Showing posts with label book review. Show all posts
Showing posts with label book review. Show all posts

Wednesday, October 8, 2008

அவனோடே ராவுகள்... 4

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3



ONE
Author : Richard Bach


"இன்றைக்கு நிகழக்கூடிய ஒரு ஒரு சிறிய மாற்றம், முற்றிலும் மாறுபட்ட நாளையை நமக்கு அளிக்கக்கூடும். கடினமான பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆச்சரியகரமான பரிசுகள் காத்திருக்கும். ஆனால் அவை காலத்தினுள் மறைந்திருக்கும். நாம எடுக்கற கவனமற்ற, குருட்டுத்தனமான ஒவ்வொரு முடிவுக்கும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் ஒரு உத்தரவாதமும் கிடையாது"

புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கா? அப்பிடி இருந்தா அது ரிசர்ட் பாக்-க்கோட தப்பு இல்ல. மொழி பெயர்த்த என்னொட தப்பா இருக்கும்.

இப்ப ஒரு சின்ன கற்பனை. கடந்த காலத்துல இருந்த 'நாமும்' நிகழ் கால 'நாமும்' சந்திச்சா எப்பிடி இருக்கும்? இணயா இருக்கற இரு வேறு உலகங்கள்ல இருக்கற 'நாம' நேருக்கு நேர் பாத்துக்கிட்டா எப்பிடி இருக்கும்? காலத்துக்கு பின்னால நமக்காக என்ன காத்துக்கிட்டிருக்குன்னு 'இப்ப' தெரிஞ்சா, அத நாம எப்பிடி மாத்தவோ, ஏத்துக்கவோ நம்மளை தயார் பண்ணிப்போம்? (ஏண்டா இப்பிடி போட்டு கொழப்பற? இப்ப, அப்பறம்னு.... சரி... சரி... எவ்வளவு நாளைக்குத்தான் கொலை, கொள்ளை, சொத்து தகராறுன்னே படிச்சுக்கிட்டிருக்கறது?) ரிசர்ட் பாக்கும், மனைவி லெஸ்லியும் ஒரு வித்தியாசமான பயணத்துல அவுங்க போகாத பாதையில என்ன கத்துக்கறாங்க, அதுல நம்ம எல்லாருக்கும் பொதுவானதா என்ன இருக்குங்கறதுதான் இந்த புத்தகம். அவங்க போற அந்த பயணத்துல கற்பனையும், பயமுந்தான் உலகத்தை மீட்கவோ (அல்லது அழிக்கவோ) தேவையான கருவிகள். (என்ன... பாய பிறாண்ட ஆரம்பிச்சாச்சா?)

12B படம் பாத்துருப்பீங்களே.... கிட்டத்தட்ட அதுமாதிரியான 'கதை'தான் இதுவும். வாழ்க்கைல நாம எடுக்கற ஒவ்வொரு முடிவும் நம்மையும், நம்ம சுத்தி இருக்கற உலகத்தையும் எப்பிடி மாத்தி அமைக்குதுங்கறதை அலசற மாதிரியான புத்தகம். இன்னிக்கு காலைல பஸ்ல பக்கத்து உக்காந்தவங்களைப் பாத்து சிரிச்சது, பஸ் ஸ்டாண்டுல பப்ளிக் டாய்லட்டுக்குள்ள போறதா வேண்டாமான்னு 5 நிமிஷம் யோசிச்சுட்டு தாங்க முடியாம போகலாம்னு முடிவு பண்ணது, லிஃப்ட் கேட்டது ஒரு காலேஜ் பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக வண்டிய நிறுத்தினதுன்னு நம்மளோட ஒவ்வொரு முடிவும் நம்மோட அடுத்த சில விநாடிகளையோ அல்லது மீதி வாழ்க்கையையுமோ பல விதங்கள்ல பாதிக்கலாம். ரொம்பவே ஆச்சரியகரமான அல்லது எதிரிக்குங்கூட வரக்கூடாத விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மாதிரி சமயங்கள்ல வேற மாதிரி முடிவு எடுத்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரிவர்ஸ் கியர் போட்டு அந்த விநாடிக்குப் போயிட்டு, அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தா.... போற வழில அங்க ஒரு முடிவு எடுக்கறோம்.... அது வேற மாதிரி இருந்தா.... இப்பிடி கற்பனை பண்ணிக்கிட்டே போனா? எப்பிடி சுத்தினாலும் மறுபடி எங்க வருவோம் தெரியுமா? என்ன ஒண்ணு தெளிவாத் தெரியும்? இவரோட மொதல் புத்தகம் "ஜொனாதன் லிவிங்ஸ்டன் - ஸீ கல்" ல சொன்ன அதே செய்திதான். அன்பு, மன்னிப்பு, அமைதி. இதுதான் எல்லாத்துக்கும் மருந்து.

இவரோட எல்லாப் புத்தகங்கள்லயும் (இன்னொரு புத்தகம் Illusions [காட்சிப் பிழைகள்]) 'பறத்தல்'ங்கறது ஒரு முக்கியமான அம்சமா இருக்கு. யோசிச்சுப் பாத்தா, ஒரு வித்தியாசமன கோணத்துல உலகத்தையும், நம்ம சுத்தி நடக்கறதையும், நம்மளை நாமே பாக்கறதுக்கும் பறக்கறதுங்கற உத்திய இவர் கையாளுகிறாருன்னு நெனைக்கத் தோணுது. இந்தப் புத்தகத்தை பொறுத்த வரைக்கும், பல ஐடியாக்களை அங்கங்க விதைச்சிருந்தாலும் சிலதுகள விவரமா தொடர்ந்து விளக்கல. அது ஒரு குறை மாதிரி தெரிஞ்சாலும், படிக்கறவருக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்துட்டார்னு வெச்சுக்கலாம். படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தாலும், அங்கங்க போர் அடிக்கற மாதிரியும் தோணுச்சு. சில பக்கங்களை அப்பிடியே வேகமா புரட்டிட்டு போயிட்டேன். ஆனா சில பத்திகள மூணு நாலு தடவ படிச்சாத்தான் புரியற மாதிரி இருந்தது. அது கூட என்னுடைய புரிதல்ல இருந்த குறைபாடா இருக்கலாம். அல்லது நெஜமாவே அது அவருக்கே குழப்பமில்லாம எழுத முடியாம இருக்கலாம். ஏன்னா, வேற ஒரு புத்தகத்துல அவரே சொல்லியிருக்காரு "என்னோட எண்ண ஓட்டங்களுடைய வேகத்துக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை"ன்னு. அது ஒரு பக்கம் இருந்தாலும், இது மாதிரியான வித்தியாசமான, சிக்கலான கற்பனைகளை எழுத்தில் கொண்டு வரதுல சவால்கள் நிறையவே இருக்கு.

நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. முடிஞ்சா உங்க கருத்தை இந்த பதிவுல பின்னூட்டமாவோ அல்லது ஒரு தனி பதிவாகவோ போடுங்க. ஒவ்வொருத்தரோட வாசிப்பனுபவமும் ஒவ்வொரு மாதிரி. என்ன சொல்றீங்க?

சிறு விளக்கம்: நண்பர் பழமைபேசியோட பின்னூட்டத்த படிக்கும்போதும், நண்பர்கள் அப்துல்லா, விஜய் ஆனந்த் - இவங்களோட ச்சாட் பண்ணினபோதும், நான் (அல்லது இந்தப் புத்தகம்) சொல்ல வந்ததை வேற மாதிரியா புரிஞ்சுக்கிட்ட மாதிரி தோணுச்சு. அதுதான் இந்த விளக்கம்.

அதாவது, இதுல 'சம கால' நிகழ்வுகள் எதுவும் இல்ல. வாழ்க்கைல ஒரு கட்டத்துல ஒரு முடிவு எடுத்து முன்னால போறோம். அப்பிடி முன்னால போன பிறகு, அந்த குறிப்பிட்ட கட்டத்துல வேற மாதிரி முடிவு பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும், அதோட தாக்கம் தொடர்ந்து எப்பிடி இருந்திருக்கும்னு கற்பனை பண்றதுதான் ஐடியா. நடந்தத மாத்த முடியாது. ஆனா மாத்தினா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுப் பாக்கறது. அந்த படிப்பினைய எதிர்காலத்துல சில முடிவுகள் எடுக்கும்போது உபயோகப்படுத்திக்கறது. இதுதான் ஐடியா.

இப்ப, மேல சொன்ன உதாரணத்துல, பஸ்ல பக்கத்துல உக்காந்திருக்கறவரப் பாத்து சிரிக்கலாம், பேசலாம்னு முடிவு பண்றோம். ஒண்ணு, அவரும் ஒரு சக பதிவரா இருக்கலாம், நல்ல பெரிய பதவில (அப்துல்லா அண்ணன் மாதிரி), மோகனப்ரியா மாதிரி இன்னொரு ஹரிப்ரியாவுக்கு கேரம் விளையாட்டுல முன்னேற உதவி செய்யலாம். அது ஒரு உலகம். அல்லது அந்தாளு ஒரு தப்பிச்சு ஓடி வந்த கைதியா இருந்தா, பின்னால ஒடி வந்து புடிச்ச போலீசு (சும்மா ஒரு கற்பனைதான் ஹி..ஹி) நமக்கும் சேத்து லாடம் கட்டலாம். வாழ்க்கையே மாறிப்போகும். இது வேறு உலகம். ஆனா அந்த குறிப்பிட்ட கட்டத்துல இருந்து காலக்கணக்குப்படி பாத்தா ரெண்டும் "இணையா" இருக்கற உலகங்கள். இந்த "கால இணை"யத்தான் வேற வேற உலகங்களா கற்பனை பண்ணிக்கிறது. ஒண்ணு நாம ஒரிஜினலா முடிவெடுத்த நிஜ உலகம். இன்னொன்று வேற முடிவு எடுத்திருந்தான்னு யோசிச்சு பாக்கற "இணை"யான கற்பனை உலகம். (என்னது...பாய சுத்தமா பிறாண்டி சேமியா உப்புமான்னு நெனச்சு சாப்ட்டு முடிச்சாச்சா??)


இது ஒரு அடிப்படையான, சுலபமான உதாரணம். அப்பறம் உங்க கற்பனை.

Wednesday, September 10, 2008

அவனோடெ ராவுகள்...3

முந்தைய பதிவுகள் ...1 ...2

நீங்க இதுவரைக்கும் போகவே போகாத இடத்துல நீங்க உங்க வாழ்க்கையோட ஒரு பகுதிய கழிச்ச மாதிரியா உணர்ந்திருக்கீங்களா? நீங்க இதுவரைக்கும் உணராத சில உணர்வுகளை அனுபவிச்சுருக்கீங்களா? ரெண்டுமே இந்த புத்தகத்தை படிச்சா கிடைக்கும்.


The Kite Runner
Author : Khaled Hosseini

இந்த புத்தகத்தைப் பத்தி யாரும் சொல்லாத ஒண்ணை நான் சொல்லிட முடியாது. அந்த அளவுக்கு நிறைய பேரு எழுதித் தீர்த்துட்டாங்க. இரண்டு சிறு வயது நண்பர்களுக்கிடையேயான உறவையும், உணர்வுகளையும் பத்தின கதை. காலீத் ஹொஸெய்னியோட முதல் கதைன்னு கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. மனித உணர்வுகள அவ்வளவு அற்புதமா எழுத்துல கொண்டு வந்திருக்காரு.

போர்னாலயும் தீவிரவாதத்துனாலயும் சீரழிஞ்சுக்கிட்டுருக்கற ஆப்கானிஸ்தான்ல நடக்கற கதை. அமீர் ஒரு பணக்கார வீட்டு பையன். ஹாஸன் அவுங்க வீட்டுல வேலைக்காரனோட பையன். கதைல பல அடுக்குகள் இருக்கற மாதிரி தோணலாம். ரெண்டு சிறுவர்களுக்கு நடுவுல இருக்கற நட்பு ஒரு பக்கம், உலகத்தால புறக்கணிக்கப்பட்ட, காலத்தின் கோலத்தால சின்னாபின்னமான ஒரு நாடு மறுபுறம். அப்பாவோட இருவேறு முகங்களை ஏத்துக்கமுடியாத, கோழைத்தனத்தோட போராடுற, குற்ற உணர்ச்சியால மருகுகிற அமீர்ங்கற பணக்கார சிறுவனோட போராட்டம் இன்னொரு பக்கம்.

ஆனா எனக்கென்னமோ, நம்ம எல்லாருக்கும் பொதுவான, சுலபமா நம்மளோட தொடர்பு படுத்திக்க கூடிய, ஆழமான 2 உணர்வுகளை பத்தின கதை மாதிரி தோணுது. கதை நடந்த இடத்துல இருந்து நேர்ல அனுபவிச்ச மாதிரி நம்ம உணர முடியறதுதான் இந்த கதையோட வெற்றின்னு நான் நினைக்கிறேன்.

ஓண்ணு, பழய நினைவுகள். அதுல எதுவுமே சரியாக இல்லாட்டாக் கூட. ஒரே ஆத்துல மறு முறை இறங்க முடியாதுன்னு சொல்லுவாங்க. (One cannot step into the same river) காலம்கற சக்தி பழச முழுசாவோ, பாதியாவோ அழிச்சுடுது. அதுனாலதானோ என்னவோ, நாம் படிச்ச பள்ளிக்கு இன்னிக்கு போனா, கட்டடங்கள் அதே மாதிரி அதே இடத்துல இருந்தாக் கூட, அந்த பழய நினைவுகளை அதே வீரியத்தோட திரும்ப அனுபவிக்க முடியாம போகுது. அதுனாலதான், அமீர் அமெரிக்காவுக்கு போனலும் தன் நண்பனோட பட்டம் விடுற சுகத்தை இழந்து தவிக்கறதை நாமும் உணர முடியுது. அதே மாதிரி, அமீர் காபூலுக்கு திரும்ப வந்து அதோட இன்றைய கோலத்த பாத்து சகிக்க முடியாம மருகறதையும் பார்க்கும்போது எப்பிடி ஆறுதல் சொல்றதுன்னு தவிக்கிறோம்.

ரெண்டாவது குற்ற உணர்ச்சி. நம்மள்ல யாருக்கு இல்லை? தன்னோட உயிர் நண்பனை செய்யாத ஒரு குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வெச்சதுக்கக அமீர் வாழ்க்கை பூராவும், அதை விட்டு வெளிய வர போராடுறான். அது முடியுமா? அமீரோட அப்பா பிறகு ஏதோ காரணத்துனால அமெரிக்கவுக்கு குடும்பத்தோட இடம் பெயர்ந்தாலும், அமீருக்கு நல்ல கல்வியும், நல்ல வாழ்க்கையும் அமைஞ்சாலும், கண் முன்னால நண்பனை எல்லாரும் திருடன்னு ஏசுரதப் பாத்தப்பறமும் தான் ஒண்ணும் செய்ய முடியாம இருந்தத நினைச்சு வருந்தாத நாளே இல்லை. இத்தனைக்கும் அமீர் வேற ஒருத்தனால பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு மறு வாழ்வு கொடுக்கறான். ஒரு ஆப்கானிக்கு, இது ஒரு உயர்ந்த தியாகம். அப்பாவோட மறு புறத்தையும் அவர் செய்த, செய்யற கூடாத செயல்களையும் பார்த்து ரொம்பவே வெறுத்துப் போறான்.

பின்னால, தன் நண்பன் ஹாஸனின் மகனோட காபூலுக்கு திரும்ப வரும்போது, அமீருக்கு கிடைச்ச ஒரு சுதந்திரத்தை நாமும் கூடவே முழுமையா உணரலாம். சுமையில்லாத, லேசான ஒரு மனச விட சுதந்திரம் வேற என்ன இருக்க முடியும்னு கேக்கத் தோணுது. அமீர், அந்த சின்னப் பையனோட பட்டத்தை துரத்திக்கிட்டு ஓடும்போது, தொலைந்து போன எல்லாத்தையும் மீட்டுக்க ஒரு வழி கிடைச்சுட்ட மாதிரி தெரியுது.

இதை திரைப்படமாப் பாத்தபோது இன்னும் அழுத்தமா என்னை பாதிச்சுது. முடிஞ்சா இந்த கதைய புத்தகமாகவோ, படமாகவோ பார்க்க முயற்சி பண்ணுங்க. இது மாதிரி நம்ம உணர்வுகளை முழுமையா ஆளுகிற கதைகள் ரொம்ப குறைவு.