Showing posts with label மீர்தாத். Show all posts
Showing posts with label மீர்தாத். Show all posts

Friday, August 29, 2008

அவனோடெ ராவுகள்

வந்தீங்களா? வாங்க.. வாங்க.. தலைப்பப் பாத்துட்டு என்னமோ ஏதோன்னு தோணுச்சா? ரொம்ப சாரி... அது சும்மனாச்சிக்கு வெச்சது... "சிறந்த புத்தகங்கள் - ஒரு எளிய அறிமுகம்" அப்பிடின்னு போட்டிருக்கலாம்தான்.... ஆனா இந்த புத்தகங்களையெல்லாம் பொதுவாக நான் ராத்திரி வேளைகள்ல படிச்சதுனால அப்பிடி தலைப்பு வெச்சேன். (அப்பாடா... தலைப்புக்கு நியாயம் சொல்லியாச்சு)

நான் ரியாத்ல சில மாசங்கள் வேலை செய்ய போனபோது, அங்க வேற ஒண்ணும் பொழுதுபோக்கு இல்லங்கறதால நாங்க தங்கியிருந்த அபார்ட்மென்ட்டுக்கு பக்கத்துல இருந்த "ஜரீர் புக் ஷாப்"தான் ஒரே ஆறுதல். அப்ப படிக்கக் கிடைத்த சில புத்தகங்களை எல்லோருக்கும் அறிமுகம் செஞ்சு வெக்கலாம்னு தோணுச்சு.


The Book of Mirdad : The Strange Story of a Monastery Which Was Once Called the Ark
Author : Mikhail Naimy

இந்த லெபனீய எழுத்தாளருடைய உண்மையான ஒரு அனுபவத்தை ஒட்டி எழுதியதுன்னு சொல்றாரு. பெய்ரூட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஒரு மலையை ஏற முயற்சி செய்யும்போது மேல ஒரு வித்தியாசமான மனிதரை சந்திக்கறாரு. அந்த மனிதர் 'நீ வருவன்னு தெரியும். மீர்தாத் உன்னப் பத்தியும், உன் அடையாளங்களையும் எழுதி வெச்சுருக்கான்' அப்பிடிங்கறாரு. அந்த புத்தகத்தையும் குடுக்கறாரு. அதுதான் "மீர்தாதின் புத்தகம்". இதப் படிக்கும்போது, நம்ம கீதை, வேதாந்தம், குர்-ஆன், விவிலியம் எல்லாம் நினவுக்கு வர்றதை தவிர்க்கவே முடியாது. மீர்தாத் சொல்ற ஒவ்வொரு கருத்தும் அந்த அளவுக்கு நமக்கு ரொம்ப பரிச்சயமானதா இருக்கு.

மேல சொன்ன மலை மேல இருக்கற மடத்துக்கு ஒரு நாள் மீர்தாத் வந்து சேர்றாரு. ஆனா அந்த மடத்தோட தலைவரா இருக்கறவருக்கு இந்த வரவு ரசிக்கும்படியா இல்ல. மத்த உறுப்பினர்களோட விருப்பத்துக்காக அனுமதிக்கறாரு. மடத் தலைவருக்கு நிறைய நன்கொடை வாங்கி மடத்தை விரிவு படுத்தணும்கறதுதான் குறிக்கோள். நோவாவின் படகு பற்றி படிச்சுருக்கோம். மிர்தாதும் அப்பிடி மனித குலத்தை இன்னொரு பிரளயத்துல இருந்து மீட்டெடுக்க வந்தவன்னு சித்தரிக்கப் படுறாரு. மடத்துக்கு வந்த நாளிலிருந்து மீர்தாத் மெல்ல அவருடைய கருத்துக்களை சொல்ல ஆரம்பிக்கறாரு. தலைவரைத் தவிர மற்ற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரா புரிஞ்சுக்கிட்டு மீர்தாத் பக்கம் சாயத் தொடங்கறாங்க. தலைவருக்கு பிடிக்காததுனால பல விதங்கள்ல தொல்லை குடுக்கறாரு. ஆனா அதயெல்லாம் தாண்டி மீர்தாதோட புகழ் பரவ ஆரம்பிக்குது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை எடுத்துக்கிட்டு அதப் பத்தி ஆழமா தர்க்கம் பண்ணி, முகத்துல அறையற மாதிரி உண்மைகள எடுத்துச் சொல்லி, மனிதனுடைய (சுய)உணர்வை (consciousness) விரிவு படுத்தி, கடவுளை "உணரவும்", மனிதன் தன்னுடைய "இரட்டைத் தன்மை" (duality) யிலிருந்து வெளிய வரவும் வழிகளைச் சொல்றாரு.

இந்த புத்தகத்தை படிச்சப்பறம் மீர்தாத் ஒரு புனைவுங்கற மாதிரி கூட தோணும். ஏன்னா, எழுதின மிக்கயில் நைமி ரொம்பவுமே கலீல் கிப்ரானின் எழுத்துக்களால பாதிக்கப்பட்டது தெளிவா தெரியுது. கவிதை மாதிரியான நடை. பொறுக்கி எடுத்த மிதமான, மென்மையான வார்த்தைகளைப் படிக்கும்போதே, அதை மீர்தாத் நம்ம முன்னாடி உக்காந்து மென்மையா சொல்ற மாதிரியான உணர்வைக் குடுக்குது. புத்தகத்துல உள்ள கருத்துக்களோட நமக்கு உடன்பாடு இருக்கோ, இல்லயோ, ரொம்பவே ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ரத்துக்காகவாவது கட்டாயம் படிக்கணும். எனக்கு இதுவரை வேறெந்தப் புத்தகத்தையும் படிக்கும்போதும் கிடைச்சதில்ல. கீதையத் தவிர, கீதைய புத்தகம்னு நெனச்சா. ஒரு உதாரணத்துக்கு கூட புத்தகத்துல இருந்து சில வரிகள எடுத்து போடலாம்னா, என்னோட புரிதல முன் நிறுத்த இஷ்டமில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா அதனோட அர்த்தம் புரியலாம். அதுதான் சரியும் கூட. மூலம் லெபனீய மொழியில் இருந்தாலும், ஆங்கில பதிப்புதான் ரொம்ப பாப்புலர். தமிழ் பதிப்பும் இருக்கு. ஆனா, நான் படிக்கல. வாய்ப்பு கிடைச்சா படிங்க. இந்த புத்தகத்தை படிச்சவங்களை எதாவது ஒரு விதத்துல கண்டிப்பா பாதிக்கும்.
டிஸ்கி 1: நான் எந்த மதத்தயோ, மத உணர்வுகளையோ, தனி மனிதக் கருத்துக்களையோ திணிக்கறதாகவோ, மறுக்கிறதாகவோ தயவு பண்ணி நினைக்காதீங்க. இத ஒரு புத்தகம்ங்கற அளவுல மட்டுமே பார்த்தேன். ஆனா, அதுல அடஞ்ச ஒரு பாஸிடிவ்வான பாதிப்பு எல்லாருக்கும் கிடைக்கணும்னு ஒரு ஆசை. அவ்வளவே. புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி.

டிஸ்கி 2: முதல் முறையா எழுதறதால, ஒரு நல்ல புத்தகத்தை நல்ல முறையில உங்களுக்கு அறிமுகப் படுதியிருக்கேனான்னு தெரியல.