை அல்ல" ரொம்பவே ரசிச்சு படிச்சு, சிவக்குமார் மேல ஒரு மரியாதைய உண்டாக்கிய தொடர்..


7.தமிழ்ச்சினிமா இசை?

சரஸ்வதி வாத்ய கோஷ்டி, குமார், வெங்கடேஷ், சுதர்ஸனம், குன்னக்குடி, எம்.எஸ்.வி-ராமமூர்த்தி, எம்.எஸ்.வி, ராஜா, சங்கர்-கணேஷ், சந்திரபோஸ், டி.ராஜேந்தர், பாக்யராஜ், ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், ராஜபுத்திரர்கள், டி.இமான், விஜய் ஆண்டனி, ஜோஷ்வா ஸ்ரீதர், தேவி ஸ்ரீப்ரசாத், ஜேம்ஸ் வசந்தன்....... இன்னும் விடுபட்டுப்போன எல்லாரும். மனதை வருடுகிற மாதிரி யார் இசை அமைச்சாலும் அதை அனுபவிக்க தவறுவதே இல்லை.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மும்பை மற்றும் புனேல கொஞ்ச நாள் இருந்தபோது சேனல்-வி ஷஷாங்க் கோஷோட தம்பி ம்ருகாங்கா கோஷ் கூட பழக்கம் இருந்தது. மொழி புரியாட்டாலும் ரெண்டு பேரும் மராட்டி, ஒரியா, போஜ்புரி, பஞ்சாபி, ஃப்ரென்ச், இத்தாலி, ஸ்பானிஷ்னு நிறைய படங்கள் பாத்திருக்கோம். சிலது ரொம்ப சப்பையா இருந்தாலும் சில படங்கள் ரொம்ப நெகிழ வெச்சுரும். குறிப்பா இரான் / இராக்கிய படங்கள். "ஒன் லைன்" கதைய 1 1/2 மணி நேர படமா எடுக்கறத இவங்க கிட்டதான் கத்துக்கணும்.

ரொம்பவே பாதிச்ச படம் "சலாம் பாம்பே". போன வாரம் சிங்கப்பூர் லோக்கல் சேனல்ல "ரேபிட் ப்ரூஃப் ஃபென்ஸ்"னு ஒரு ஆஸ்திரேலிய படம் பாத்தேன். அந்த மூணு சிறுமிகளும் இன்னும் கண்ணுல இருக்காங்க.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

தமிழ் சினிமா கூட நேரடியவோ மறைமுகமாவோ ஒரு தொடர்பும் கிடையாது. பொழச்சாங்க. இதுவே ஒரு பெரிய உதவிதானே?

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சில நல்ல படங்களைப் பார்க்கும்போது "வந்துட்டான்யா... இவந்தான் சரியான் ஆளு"ன்னு சந்தோஷப்படும்போதே ஒரு மட்டமான, அரச்ச மாவு படம் நாலு வந்து "நாசமாப் போச்சு"ன்னு தோணும்.

சில ஹிந்தி மற்றும் க்ராஸ்-ஓவர் (ராம் கோபால் வர்மா, நாகேஷ் குக்குனூர், மீரா நாயர்...) படங்களைப் பார்க்கும்போது "இவங்கள்லாம் வேற களத்துக்கு போய்ட்டாங்க... தமிழ் மட்டும் ஏன் இன்னும் இப்பிடியே இருக்கு"ன்னு ஒரு ஆதங்கம் வரும்.

சில நம்பிக்கை தருகிற இளம் இயக்குனர்கள், டெக்னிகல் ஆளுகள்லாம் இப்ப வந்துக்கிட்டிருக்காங்க. நல்ல எதிர்காலம் இருக்குன்னு நம்புவோம். சினிமா ஒரு முழு வியாபார ஊடகம். அதனால கொஞ்சம் மெதுவாத்தான் மாற்றங்கள் வரும்னு நினைக்கிறேன்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

++++ தியேட்டர், தெருக்கூத்து மாதிரியான பழமையான மற்றும் லேடரல் கலைகளுக்கு ஒரு புது வாழ்வு கிடைக்கலாம். முத்தமிழ் மன்றங்கள் புத்துயிர் பெறலாம். மக்களுடைய ரசனைல ஒரு ஆரோக்கியமான மாற்றம் ஏற்படலாம். ஒரு வருடம் கழித்து மறுபடி சினிமா ஆரம்பிக்கிறபோது ஒரு புதிய பாதைல பயணிக்கலாம்.

---- சினிமாவையே நேரடியாவோ மறைமுகமாவோ நம்பி இருக்கற கோடிக்கணக்கான குடும்பங்கள்???? நினைக்கவே பயமா இருக்கு.

இப்ப கொக்கி படலம்.


இந்த பதிவுத் தொடர்க்கு உங்களையெல்லாம் அன்போடு அழைக்கிறேன்.

Monday, October 13, 2008

அறிவும் ஞானமும்



போன மாசம் நண்பர் அப்துல்லா கூட பேசிக்கிட்டிருக்கும்போது, அவர் மகளை ஒரு குறிப்பிட்ட ஸ்கூல்ல சேத்தறதைப் பட்தி பேச்சு வந்தது. அப்ப அவர் சொன்னாரு "இந்த ஸ்கூல் விஸ்டம் பேஸ்ட், மத்த ஸ்கூல் எல்லாம் நாலெட்ஜ் பேஸ்ட்". அப்ப இருந்து ஒரு யோசனை, அறிவுக்கும், ஞானத்துக்கும் எவ்வளவு இடைவெளி இருக்குன்னு.


அறிவே சக்தி (Knowledge is Power) அப்பிடின்னு படிக்கறோம், பேசறோம், கேக்கறோம். அது சரியா? யோசிச்சுப் பாத்தா இல்லயோன்னு தோணுது. அறிவுங்கறது செய்திகளை (data / information) அடிப்படையாக் கொண்டது. அப்பிடி அறிஞ்ச செய்திய "உபயோக"(apply)ப்படுத்தும்போதுதான் அது ஞானமாகுது. வெறும் விஷாயத்தயோ, செய்தியயோ வெச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்? எவ்வளவு வேணும்னாலும், சமைச்சு வெக்கலாம், சாப்பிடலாம். ஆனா எவ்வளவு செரிக்குதுங்கறதுதானே முக்கியம்? சமைச்சு வெச்சு யாருக்கும் குடுக்காத உணவு வீண். செரிக்காத உணவு வெறும் கழிவுதானே?


அறிவுங்கறது 'நிலை ஆற்றல்"னா (potential energy) ஞானம்கறது "இயக்க ஆற்றல்"னு (kinetic energy) சொல்லலாமா? அல்லது அறிவு = ஆற்றல் (energy), ஞானம் = ஒருங்கிணையாற்றல் (synergy) அப்பிடின்னு சொல்லலாமா? ரெண்டாவதுதான் சரின்னு படுது. ஏன்னா, ஒருங்கிணைத்துப் பார்க்கும்போதுதான், நம்ம கிட்ட இருக்கற அறிவை வெச்சு, விரவிக் கிடக்கிற (discrete) செய்திகள்ல இருந்து ஒரு அர்த்தத்தை உண்டாக்கி அதன் மூலமா சில முடிவுகள் (conclusions / judgements) எடுக்க முடியும். படிப்புங்கறது அறிவை ஊட்டறது. வெறும் படிப்ப வெச்சு ஸ்திரமான, சரியான முடிவுகள் எடுக்க முடியுமாங்கறது சந்தேகந்தான். இல்லேன்னா "படிக்காத மேதைகள்"ங்கற சொற்றொடரே புழக்கத்துல இருக்க முடியாது.


ஸ்கூல்ல நல்ல படிக்கிறவன அறிவாளிங்கறாங்க. எப்பவோ எங்கியோ படிச்சது :
சீக்கிரமா கத்துக்கிறது அறிவாற்றல் (intelligence)

கத்துக்கிட்டதை சரியா உபயோகப்படுத்தற கலைதான் ஆற்றல் (ability)

மேல சொன்ன ஆற்றலை வளத்துகறதும், அதுக்கான ஊக்கமும் நம்மள செயல்தகுதி (competence) உடையவரா ஆக்குது

மேல சொன்ன ஊக்கம்ங்கறது ஒரு மனநிலை (atitude)

அந்த மனநிலை இருந்தா ஞானம் தன்னால வரும்


சொல்லவரது என்னன்னா, வாழ்க்கைல வெற்றிக்கு படிப்பு மட்டும் பத்தறதில்ல. கத்துக்கற ஊக்கமும், கத்துக்கிட்டதை உபயோகிக்கிற ஆற்றலும், அதுனால கிடைக்கிற செயல்தகுதியும் ரொம்ப முக்கியமானதா இருக்கு. ஆக, ஞானத்துக்கு அறிவு அடிப்படை. அந்த அறிவு படிப்பு அல்லது அனுபவம் மூலம வரலாம். இதுல படிப்பறிவை விட அனுபவ அறிவுக்கு மதிப்பு கூட. (பட்டு தெரிஞ்சுக்கறதாலதான் அத 'பட்டறிவு'ங்கறாங்களோ?)

சாதாரணமா இந்த மாதிரியெல்லாம் குண்டக்க மண்டக்க எழுதறது படிக்கறவங்கள 3 விதமா பாதிக்கலாம்பாங்க. (convinced, confused or corrupt) இதுல நீங்க ரெண்டாவதா மூணாவதா?


எதுவா இருந்தாலும் கொலசாமி கருப்பராயன் உங்களை காப்பாத்தட்டும்.

நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.......

Wednesday, October 8, 2008

அவனோடே ராவுகள்... 4

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3



ONE
Author : Richard Bach


"இன்றைக்கு நிகழக்கூடிய ஒரு ஒரு சிறிய மாற்றம், முற்றிலும் மாறுபட்ட நாளையை நமக்கு அளிக்கக்கூடும். கடினமான பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆச்சரியகரமான பரிசுகள் காத்திருக்கும். ஆனால் அவை காலத்தினுள் மறைந்திருக்கும். நாம எடுக்கற கவனமற்ற, குருட்டுத்தனமான ஒவ்வொரு முடிவுக்கும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் ஒரு உத்தரவாதமும் கிடையாது"

புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கா? அப்பிடி இருந்தா அது ரிசர்ட் பாக்-க்கோட தப்பு இல்ல. மொழி பெயர்த்த என்னொட தப்பா இருக்கும்.

இப்ப ஒரு சின்ன கற்பனை. கடந்த காலத்துல இருந்த 'நாமும்' நிகழ் கால 'நாமும்' சந்திச்சா எப்பிடி இருக்கும்? இணயா இருக்கற இரு வேறு உலகங்கள்ல இருக்கற 'நாம' நேருக்கு நேர் பாத்துக்கிட்டா எப்பிடி இருக்கும்? காலத்துக்கு பின்னால நமக்காக என்ன காத்துக்கிட்டிருக்குன்னு 'இப்ப' தெரிஞ்சா, அத நாம எப்பிடி மாத்தவோ, ஏத்துக்கவோ நம்மளை தயார் பண்ணிப்போம்? (ஏண்டா இப்பிடி போட்டு கொழப்பற? இப்ப, அப்பறம்னு.... சரி... சரி... எவ்வளவு நாளைக்குத்தான் கொலை, கொள்ளை, சொத்து தகராறுன்னே படிச்சுக்கிட்டிருக்கறது?) ரிசர்ட் பாக்கும், மனைவி லெஸ்லியும் ஒரு வித்தியாசமான பயணத்துல அவுங்க போகாத பாதையில என்ன கத்துக்கறாங்க, அதுல நம்ம எல்லாருக்கும் பொதுவானதா என்ன இருக்குங்கறதுதான் இந்த புத்தகம். அவங்க போற அந்த பயணத்துல கற்பனையும், பயமுந்தான் உலகத்தை மீட்கவோ (அல்லது அழிக்கவோ) தேவையான கருவிகள். (என்ன... பாய பிறாண்ட ஆரம்பிச்சாச்சா?)

12B படம் பாத்துருப்பீங்களே.... கிட்டத்தட்ட அதுமாதிரியான 'கதை'தான் இதுவும். வாழ்க்கைல நாம எடுக்கற ஒவ்வொரு முடிவும் நம்மையும், நம்ம சுத்தி இருக்கற உலகத்தையும் எப்பிடி மாத்தி அமைக்குதுங்கறதை அலசற மாதிரியான புத்தகம். இன்னிக்கு காலைல பஸ்ல பக்கத்து உக்காந்தவங்களைப் பாத்து சிரிச்சது, பஸ் ஸ்டாண்டுல பப்ளிக் டாய்லட்டுக்குள்ள போறதா வேண்டாமான்னு 5 நிமிஷம் யோசிச்சுட்டு தாங்க முடியாம போகலாம்னு முடிவு பண்ணது, லிஃப்ட் கேட்டது ஒரு காலேஜ் பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக வண்டிய நிறுத்தினதுன்னு நம்மளோட ஒவ்வொரு முடிவும் நம்மோட அடுத்த சில விநாடிகளையோ அல்லது மீதி வாழ்க்கையையுமோ பல விதங்கள்ல பாதிக்கலாம். ரொம்பவே ஆச்சரியகரமான அல்லது எதிரிக்குங்கூட வரக்கூடாத விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மாதிரி சமயங்கள்ல வேற மாதிரி முடிவு எடுத்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரிவர்ஸ் கியர் போட்டு அந்த விநாடிக்குப் போயிட்டு, அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தா.... போற வழில அங்க ஒரு முடிவு எடுக்கறோம்.... அது வேற மாதிரி இருந்தா.... இப்பிடி கற்பனை பண்ணிக்கிட்டே போனா? எப்பிடி சுத்தினாலும் மறுபடி எங்க வருவோம் தெரியுமா? என்ன ஒண்ணு தெளிவாத் தெரியும்? இவரோட மொதல் புத்தகம் "ஜொனாதன் லிவிங்ஸ்டன் - ஸீ கல்" ல சொன்ன அதே செய்திதான். அன்பு, மன்னிப்பு, அமைதி. இதுதான் எல்லாத்துக்கும் மருந்து.

இவரோட எல்லாப் புத்தகங்கள்லயும் (இன்னொரு புத்தகம் Illusions [காட்சிப் பிழைகள்]) 'பறத்தல்'ங்கறது ஒரு முக்கியமான அம்சமா இருக்கு. யோசிச்சுப் பாத்தா, ஒரு வித்தியாசமன கோணத்துல உலகத்தையும், நம்ம சுத்தி நடக்கறதையும், நம்மளை நாமே பாக்கறதுக்கும் பறக்கறதுங்கற உத்திய இவர் கையாளுகிறாருன்னு நெனைக்கத் தோணுது. இந்தப் புத்தகத்தை பொறுத்த வரைக்கும், பல ஐடியாக்களை அங்கங்க விதைச்சிருந்தாலும் சிலதுகள விவரமா தொடர்ந்து விளக்கல. அது ஒரு குறை மாதிரி தெரிஞ்சாலும், படிக்கறவருக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்துட்டார்னு வெச்சுக்கலாம். படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தாலும், அங்கங்க போர் அடிக்கற மாதிரியும் தோணுச்சு. சில பக்கங்களை அப்பிடியே வேகமா புரட்டிட்டு போயிட்டேன். ஆனா சில பத்திகள மூணு நாலு தடவ படிச்சாத்தான் புரியற மாதிரி இருந்தது. அது கூட என்னுடைய புரிதல்ல இருந்த குறைபாடா இருக்கலாம். அல்லது நெஜமாவே அது அவருக்கே குழப்பமில்லாம எழுத முடியாம இருக்கலாம். ஏன்னா, வேற ஒரு புத்தகத்துல அவரே சொல்லியிருக்காரு "என்னோட எண்ண ஓட்டங்களுடைய வேகத்துக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை"ன்னு. அது ஒரு பக்கம் இருந்தாலும், இது மாதிரியான வித்தியாசமான, சிக்கலான கற்பனைகளை எழுத்தில் கொண்டு வரதுல சவால்கள் நிறையவே இருக்கு.

நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. முடிஞ்சா உங்க கருத்தை இந்த பதிவுல பின்னூட்டமாவோ அல்லது ஒரு தனி பதிவாகவோ போடுங்க. ஒவ்வொருத்தரோட வாசிப்பனுபவமும் ஒவ்வொரு மாதிரி. என்ன சொல்றீங்க?

சிறு விளக்கம்: நண்பர் பழமைபேசியோட பின்னூட்டத்த படிக்கும்போதும், நண்பர்கள் அப்துல்லா, விஜய் ஆனந்த் - இவங்களோட ச்சாட் பண்ணினபோதும், நான் (அல்லது இந்தப் புத்தகம்) சொல்ல வந்ததை வேற மாதிரியா புரிஞ்சுக்கிட்ட மாதிரி தோணுச்சு. அதுதான் இந்த விளக்கம்.

அதாவது, இதுல 'சம கால' நிகழ்வுகள் எதுவும் இல்ல. வாழ்க்கைல ஒரு கட்டத்துல ஒரு முடிவு எடுத்து முன்னால போறோம். அப்பிடி முன்னால போன பிறகு, அந்த குறிப்பிட்ட கட்டத்துல வேற மாதிரி முடிவு பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும், அதோட தாக்கம் தொடர்ந்து எப்பிடி இருந்திருக்கும்னு கற்பனை பண்றதுதான் ஐடியா. நடந்தத மாத்த முடியாது. ஆனா மாத்தினா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுப் பாக்கறது. அந்த படிப்பினைய எதிர்காலத்துல சில முடிவுகள் எடுக்கும்போது உபயோகப்படுத்திக்கறது. இதுதான் ஐடியா.

இப்ப, மேல சொன்ன உதாரணத்துல, பஸ்ல பக்கத்துல உக்காந்திருக்கறவரப் பாத்து சிரிக்கலாம், பேசலாம்னு முடிவு பண்றோம். ஒண்ணு, அவரும் ஒரு சக பதிவரா இருக்கலாம், நல்ல பெரிய பதவில (அப்துல்லா அண்ணன் மாதிரி), மோகனப்ரியா மாதிரி இன்னொரு ஹரிப்ரியாவுக்கு கேரம் விளையாட்டுல முன்னேற உதவி செய்யலாம். அது ஒரு உலகம். அல்லது அந்தாளு ஒரு தப்பிச்சு ஓடி வந்த கைதியா இருந்தா, பின்னால ஒடி வந்து புடிச்ச போலீசு (சும்மா ஒரு கற்பனைதான் ஹி..ஹி) நமக்கும் சேத்து லாடம் கட்டலாம். வாழ்க்கையே மாறிப்போகும். இது வேறு உலகம். ஆனா அந்த குறிப்பிட்ட கட்டத்துல இருந்து காலக்கணக்குப்படி பாத்தா ரெண்டும் "இணையா" இருக்கற உலகங்கள். இந்த "கால இணை"யத்தான் வேற வேற உலகங்களா கற்பனை பண்ணிக்கிறது. ஒண்ணு நாம ஒரிஜினலா முடிவெடுத்த நிஜ உலகம். இன்னொன்று வேற முடிவு எடுத்திருந்தான்னு யோசிச்சு பாக்கற "இணை"யான கற்பனை உலகம். (என்னது...பாய சுத்தமா பிறாண்டி சேமியா உப்புமான்னு நெனச்சு சாப்ட்டு முடிச்சாச்சா??)


இது ஒரு அடிப்படையான, சுலபமான உதாரணம். அப்பறம் உங்க கற்பனை.

Sunday, October 5, 2008

திரு(வலை)ப்பூர்

(துக்ளக் மகேஷ், பரிசல் க்ருஷ்ணா, ஈரவெங்காயம் சாமிநாதன், வெயிலான் ரமேஷ்)

போன வாரம் திருப்பூரில் சில பதிவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது. அதைப் பத்தி ஏற்கெனவே பரிசல் இங்க பதிவு போட்டுட்டாரு. நாம வழக்கம் போல லேட்டு. சிங்கப்பூர் திரும்பி வந்ததும் எழுதலாம்னு இருந்தேன். நம்ம பரிசலார் பாணியிலேயே எழுதலாம்னு தோணுச்சு.

பரிசல்காரன் (கிருஷ்ணா)

ஒரு மணிக்கு வரேன்னு சொன்னாரு. 1:30 ஆச்சு. வந்தாரா வரலியா? இப்பப் பாத்து இந்த பிரச்சனை. 15 நிமிஷத்துல முடிஞ்சுடும்னு நெனைக்கிறேன்.... எப்பிடியும் வெயிலான் போய் கூட்டிக்கிட்டு போய்டுவாரு. ஆமா ரெண்டு பேருக்கும் மத்தவங்க ஃபோன் நம்பர் தெரியாதே. பாத்துக்கலாம்.

திருப்பூர்னு பேரு... பல்லடத்துக்கு பக்கத்துல இருக்கோம். எப்பிடி வேகமா போனாலும் 30 நிமிஷத்துக்கு கொறயாது. வாரா வாராம் யாராவது ஒரு பதிவர் வரதும் நாம விருந்தோம்பறதும்... என்னமோ போ இதுக்கே தனியா பட்ஜெட் ஒதுக்கணும் போல இருக்கு.... ஏதோ லக்கிலுக், சாருன்னாலும் பரவால்ல...


மொதல்ல நம்ம ஆபீஸ் இடத்த மாத்த சொல்லணும். புது பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கு. இருந்தாலும் வர பதிவர்களை நாமதான் மொதல்ல சந்திக்கறோம். நல்ல வேளை.. மகேஷ்... சாப்பாட்டு நேரத்துல வராரு... சமாளிச்சுடலாம்... இல்லேன்னா இன்னும் கொஞ்ச நாள் போனா ஆபீஸ்லயே கேக்க ஆரம்பிச்சுருவாங்க - இன்னிக்கு எதுவும் பதிவர் சந்திப்பெல்லாம் இல்லயான்னு.

ஈரவெங்காயம் (சாமிநாதன்)

இன்னிக்கும் யாரொ ஒரு புது பதிவராமே... சிங்கப்பூர்ல இருந்து வராராம்... போய்த்தான் பாப்போம். நமக்கு தெரிஞ்சு துக்ளக்னு ஒரு பத்திரிகை இருக்கு. வர ஆளு துக்ளக் மாதிரி இல்லாம இருந்தா சரி.

மகேஷ்

என்னடா இது 1/2 மணி நேரமா நிக்கறோம். வண்டி அனுப்பறேன்னாரு பரிசல். யாரு வருவாங்க, எப்பிடி கண்டு புடிக்கறது...ம்ம்ம்ம்..... போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வேற நிக்கறோம்.. எதாவது சந்தேகக் கேஸ்ல போட்டுட்டாங்கன்னா.... பரிசல்காரனுக்காக வெய்ட் பண்றேன்னு சொன்னா விட்ருவாங்களா? அந்த ஹோண்டா ஸ்கூட்டர்ல வர்றவரைப் பாத்தா வெயிலான் மாதிரி இருக்கே....

வெயிலான்

என்னடா இது பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டோம்.... ஆளு யாருன்னு தெரியலயே.... யாரு இவுரு நம்மளப் பாத்து சிரிச்சுக்கிட்டே வராரு.. கஸ்டம்ஸ்ல கூட இப்பிடி ஒரு ஆளு இருக்கற மாதிரி ஞாபகம் இல்லயே... என்ன கை குலுக்கறாரு... அட இவுருதான்மகேஷா.... நாம என்னமோன்னு நெனச்சோமே.... ஒஹோ பரிசலோட பதிவுகள்ல நம்ம ஃபோட்டோ பாத்திருப்பாரு போல. உக்காருங்க போகலாம். மணி ரெண்டு ஆகுது. எப்பிடியும் மூணே காலுக்கெல்லாம் பரிசல் வந்துடுவாரு. நாம நேரா இப்ப ஹோட்டலுக்கு போறோம். பரிசலும், ஈரவெங்காயமும் அங்க வந்துடுவாங்க.

மகேஷ்

ஹோட்டலுக்கு வந்து 20 நிமிஷம் ஆச்சு. வெயிலான் வேற ஃபோன்லயே இருக்காரு. நாம என்ன பண்றதுன்னு தெரியலயே? இங்க இருக்கப் போற 2 மணி நேரமோ, 3 ம்ணி நேரமோ இவுங்க ஃபோன்லயே பேசிக்கிட்டுருந்தாங்கன்னா? சாப்புடும்போதாவது பேச முடியுமா?

வெயிலான்

பரிசல் கூட பேசினேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல கெளம்பிடுவேன்னு சொன்னாரு. நாம போய் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட ஆரம்பிக்கலாம். இதோ சாமிநாதனும் வந்துட்டாரு.

(சாமிநாதனும் மகேஷும் அளவளாவல். மகேஷ், வெயிலான் மற்றும் சாமிநாதன் உள்ளே சென்று அமர்தல். உணவு தருவித்தல்)

பரிசல்

அப்பாடா.... கெளம்பியாச்சுன்னு சொல்லிட்டோம். அவ்வளவா ட்ராஃபிக் இல்ல. 3 மணிக்கு போய் சேந்துடலாம்.

மகேஷ்

வாங்க... பரிசல்... இண்டியன் ஸ்டேண்டேர்ட் டைம் 3 மணிக்கு வந்துட்டீங்க. ஆமா அஞ்சு நிமிஷத்துக்கு எத்தனை நிமிஷம்? 1:30 மணியிலேருந்து 5 நிமிஷம்னே சொல்லிட்டிருக்கீங்களே?

ஒரு வழியா எல்லாரும் சாப்ட்டு முடிச்சு, பில்லுக்கு பணம் குடுத்து (நன்றி : சாமிநாதன்) ரிசப்ஷன்ல வந்து பேச ஆரம்பிச்சோம். எந்த சாமி வேலையோ தெரியல.... 20 நிமிஷத்துக்கு யாருக்கும் ஃபோன் வரல. சாமிநாதன் பட்ட சாராய காச்சறது, ஸ்பெஷல் டேஸ்ட்டுக்கு என்ன சேக்கணும், முத்தூர்ல காபரே டான்ஸ் ஆட்டம் எல்லாத்தப் பத்தியும் விளக்கமா பேசினாரு. (இதுல ஆச்சரியம் இதெல்லாம் அவருக்கு 10 வயசுக்குள்ளயே பரிச்சயம் ஆயிருச்சாம்.)

அப்பறம் ஃபோட்டோ எல்லம் எடுத்துக்கிட்டு, டீ குடிக்க போனா வெயிலான் சத்தமில்லாம் ஜூட். பாவம் எதோ ஆபீஸ் சிக்கல். பிறகு சாமிநாதன் உத்தரவு வாங்கிக்க (குடுக்கலைன்ன என்ன பண்ணுவீங்க? - பரிசல்) நாம பரிசல் கூட வண்டில பஸ் ஸ்டாண்டுக்கு. நான் எதோ கேள்வி கேக்க பரிசல் வேற என்னமோ சொல்ல, அப்பறம்தான் தெரிஞ்சுது அவர் பாஸ் கூட ஃபோன்ல பேசிக்கிட்டிருக்காரு.

நிற்க. நாம என்னமோ தமாஷா எழுதினாலும், அவங்களுக்கு இருக்கற பரபரப்பான வேலைகளுக்கு நடுவுலயும் நம்மள மாதிரி லீவுல வந்து ஊர சுத்தறவங்களயெல்லாம் வரவேற்பு செஞ்சு, சாப்பாடு போட்டு... இதெல்லாம் சாதாரண விஷயமில்ல. சக பதிவர்ங்கறதோ, சிங்கப்பூர்ல இருந்து வந்திருக்கோம்கறதோ ஒரு காரணமா இருக்க முடியாது. நட்புதான் எல்லாத்துக்கும் மேல தெரியுது. இத்தனைக்கும் நான் வெறுங்கையோட போனேன். அவங்களுக்கு குடுக்கறதுக்காக வெச்சுருந்த சில புத்தகங்களையும் சென்னைல இருந்து கிளம்பற அவசரத்துல எடுத்துக்க மறந்துட்டேன். (சொல்ல மறந்துட்டேனே... அன்னிக்குதான் PMP பரிச்ச எழுதி பாஸ் பண்ணிட்டேன்... இந்த விடுமுறைல பண்ணின இன்னொரு உருப்படியான காரியம்) இன்னொரு நண்பர் கிட்ட சொல்லி க்ருஷ்ணா முகவரிக்கு அனுப்ப சொல்லியிருக்கேன்.

பரிசல், வெயிலான், சாமிநாதன் : ஆயிரமாயிரம் நன்றிகள். ஒரு இனிய நட்பை அனுபவிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு. மூணு பேருமே பெரிய பொறுப்பான பதவிகள்ல இருந்தாலும் ரொம்ப எளிமையா unassuming ஆக இருந்தது ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. வாழ்த்துக்கள்.

மறுபடி எப்பவாவது ஃபோன் பிடுங்கல்கள் இல்லாம சாவகாசமா சந்திக்க வாய்ப்பு கெடச்சா மகிழ்ச்சியா இருக்கும்.

அய்யய்யோ.... மேல ஃபோட்டோ மாறிப் போச்சு. ஒரிஜினல் ஃபோட்டோ இங்க.



(வெயிலான் ரமேஷ், ஈரவெங்காயம் சாமிநாதன், துக்ளக் மகேஷ்)


(ஈரவெங்காயம் சாமிநாதன், பரிசல் க்ருஷ்ணா, துக்ளக் மகேஷ்)


Saturday, October 4, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம் - புதுகை அப்துல்லாவுடன்....

"ஹலோ புதுகை அப்துல்லாவா?"

"ஆமாம்... நீங்க....?


"மகேஷ்... துக்ளக் மகேஷ்..."


"ஆஆஆ... வாங்க வாங்க...எப்ப வந்தீங்க.... உங்க ஃபோனுக்காக காத்துக்கிட்டிருந்தேன்.."


"நேத்து காலைலதான் டில்லியிலிருந்து திரும்பினேன்.... இன்னிக்கு உங்களை சந்திக்க முடியுமா? உங்க ஆபீஸ் எங்க இருக்கு?"


"ஆபீஸ் போயஸ் கார்ட்ன்ல.... இப்ப மணி 4 ஆகுது... ஒரு 5 மணி சுமாருக்கு சந்திக்கலாமா?"


"நானும் அந்தப் பக்கம்தான் வந்துக்கிட்டிருக்கேன்... சந்திப்போம்"


அப்பறம் பக்கத்துல இருக்கற என்னோட அக்கா வீட்டுல இருந்து கிளம்பினதுமே மழைத்தூரல். 100 மீட்டர் போறதுக்குள்ளயே பயங்கர மழை. அப்துல்லா சொன்ன ஒரு தெருவைத் தாண்டிப் போயிட்டு அங்கிருந்து ஃபோன் பண்ணினா நான் நின்னுக்கிட்டிருக்கற இடம் அவருக்கு புரியல. அவர் சொல்ற இடம் எனக்குத் தெரியல. மழைல ஒரு சின்ன சந்தோட கடைசிக்கு போனப்பறம்தான் அது முட்டுச்சந்துன்னு தெரிஞ்சுது. அப்பிடியே கார ரிவர்ஸ் எடுத்து மறுபடி திரும்பி வரதுக்குள்ள.........


ஒரு வழியா ஆபீஸ கண்டு புடிச்சு போனா வாசல்ல வேற ஒரு கார் குழிக்குள்ள மாட்டிகிட்டு நிக்குது. நடுத்தெருவுல கார விட்டுட்டு மழைல நனஞ்சுக்கிட்டே உள்ள போனா... பாக்கறவங்கள்லாம் மகேஷ் சாரா, மகேஷ் சாராங்கறாங்க.


"அப்பிடி உக்காருங்க இப்ப வந்துருவாரு....சொல்லிட்டுதான் போனாரு....."


ரெண்டு நிமிஷத்துல அப்துல்லா ப்ரசன்னமானார். நோன்பு முடிக்கற நேரம். இருந்தாலும், நம்மளப் பாத்த ஒடனே, ஆபீஸ் காரங்க கிட்ட சொல்லி நம்ம கார உள்ள வெக்க சொல்லிட்டு, அவர் கார்ல அவரோட வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போனாரு. ரொம்ப நாள் பழகின மாதிரியான அந்த இயல்பான அழைப்பும், அவரோட எளிமையும் (ரொம்ப பெரிய பதவில இருக்காரு) ஆச்சரியமா இருந்துச்சு. அதோடயே அவர் வீட்டுக்கு போனா, அவருடைய மற்ற நண்பர்ளுடைய அறிமுகமும் கிடச்சுது. வீட்டுலயே அவர் நோன்பு முடிச்சு, கஞ்சி குடிச்சுட்டு வந்த பிறகு, கீழ வந்து ஒரு டீயும் குடிச்சோம். நிறைய பேசினோம்... பல விஷயங்கள பகிர்ந்துக்கிட்டோம். கொஞ்சம் "அதிகப்பிரசங்கித்தனமாக்" கேட்ட சில கேள்விகளுக்கு கூட பொறுமையா பதில் சொன்னாரு. பேசிக்கிட்டே இருந்ததுல ஃபோட்டோ எடுத்துக்கணும்னு தோணவே இல்ல. முதல் முறையா சந்திக்கிறோம்கற உணர்வே இல்லாம ரொம்ப இயல்பா இருந்தது இன்னும் நிறைவா இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திச்ச திருப்தியும் இருந்தது.


சென்னைய விட்டு கிளம்பறதுக்குள்ள இன்னொரு முறை சந்திக்கணும்னு நெனச்சேன். ஆனா அவர் விடுமுறைல குமரகம் போயிட்டாரு. சந்திக்க முடியாததுல ஒரு வருத்தம். ஆனா சென்னைக்குப் போக நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கு.