Saturday, April 30, 2011

உறங்குவது போலும்........


நண்பருடன் ஒரு சிறிய விவாதம். தூக்கத்தில் நாம் மிகுந்த நேரத்தை விரயம் செய்கிறோம் (non-productive) என்றார். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 2 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது அவசியமற்றது ; ஒரு நாளைக்கு 16 மணி நேரம் என்று வாரத்துக்கு 6 நாட்கள் (96 மணி நேரம்) வேலை செய்ய அனுமதிக்கும்படி பணியாளர் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார். இத்தனைக்கும் அவருடையே சகோதரர் ஒரு மருத்துவர்.

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்களைப் பற்றி பேசவில்லை. நிஜமாகவே தூக்கம் என்பது நேர விரயமா? மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. இல்லாது போனால், மனித உடல்கூற்றுப் படி, இயக்கமும் உற்பத்தி திறனும் மங்கி, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இறங்கி வளர்ச்சி குன்றிய நாடாகத்தான் போகும்.

அது நிற்க. விவாதம் தொடர்ந்தது. அறிவியல், மருத்துவம் , வானவியல் இவையெல்லாம் வாழ்வியலில் கலக்கும் முன்பிருந்து இருக்கும் வேதம் என்ன சொல்கிறது? ("வேதம்" என்பது, மதம் - குறிப்பாக இந்து மதம் -மற்றும் ஆத்திகம் தொடர்புடையது என்ற கருத்து உடையவர்கள் இந்த வரியுடன் திரும்பி விடலாம்). வேதங்களைப் பொறுத்தவரை மதம், ஆத்திகம் போன்றவை மிக மலிவான விஷயங்கள். அவற்றின் ஆழமும், அகலமும் இந்த பிரபஞ்சத்தை விடவும் அதிகம்.

இன்று அறிவியல் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு பதில் தேட முயன்று கொண்டிருக்கிறது . (இது பற்றிய முந்தைய இடுகை) அறிவியல் முயல வேண்டும். உண்மை என்பது தேடி அறிந்தே தீர வேண்டிய ஒன்று. ஆனால், இன்றைய நிலையில் அறிவியலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள பல் செய்திகள் எத்தனையோ காலத்திற்கு முன்பே வேதங்களில் இருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமே.

கடவுள் ஒளி உண்டாகட்டும் ; பூமி உண்டாகட்டும் ; உயிர்கள் உண்டாகட்டும் என்று நினைத்தார், படைத்தார் என்பது பரவலான நம்பிக்கை. போலவே, 2012-ல் பிரளயத்தில் (deluge) உலகம் அழியும் ; உலகமே நீரில் மூழ்கி விடும் என்பது போன்ற நம்பிக்கைகளும் பல மதங்களிலும் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் வேதமோ, இதையெல்லாம் விடு ; 'நித்யப் பிரளயம்" என்று ஒன்று நாள்தோறும் உனக்குள்ளேயே நிகழ்வது உனக்குத் தெரியுமா என்கிறது. அதுதான் 'தூக்கம்'. எப்படி?

"லயம்" என்றால் ஓய்தல் அல்லது ஒன்றுதல் என்று கூறலாம். நாம் சுய உணர்வுடன் (consciousness) இருக்கும்போது நம் மனதில் உள்ள என்ணங்கள், நாம் தூங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, ஒடுங்கி, ஓய்ந்து, ஒரு புள்ளியில் 'லயித்து' (withdrawn / unmanifest) விடுகின்றன. மறுபடி விழிக்கையில், 'மனம்' என்பதும் அதில் எண்ணங்கள் என்பதும் மறுபடி 'தோன்றி' (manifest) நம் சுய உணர்வின் புலனுக்கு தென்படுகின்றன. (இது பற்றிய முந்தைய இடுகை) நாம் தூங்கி விழிக்கும்போது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இது எங்கிருந்து வந்தது?

இந்தப் பிரபஞ்சத்தில் நம் சுயஉணர்வுக்கு புலப்படும் / புரியும் ஒவ்வொரு பொருளும் அணுக்கள் / துகள்களால் ஆனது என்று அறிவியல் கூறுகிறது. அந்த அணுக்கள் / துகள்களுக்கும் அப்பாற்பட்டதை "வெளி" (field) என்கிறது. அதை அறியத்தான் அறிவியல் முயன்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்றை, அந்த ஆனந்தமான அமைதியை, அந்த மூலசக்தியை (energy) வேதம் "பிரம்மம்" என்றும், நம் சுய உணர்வில் புலப்படுவை எல்லாம் அதன் வெளிப்பாடுகளே (manifests) என்றும் கூறுகிறது. தூக்கம் ஒரு வகையான தியானம். நாம் தூங்கும்போது நிகழும் பிரளயத்தில், நம் மனம் அதன் மூலமான சத்தில் லயித்து, மீண்டும் வெளிப்படும்போது புத்துணர்வுடன் வெளிப்படுகிறது. எப்படி கடலில் ஒரு அலை எழுந்து, கடலிலேயே விழுந்து, கடலோடு லயித்து, மறுபடி இன்னொரு அலையாக எழுகிறதோ அதைப் போலவே. எந்த மூலசக்தியின் வெளிப்பாடாக மனமும், எண்ணங்களும் தோன்றினவோ, அதே மூலசக்தியிடம் லயித்து மீண்டும் தோன்றும்போது புத்துணர்வும், அதன் காரணமாக உடலியக்கமும், நமது அன்றாட வாழ்வும் நிகழ்கின்றன. அந்தப் புத்துணர்வு இல்லாமல் உடல் உழைப்பும், உற்பத்தித் திறனும் இல்லை. மனம் ஓயாமல், உடலுக்கு சக்தி கிடைக்காது. புத்துணர்ச்சி பெறுவது என்பதையும் தாண்டி, நம் இருப்பை, இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை நமக்குப் புரிய வைப்பதும் தூக்கமே.

நாம் உணரும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றமும், மறைவும், அதில் உயிர்களின் பிறப்பும், இறப்பும் கூட அந்த மூலசக்தியின் அலைகளே.

"உறங்குவது போலும் சாக்காடு ; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

"புனரபி ஜனனம் ; புனரபி மரணம்"

வால் : இதையெல்லாம் ஒருபுறம். மறுபுறம், பணியாளர் நலன்கள், அது தொடர்பான சட்டங்கள், அடிப்படை பொருளாதார விதிகள் இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுதும் வாரத்திற்கு 40 மணி நேரம் பணி என்பது சரியான ஒன்றுதான். மேலும் மேலும் பணி நேரத்தைக் கூட்டுவது பல விதங்களிலும் பாதிப்புதான். Only be counter productive.

Wednesday, April 20, 2011

மீண்டும் ஜே.கே.பி. !!!


பட்ட கால்லயேதான் படும். மறுபடியும் எழுத வந்தாச்சு. மீண்டும் ஜே.கே.பி. !!! பயப்படாதீங்க. ஒரேடியா அடிக்க மாட்டேன். தெளிய வெச்சு தெளிய வெச்சுதான் அடிப்பேன்.

6 மாசமா எழுத முடியாம போனாக் கூட அப்பிடி இப்பிடின்னு 98 பேர் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டிருக்காங்க. 1 மாசம் முன்னால எதேச்சையா பார்த்தபோது 100 பேர் !!! அடடா.. .எழுதாததுக்கே 100ன்னா எழுதியிருந்தா 1000 ஆயிருக்குமோ... அலெக்ஸால அலேக்கா தூக்கி மொத 10ல உக்காத்தி வெச்சுருப்பாங்களோன்னு நினைச்சதும் உண்டு. இப்பதான் தெரியுது... வழி தவறி வந்து ரெண்டு நிமிஷம் திண்ணைல உக்காந்துட்டு... இந்த அக்கப்போருக்கு வெயில்லயே அலையலாம்னு ஓடிட்டாங்க. பாவம்... பொழச்சுப் போகட்டும்.

* * * * * * * * * * *

தேர்தல் முடிஞ்சு எல்லாரும் நகம், விரல், கை, கால், பக்கத்துல இருக்கறவங்க குரல்வளைன்னு எதையாவது கடிச்சுக்கிட்டே பதட்டமா இருக்கலாம். அல்லது "ஹ்ம்ம்ம்.... பச்சாப் பசங்க.... 1 மாசம்... 30 நாள்.... எவ்வளோ சவுகரியம்... என்னென்ன பண்ணலாம் தெரியுமா?"ன்னு குமரிமுத்து மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கலாம். ஆனா பத்திரிக்கைகளுக்கு அல்வா டைம். "கிராமங்களில் கருத்து கணிப்பு", "மக்களின் மனத் துடிப்பு"ன்னு எதையாவது அடிச்சு விட்டு, குட்டையக் கொழப்பி கல்லா கட்டலாம். எஞ்சாய் பண்ணுங்க மக்களே !!

* * * * * * * * * * *

துக்ளக்ல (அட.. .ஒரிஜினல் துக்ளக்ல...) 'சோ' எழுதியிருந்ததைப் படிக்கும்போது சிப்பு சிப்பா வந்தது. இவங்களும் இலவசம், அவங்களும் இலவசம்னு சொல்லிட்டதால "இலவசம்"ங்கற ஃபேக்டர் அடிபட்டு போகுதாம். என்னா லாஜிக் !!! வடிவேலு, சிங்கமுத்துவை எல்லாம் இஞ்சித்தண்ணில கரைச்சு குடிச்சு ஏப்பம் விட்டுட்டார். சரி.... ஆதரிக்கறதுன்னு முடிவு செஞ்ச பிறகு லாஜிக்கெல்லாம் பாத்தா முடியுமா? ஆனா இப்பிடியே லாஜிக் பாத்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பாத்தா.....

"ரெண்டு பேரும் இனிமே லட்சம் கோடிக்கு அதிகமா ஊழல் பண்றதில்லைனு சொல்லிட்டதால ஊழல் ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"ரெண்டு பேரும் எதிர்கட்சி பிரமுகர்களை குண்டு வெச்சு மட்டுமே கொல்வோம், அருவாளால வெட்டமாட்டோம்னு சொல்லிட்டதால வன்முறை ஃபேக்டர் அடிபட்டு போகுது."

"சொந்தப் பிரச்னைன்னா மட்டுமே டெல்லிக்கு போவோம் ; மத்த பிரச்னைக்கு எல்லாம் புறா கால்ல சீட்டு கட்டி அனுப்புவோம்னு ரெண்டு பேருமே சொல்லிட்டதால டெல்லிக்கு காவடி தூக்கற ஃபேக்டர் அடிபட்டு போகுது."

'சோ' மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.

* * * * * * * * * * *

சிங்கைலயும் அடுத்த மாசம் 7ந் தேதி தேர்தல். முதல் முறையா இங்க நேரடியா பாக்கறேன். என் வரையில இங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு. தேர்தல் முறைகள்ல இல்ல ; அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தலை அணுகற முறைல. நேரடியான கேள்விகள் கேக்கறாங்க. பிரதமர்ல இருந்து எல்லாரும் அதை விட வெளிப்படையா பதில் சொல்றாங்க. நெகடிவ்வா பார்க்கறவங்களும் இருக்காங்க. நான் ரொம்ப ஆர்வமா பாத்துக்கிட்டுருக்கேன். அநேகமா அங்க ரிசல்ட் வரும்போது இங்கயும் வந்துடும்னு நினைக்கிறேன்.

* * * * * * * * * * *

வழக்கம்போல போரடிச்சாச்சு. அப்பறம் பாக்கலாம். _/\_