
ஊர்ல இருக்கற வானரங்களுக்கும் அக்ரஹாரத்துக்கும் இருக்கற பந்தம் அலாதியானது. மார்கழி மாசம் ஆச்சுன்னா எல்லாத்துக்கும் பக்தி எங்கேருந்தோ பீரிக்கிட்டு (நன்றி: வெ.ஆ.மூர்த்தி) வந்துரும். காலங்காத்தால 5 1/2 மணிக்கெல்லாம் ட்ராயர் மேலயே ஒரு வெள்ளத் துண்ட வேட்டி மாதிரி கட்டிக்கிட்டு (அரணாக்கயருக்குள்ள சொருகி வெச்சுக்கணும்... இல்லன்னா நம்ம க்ளாஸ்மேட்டு பொண்ணு வீட்டு வாசல்ல நின்னு அரிசி வாங்கற நேரம் பாத்து அவுந்து மானத்த வாங்கும்) அக்ரஹாரத்து க்ருஷ்ணன் கோயில் மாமா வீட்டுல இருந்து கிளம்பி அப்பிடி மேக்க அக்ரஹாரம் பூரா ஒரு ஊர்வலம். பத்து பேர் பாடிக்கிட்டே போனா பத்து கொரலும் தனித் தனியாக் கேக்கும்.. அவ்வளவு 'ஸின்க்'கா பாடுவாங்க. வீடு வீடா நின்னு கை கால் கழுவி, அரிசி வாங்கி பையில போட்டுக்கிட்டே போய், தளி ரோட்டுல லெஃப்ட். குட்டைப்பிள்ளயார் கோவில் வாசல்ல "கணேச சரணம் ; சரணம் கணேசா"ன்னு ஓங்கி ஒரு கொரல் பாடிட்டு, மறுக்கா லெஃப்ட். கச்சேரி வீதில சப்ஜெயில், கோர்ட்டு, ஜேகப் டாக்டர் வீடு தாண்டி லெஃப்ட். கொஞ்ச தூரம் போனா மறுபடி அக்ரஹாரம். ரைட்ல திரும்பினா அனுமார் கோயில்.
நாமளும் சும்மாவோ இல்ல ஒரு ஜால்ராவத் தட்டிக்கிட்டேவோ போனா, கடைசீல ஒரு 7 மணி வாக்குல அனுமார் கோயிலுக்கு போய் சேரும்போது வெண்பொங்கலோ, சக்கரப் பொங்கலோ, சுண்டலோ சூடா ரெடியா இருக்கும். நமக்கா பொறுமையே இருக்காது. கவுண்டமணி "கெடா எப்ப வெட்டுவாங்க?"ன்னு பொலம்பற மாதிரி, "அனுமாருக்குதான் வெண்ண பூசியாச்சுல்ல?" "அதான் பூஜை முடிஞ்சுதில்ல?"ன்னு பொங்கல் பாத்திரம் இருக்கற டேபிளையே பாத்துக்கிட்டு உக்காந்திருப்போம். மொதல்லயே பாதாம் எல, வாழை எலன்னு நல்லா பெருசு பெருசா எடுத்து வெச்சுருப்போம். பிரசாதம் குடுக்கறவரு பாத்தரத்து கிட்ட போனவுடனேயெ வானரமெல்லாம் ரெடியாயிரும். ஆனாலும் "இதுக்கு ஒண்ணும் நாங்க ஆலாப் பறக்கல"ங்கற மாதிரி அப்பிடி முஞ்சிய அப்பாவி மாதிரி வெச்சுக்குவோம். கொறவஞ் சாடை கொறத்திக்குத் தெரியாதா? "வாங்கடா...வந்து தொலைங்க"ன்னு அப்பிடியே ஆசை(!)யாக் கூப்புடுவாரு. "நீங்க கூப்டீங்க...அதுனால வரோம்"ங்கற தோரணைல போய் மொதலா நின்னுடுவோம். கையில இருக்கற எல பூராம் பரப்பி போடச் சொல்லி (இதுல என்ன வெக்கம்?!) வாங்கிகிட்டு பின் பக்கமாப் போயி ஒக்காந்து சாப்டுட்டு திரும்பி வந்து, பாத்தரம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சா மறுக்கா நின்னு மறுக்கா திட்டு வாங்கிக்கிட்டே இன்னொடு ரௌண்டு சாப்டுட்டு ஒரு ஏப்பத்தையும் விட்டுட்டு வீட்டுக்குப் போனா, டிஃபன் சாப்ட்டு ஸ்கூலுக்கு கெளம்ப சரியா இருக்கும்.
அக்ரஹாரம் அனுமார் கோவில்ல அடிக்கடி எதாவது காலட்சேபம், கச்சேரின்னு நடந்துக்கிட்டே இருக்கும். கூட்டம்னு ஒண்ணும் பெருசா இருக்காது. 25, 30 பேர் இருந்தாலே அதிகம். "ரெண்டு மாசமா பொண்ணு பாட்டு கத்துண்டு இருக்கா... சரளி வரிசை முடிஞ்சது... கொரல் எழஞ்சு வருது"ன்னு யாராவது அவுங்க வீட்டுப் பொண்ணை மேடையேத்தி விட்ருவாங்க. அது பாவம் கடேசி லைன்ல ஒக்காந்து கண்ணை உருட்டி உருட்டி மெரட்ற அப்பாவப் பாத்துக்கிட்டே எதாவது பாடும். ஸ்ருதி, ராகம், தாளம் இதெல்லாம் பாக்காம இருந்தா, அது பாடற பாட்டு (!!) நல்லா இருக்கும். இல்லேன்னா கேக்கறவங்க படற பாடு இருக்கே....சரி, விஷயத்துக்கு வரேன். எங்க சித்தப்பாவுக்கு உடுக்கம்பாளையத்துல இருந்து வல்லக்குண்டாபுரத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிருச்சு. சித்தப்பா, சித்தி ரெண்டு பேருமே ஒரே ஸ்கூல்ல வாத்தியாருக. சித்தப்பா பசங்களும் ஹை ஸ்கூல்ல படிக்கிறதால உடுமலைக்கே வீடு மாத்தி வந்துட்டாங்க. அக்ரஹாரத்துலதான் வீடு. அவருக்கு பாட்டுல நல்ல இன்ட்ரஸ்ட். அதுவும் சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுன்னா அப்பிடியே சொல்லு பிசகாம அதே கொரல்ல நல்லா கணீர்னு பாடுவாரு. கண்ணை மூடிக்கிட்டு கேட்டா, சீர்காழி பாடற மாதிரியே இருக்கும். அனுமார் கோவில் கச்சேரிக வேற அவர உசுப்பி விட்ருச்சு. விட்டேனா பார்!னு 'கமிட்டி' ஆளுகளோட சோடி சேந்துகிட்டாரு. அப்பப்ப இவரையும் மேடையேத்தி உட்ருவாங்க. இவுரும் அருமையா சீர்காழி பாட்டா பாடினதுல கூட்டமும் கொஞ்சம் சேர ஆரம்பிச்சுது. 'சீர்காழி எதிரொலி'ன்னு பட்டம் வேற குடுத்தாங்க.
நானும் பாலிடெக்னிக் படிச்சுட்டு வேலை தேடி அலைஞ்சுக்கிட்டிருக்குபோது, நெதம் சாயங்காலமானா அவுங்க வீட்டுக்கு போயிர்றது. அண்ணனும் ஒரு மில்லுல ஆடிட்டரா இருந்தாரு. அவுருக்கு செஸ் வெளயாட்டுன்னா உசுரு. 6 மணி போல வந்துட்டார்னா நானும் அவுரும் வாசத் திண்னைல போர்ட வெச்சுக்கிட்டு நேரம் போறது தெரியாம வெளயாடிக்கிட்டுருப்போம். சித்தப்பா உள்ள ஆர்மோனியத்த வெச்சுக்கிட்டு ப்ரேக்டீஸ் பண்ணிகிட்டுருப்பாரு.
ஒருநா அண்ணன் வர லேட்டாயிரும்னு சொல்லிட்டாரு. சித்தப்பா மட்டும் தனியா வழக்கம் போல ப்ரேக்டீஸ்ல இருந்தாரு.
"வாடா.... அம்பி இன்னிக்கு வர லேட்டாகும்... ஒக்காரு... தனன்னன்னன்ன்ன..... காலத்தை உருவாக்கும் காரணனே... "
"எப்ப வருவான்?"
"9 மணி ஆகும்னான். சும்மாத்தானெ இருக்க... அப்பிடி பாட்டு கத்துக்கோயேன்.. வா வா நானே சங்கீதம் சொல்லித் தரேன்..."
நமக்கும் இதுக்குள்ள ஒரளவுக்கு கர்னாடக சங்கீதம் மேல ஒரு 'இது' இருந்துது. சரி...கேப்பமேன்னு ஒக்காந்துட்டேன்.
"உனக்கு என்ன கட்டை வருதுன்னு பாப்பமா... எங்க...பாடு..சாஆஆஆ"
"சாஆஆஆ"
"பாஆஆஆ"
"பாஆஆஆ"
"சாஆஆஆ"
"சாஆஆஆ"
"ம்ம்ம்ம்...1 1/2 கட்டை... கொரல் ரொம்ப ஒடஞ்சு போச்சு... பாடப் பாட சரியாயிடும்"
"சிம்பிளா சொல்லித் தரேன்... இப்ப மொதல்ல மலஹரி...பாரு...வெள்ளை, கருப்பு, வெள்ளை, கருப்பு, வெள்ளை, கருப்பு, வெள்ளை, கருப்பு... அப்பிடியே பின்னால வரணும்... புரிஞ்சுதா?"
"................"
"என்னடா முழிக்கற.... வெள்ளை, கருப்பு, கருப்பு, வெள்ளை வெள்ளை, கருப்பு, கருப்பு... சங்கராபரணம்"
இவ்வளவு ஈஸியா இருக்கு...இதுக்கா சங்கர சாஸ்திரி மூணு மணி நேரப் படத்துல அப்பிடி உசுர விட்டாரு?ன்னு நமக்கு யோசனை.
"இப்ப கருப்பு, கருப்பு....................இது கல்யாணி"
"..........." நல்லவேளயா அண்ணன் அதுக்குள்ள வந்துட்டாரு.
"மாட்னியா? நன்ன வேணும்... அப்பா... ரிட்யர் ஆனப்பறம் கழுத்துல மாட்டிக்கறா மாதிரி சின்ன ஆர்மோனியமா வாங்கித் தரேன்.. பீச் தாம்பரம் ரூட்டுக்கு சீசன் பாஸ் வாங்கித் தரேன்... மேல கீழ போய் சீர்காழியே வந்து போதும்கற வரைக்கும் பாடிண்டே இரு"
"போடா..ஞானசூன்யம்.. ஒனக்கென்ன தெரியும்... அவனுக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு.. கத்துத்தர நான் இருக்கேன்... பாடிட்டுப் போறான்.. போய் வேலயப் பாரு"
"ஆமாண்டா சீர்காழி எதிரொலிக்கு எசப்பாட்டுன்னு பட்டம் வாங்கிக்கோ... ஒழுங்கா வந்து செஸ் வெளயாடு... பாடறானாம்"
"இல்ல... நெஜமாவே இன்ட்ரஸ்டா இருக்கு... தெனம் ஒரு 1/2 மணி நேரம் கத்துக்கறேனே..."
"பாரு... பத்தே நிமிஷத்துல அவன கட்டிப் போட்டுட்டேன் பாரு.. என் சங்கீதத்தோட மகிமை... அடுத்த ஹனுமத் ஜெயந்திக்கு இவன் பாடறான்.. நானாச்சு... நீ மட்டும் தெனம் வந்துடு"
"ஆகட்டும் சித்தப்பா... இன்னிக்கு இது போதும்.. நாளைலேந்து..."
"பாரு அம்பி... அவனை நீதான் கெடுக்கற... சிம்பிள்.. கருப்பு வெள்ள இத வெச்சே சொல்லித் தந்துடுவேன்"
இப்பிடியே கொஞ்ச நாள் ப்ளாக் & ஒயிட்ல பாடம் (!!) நடந்துது. நமக்கோ கலர் கலரா கனவு. ஹனுமத் ஜெயந்தில பாடறோம், கோவிலுக்கு உள்ள, வெளிய வீடுகள்ல, தெருவுலன்னு 1000 பேர் நாம பாடறத கேக்கறாங்க. நல்லா பாடிட்டுருக்கறப்ப யார் அபஸ்வரமா....டர்ர்ர்ர்ர்ர்.....
"நாசமாப் போச்சு.. ஏண்டா... இப்பிடியா போட்டு அமுக்குவ, துருத்தியே கிழிஞ்சு போச்சு பாரு.. நல்ல ஆர்மோனியம்... இப்ப இத சரி பண்ண பழனிக்கு எடுத்துண்டு போயாகணும்..."
அத்தோட நம்ம சங்கீதப் பாடமும் டர்ர்ர்ர்ர்ர்ர்... சரி...இனிமே சமுதாயத்தை சோதிக்க வேண்டாம்... கேக்கறதோட நிறுத்திக்குவோம்னு...
சங்கீதத்துக்கு "மங்களம்...சுப மங்களம்"