Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, June 15, 2009

மனத்திரை

பாரிஸ். மே 29, 2009:

"கவலை வேண்டாம் திரு. பாட்ரிக். இது ஒரு சிறிய பிரச்னைதான்.... சில வாரங்களில சரியாகி விடும். உங்கள் ஒத்துழைப்பு மட்டும் மிக முக்கியம். முடிந்தால் ஒரிரு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாமே. யோசித்துப் பாருங்கள்... மற்றபடி பயப்படும்படியாக ஏதுமில்லை... மகிழ்ச்சியாக இருங்கள்...."

"நன்றி டாக்டர் கொன்சலெஸ். நீங்கள் இவ்வளவு சொன்னபிறகு எனக்கு இறுக்கம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கிறது. விடுப்பு எடுப்பது பற்றி யோசிக்கிறேன். நன்றி.... "

"சரி.... இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வாருங்கள். அதற்குள் நானும் டாக்டர்.லினர்ட் அப்பாயிண்ட்மென்ட் ஏற்பாடு செய்கிறேன்."

"நன்றி டாக்டர்... வருகிறேன்"

இரண்டு வாரங்களாகவே எனக்கு இந்த வினோதமான பிரச்னை. கனவுகள். இரவில் தூங்கும்போதுதான் என்றில்லை. எந்த நேரத்திலும்... எந்த இடத்திலும்... என்ன செய்து கொண்டிருக்கும்போதும்..... மூளைக்குள் கனவு போல காட்சிகள் ஓடுகின்றன. திடீர் திடீரென்று வந்து... தொந்திரவு அதிகம். பல சமயங்களில் ஓரிரு வினாடிகள் என் சுயகட்டுப்பாட்டை இழந்து மூளைக்குள் நிகழும் காட்சிகளில் நானும் ஒரு பாத்திரமாகி ஏதேதோ விநோதங்கள் நிகழ்ந்து சிலசமயம் பிறர் சிரிக்கும்படியாகவோ முகஞ்சுளிக்கும்படியாகவோ அல்லது அதிர்ச்சியடையும்படியாகவோ ஆகிவிடுகிறது.

அப்படித்தான்... போன மாதம் ஒரு நாள்... பாஸ்தா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வேலைக்குக் கிளம்புவது போல காட்சிகள் வந்து பாஸ்தாவை இடுப்பில் பெல்ட் போல அணிய முயற்சித்து மனைவியும் மகனும் புரையேறும் அளவுக்கு சிரித்தார்கள். முதலில் ஏதோ விளையாட்டாகத் தோன்றினாலும் அடிக்கடி நிகழவே கொஞ்சம் கலக்கமானேன். வேலைக்கு இடையேயும் வர ஆரம்பிக்கவே பயந்துதான் போனேன். பிறகு என் மனைவி தன் நண்பர்களிடம் விசாரித்து.... இதோ இப்போது பாரிஸின் தலைசிறந்த "சைக்கொ அனலிஸ்ட்"டான டாக்டர் வின்சென்ட் கொன்சலெஸ்ஸை சந்தித்து விட்டு வருகிறேன்.

என் பிரச்னையை முழுவதும் கேட்டபின்னர், "சைக்கோ அனாலிசிஸ்" என்று சில "இங்க் ஸ்ப்லாஷ்" படங்களைக் காண்பித்து, அவற்றைப் பார்த்தது மனதிம் முதலில் எழும் நினைப்பை அப்படியே சொல்லச் சொன்னார். நானும் வண்ணத்துப்பூச்சி, கழுகு, மீன் பிடிக்கும் கிழவன்... என்று மனதில் தோன்றியவைகளைச் சொன்னேன். இன்னும் ஏதேதோ கேள்விகள் கேட்ட பிறகு இது ஒரு வகையான "பார்டிஸிபேடிவ் ஹலூசினேஷன்" என்றும் இன்னுமொரு டாக்டரிடமும் ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். பார்ப்போம்....

* * *

மனைவி காரை செலுத்திக் கொண்டிருந்தாள். "எனக்கு மட்டும் ஏன்?" என்ற வழக்கமான கேள்வியை மனதுக்குள்ளேயே உருட்டி புரட்டிக்கொண்டிருந்தேன். என் மனைவி "ஃப்ரெண்ட்ஸ்" தொடரின் சில நகைச்சுவைக் காட்சிகளை விவரித்து என்னை சிரிக்க வைக்க முயற்சித்து தோல்வியடைந்து மௌனமானாள்.

கார் ட்ரைவ்-இன் மெக்டொனல்டில் நிற்க நான் இரண்டு பர்கர்கள் ஆர்டர் செய்தேன். ஜன்னலுக்கு வெளியே இரண்டு கைகளையும் நீட்டி பர்கரை வாங்கினேன். ஏனோ அவன் பர்கரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். நான் இன்னும் கெட்டியாகப் பிடித்து வாங்க முயற்சி செய்தேன்.

"ஏசுவே.... பார்கோமீட்டரை ஏன் பிடித்து இந்த இழு இழுக்கிறாய்? என்ன ஆச்சு உனக்கு?" மனைவி கத்த.... நான் சட்டென்று விழித்தேன். கைகளை உள்ளே இழுத்துக் கொண்டேன். பாழாய்ப்போன கனவு.....

"என்ன... மறுபடியும் கனவா? சரி. டாக்டர்தான் சரியாகி விடும் என்று சொல்லி விட்டாரே? அதையே நினைத்து கவலைப்படாதே......"

காரை விட்டு இறங்கி அசட்டுச் சிரிப்புடன் அவளுடன் கடைக்குள் நுழைந்தேன்.

* * *

மே 30, 2009.

மேலதிகாரியிடம் எவ்வளவோ மன்றாடியும் ஒரு பயனும் இல்லை. ஏற்கெனவே ஆட்கள் குறைவு என்பதாலும், அதுவும் இந்த இரண்டு வாரங்களுக்கான திட்டத்தை மாற்றவே முடியாது என்பதாலும் அதற்குப் பிறகு என் விருப்பம் போல விடுப்பு அளிப்பதாகச் சொல்லி விட்டார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முக்கிய பயிற்சிக்காக என்னைத் தேர்வு செய்து "துலூஸ்"க்கு 2 வாரங்கள் அனுப்பியதை வேறு நினைவு கூர்ந்து கொஞ்சம் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார். வேறு வழியில்லாமல் நாளைக் காலை வருவதாக ஒப்புக் கொண்டு விட்டேன். மனைவியின் தோழியின் ஆலோசனைப் படி அரை மணி நேரம் தியானத்தில் அமர்ந்ததில் மனது கொஞ்சம் லேசானது போல் தோன்றியது. எந்த கனவுத் தொந்திரவுகளும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். மறு நாள் காலை சீருடைகளை அணிந்து கொண்டு வேலைக்குக் கிளம்பி விட்டேன்.

* * *

மே 31, 2009. இரவு 8 மணி.

போன் மணி அடித்தது.

"ஹலோ.... வியோலா பாட்ரிக் பேசுகிறேன்..."

"ஹலோ... திருமதி பாட்ரிக். நான் டாக்டர் வின்சென்ட். திரு. பாட்ரிக் இருக்கிறாரா? நாளை மாலை 5:30க்கு டாக்டர்.லினர்ட்டை சந்திக்க வேண்டும். உங்கள் கணவரிடம் சொல்லி விடுங்கள். நீங்களும் அவசியம் வர வேண்டும். "

"அவர் இப்போது பாரிஸில் இல்லை. நேற்று காலையில் வேலைக்குப் போனார். அவருக்கு இந்த வாரம் ரியோ-டி-ஜனெரோ வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவுதான் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். நாளைக் காலை வீட்டிற்கு வந்து விடுவார்."

"ஓ..."

"2 மாதங்களுக்கு முன்னால் துலூஸில் மேல்நிலை விமானப் பயிற்சிகள் முடித்த பின்னர் அவருக்கு இந்த நீண்ட தூர வழித்தடங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்..."

"நல்லது... நாளை மாலை 5:30க்கு சந்திப்போம்...."

* * *

பாரிஸ். ஜூன் 1, 2009. காலை 7:30.

வியோலா தான் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் ஓட்மீல் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். திரையில் "சற்று முன் வந்த செய்தி" என்று ஒளிர்ந்தது. கவனித்தாள். "நேற்று இரவு ரியோ டி ஜெனெரோவில் இருந்து பாரிஸுக்குக் கிளம்பிய ஏர் ஃப்ரான்ஸ் விமானம் இடையில் கட்டுப்பாட்டு மையங்களுடனான தன் தொடர்பை திடீரென இழந்தது. பிரேசில் மற்றும் ஃப்ரான்ஸ் விமானப்டை விமானங்கள் தொலைந்து போன விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்"


"ஏசுவே..... என் பாட்ரிக்......"

* * *


அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு... பிரேசில் நேரம் அதிகாலை 2:15 ....

நான் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு நான் குதிரைச் சவாரி செய்து கொண்டிருக்கும்போது எதிரே கருப்பு பூதம் போல திடீரென்று ஏதோ தோன்ற, குதிரையை நிறுத்தும் நோக்கில் நான் வலக்கையில் பிடித்திருந்த லகானை சடாரென்று பின்னால் இழுத்தது லேசாக நினைவிருக்கிறது.

ஆ..... நான் செலுத்திக் கொண்டிருந்த விமானம் என்ன ஆயிற்று? ஐயோ... 216 பயணிகள்.... என் நண்பர்கள் 12 பேர்.... என்ன ஆனார்கள்?? ஏசுவே...........

ஏர் ஃப்ரான்ஸ் பைலட் பாட்ரிக் கார்னியே அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி.....


* * *

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.



Wednesday, March 18, 2009

செக்குமாடு



"வாய்யா கனகு... ஏன்யா லேட்டு? மணியப் பாரு எட்டே முக்கால்.... இதோட ஒனக்கு 4 வார்னிங் குடுத்தாச்சு... டைம் ஆபீஸ் முருகேசன் வேற எதுரா சாக்குன்னு பாத்துக்கிட்டே இருக்கான்....

"இல்லீங்கய்யா... வாரைல சைக்கிள் மேல ஒரு பன்னி வந்து மோதி டிச்சுக்குள்ள விளுந்துட்டனுங்... அதான் பாருங் பேண்டெல்லாம் சகதியாயிருச்சுங்..."

"எதாச்சும் சொல்லுய்யா.... பாதிநா லேட்டா வரது. அப்பறம் நான் ரோஸ்டர் போடறதுக்கு என்ன மரியாத? அவன் மூர்த்தியா கத்தறான். ரிலீவர் எங்க ரிலீவர் எங்கன்னு. உன்னிய பேசாமா வெல்டிங்குக்கு மாத்தீர்ரேன். எக்கேட்டும் கெட்டுப்போ

"அய்யா வேணாம்யா... கண்ணு வலி தாங்க முடியாதுங்கய்யா... இனிமே சரியா வநதருவனுங்..."

"சாமி... வேணாம்யா... குடிகாரன் பேச்சக் கூட நம்பலாம். உன்ற பேச்சக் கேட்டா..."

"அப்பிடியெல்லாம் சொல்லாதீங்கய்யா.... நாந்தான் சரியா வரேன்னு சொல்றனல்லங்... சத்தியமுங்.."

"நீயும் உஞ்சத்தியமும். போய் வேலயப் பாரு. மூர்த்திய ரிலீவ் பண்ணு போ.."

அந்த மில்லில் தனபால் ஒரு சூப்பர்வைசர். 4 டீசல் இஞ்சின்கள் நாள் முழுசும் திணறித் திணறி ஓடி 4MW கரண்ட் நுரை தள்ளும். போடற சத்தத்துல நாம பேசறது நமக்கே கேக்காது. ஷெட் பாத்துக்க ஏழு பேர். மூணு மெக்கானிக், மூணு எலக்ட்ரீசியன், ஒரு கையாள். ஷெட்டுக்குப் பின்னால மிசின் ரூம். லேத், ஷேப்பர், ட்ரில்லர்னு அது வேற ஒரே இறைச்சலா இருக்கும். வெளியில வெல்டிங் வேற ப்ர்ர்ர்ர் ப்ர்ர்ர்ர்னு கண்ணு கூசும். சைடுல சின்ன சின்னதா கூலிங் டவருக ரெண்டு. ஷிப்ட் மெக்கானிக் இஞ்சின்களை கவனிக்க, எலக்ட்ரீஷியன் லோடு பாத்துக்க. கையாள், பம்ப் ஓட்டி டேங்குகள்ல டீசல் நெரப்ப, கூலிங் டவர் தண்ணிக்கு உப்பு கொட்ட, அடைப்பு எடுக்கன்னு வேலை பெண்டு நிமுந்துரும்.

தனபால்தான் எல்லாத்துக்கும் சூப்பரவைசர். ரொம்ப கறாரான ஆளு. அவனைக் கண்டாலே எல்லாருக்கும் கொஞ்சம் பயந்தான். டீ குடிக்கக் கூட 8 நிமிஷம்னா 8 நிமிஷந்தான். பின்னாலயே வந்து நின்னுடுவான். "ம்ம்ம்ம்.. இன்னம் ரெண்டு நிமுசத்துல சாப்பாட்டு சங்கே புடிச்சுருவானுக. தொரைக்கி டீ சாப்ட 1 மணி நேரமா?" வேலையும் நல்லாத் தெரியும். சும்மாவா வாசவி மில்லுல இருந்து தேடிப் புடிச்சு கூட்டியாந்தாங்க. "என்ன லச்சணமா வெல்டிங்.... சும்மா மரவட்டை கணக்கா வரிவரியா இருக்க வேணாம்? கை இந்த நடுங்கு நடுங்குனா...."

தனபால் இந்த வாரம் மெயிண்டனன்ஸ் ஷெட்யூல் போட்டுருந்தான். கிர்லாஸ்கர் கம்பெனியிலருந்து இஞ்சினீயருக வருவாங்க. எந்த இஞ்சினுக்கு எங்க நோவுன்னு பாத்து சொல்லுவானுக. அதுக்கு முந்தி இங்க லாக்புக்கு எல்லாம் ரெடியா இருக்கணும். மூர்த்தியும் சங்கரும் ஒழுங்கா எழுதுவாங்க. மணிக்கொருக்கா எட்டு சிலிண்டர்லயும் டெம்ப்ரேச்சர், டீசல் அளவு, தண்ணி ப்ரசர், லோடு, ஸ்பீடு எல்லாம் அந்த பெரிய ரிஜிஸ்தர்ல பதியணும். கனகு மட்டும் தூங்கிட்டு கடைசி மணியில 8 எண்ட்ரியும் ஒட்டுக்கா எழுதுவான். சும்மா கொஞ்சம் முன்னப்பின்ன மாத்தி மாத்தி.

கனகு மூர்த்திய ரிலீவ் பண்ணிட்டு சேர்ல உக்காந்து பெருசா ஒரு கொட்டாவி விட்டான்.

"அப்பிடியே கவுந்து தூங்கிரு.... வந்த ஒடனே லாக் புக்க பாக்கரானா பாரு. எதுக்கோ என்னவோ போச்சுன்னு வாயப் பொளந்துக்கிட்டு.... " பின்னாலயே தனபால் வந்ததை கவனிக்கலை.

"கிர்லாஸ்கர் ஆளுக 10 மணிக்கு வந்துருவாங்க. ஒண்ணும் மூணும் இன்னக்கி. ரெண்டும் நாலும் நாளை கழிச்சு. இப்பயே போன வருச மெயிண்டனன்ஸ் கார்டுக, பார்ட் இஸ்ட்ரியெல்லாம் எடுத்து வெய்யி. எல்லாம் சொன்னாத்தான் செய்வீங்களோ?" தனபால் கத்தி விட்டு இஞ்சினியருக்கு போன் போட போனான்.

கனகு எல்லாம் எடுத்து வெக்க ஆரம்பிச்சான். அப்படியே எதிர் ஷெட்டுல ஸ்பின்னிங்ல வள்ளி இருக்குதான்னு எட்டிப் பாத்துக்கிட்டான். இஞ்சின்களை ஒரு ரவுண்டு வந்தான்.

"டேய் கதிரு... இங்க வாடா. என்ரா இது? ஆயில் மாத்துனியா? தொடைக்க மாட்ட? இந்நேரம் வளுக்கீருக்கும். அதான் அங்க அம்புட்டு காட்டன் வேஸ்ட் கெடக்குதல்ல. தொட மொதல்ல..." தனபால் மேல இருந்த கோவம் எல்லாம் அவன் மேல கொட்டினான்.

இதுக்குள்ள எலக்ட்ரீஷியன் சேகர் போய் 2 இஞ்சின் நின்னு போனா எந்தெந்த மிசினுகளுக்கு நெறி கட்டும்னு பாத்து பேஸ் மாத்தி விட்டுட்டு வந்தான். தலைல ஒட்டீட்ருந்த பஞ்சை எடுக்க கொஞ்சம் ஏர் புடிச்சுக்கிட்டான்.

"சும்மா அவனைப் போயி வெரட்டிக்கிட்டு... விடு கனகா... வேலையப் பாப்போம். மொத டீ சாப்டு வருவோம். வண்டி வந்துருச்சு". டோக்கனை எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.

10 மணி. சொன்ன மாதிரியே கரெக்டா வந்துட்டானுக இஞ்சினீயருக. சின்ன பசங்கதான். துறுதுறுன்னு. தனபாலும் வந்ததும் வெளிச்சமா ஒரு மூலைல டேபிளப் போட்டுக்கிட்டு லாக்புக்கை ஒரு நோட்டம். லோடு, டிஸ்ட்ரிப்யூஷன் பழய மெயிண்டனன்ஸ் குறிப்புக எல்லாம் பாத்துட்டு 1ம் இஞ்சின் கிட்ட போய் நின்னாங்க. ஸ்லோ ஸ்பீட் இஞ்சின். "தடக்.. தடக்... தடக்...தடக்..." லோடு "0" ன்னு ஆனதும் ஆஃப் பண்ணியாச்சு. டெம்பரேச்சர் கொறஞ்சதும் மேல ஏறி ஒவ்வொரு சிலிண்டரா செக்கிங் ஆரம்பமாச்சு.

"அஞ்சாவது சிலிண்டர் ஏன் இன்னும் இம்புட்டு சூடா இருக்கு? கூலிங் சரியில்லயா? மேல போய் பாக்கறேன்"னு கனகு சைட் ரெய்லிங் புடிச்சு மேல ஏறினான். ஹெட் இன்னும் சூடு. எக்ஸாஸ்ட் வால்வு ஸ்பிரிங் டைட். சரியா ஓப்பன் ஆகல போல. கீழ எறங்கி இஞ்சினியர் கிட்ட சொல்லிட்டு மறுபடி அடுத்த டீ குடிக்க போனான்.

டீ குடிச்சுட்டு இருக்கும்போதே "தொம்"னு ஒரு சத்தம். அப்பிடியே டீ டம்ளரைப் போட்டுட்டு ஓடி வந்தான். ப்ளாட்ஃபாரத்துல சிந்தியிருந்த ஆயில கதிர் தொடைக்காமயே போயிருக்கான். கணக்கா இஞ்சினீயர் அது மேலயே கால வெச்சு வழுக்கி விழுந்துருக்கான். சைட் ரெய்லிங்ல தலை பட்டு மண்டைக் காயம். ரத்தம் ஒழுகுது.

"சேகரு.... சேகரு...கதிரு.. ஒடியாங்கடா... அய்யய்யோ...."

சேகரும் கதிரும் ஒடி வர, எல்லாருமாச் சேந்து ஆளைத்தூக்கிட்டு ஸ்டோருக்கு ஓடுனாங்க. அங்கதான் பெரிய பஸ்டெய்டு பொட்டி இருக்கு. இஞ்சினீயர் மயக்கமாயிட்டாரு போல. ஓட்டமா ஓடி, ஆளைப் படுக்க வெச்சு, டெட்டால வெச்சு தொடச்சு, பஞ்சு வெச்சு, கட்டுத் துணியால மண்டைய சுத்தி பெரிய கட்டாப் போட்டு விட்டாங்க. அதுக்குள்ள ஓ.எம். கார் ட்ரைவரைக் கூப்ட்டு விட்டு கார் ரெடியா ஸ்டோர் வாசலுக்கு வந்துருச்சு. அப்பிடியே அள்ளிப் போட்டுக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்கு விரட்டினாங்க.

அட்மிட் பண்ணி, டாக்டருக பாத்துட்டு 4 தையல் போட வேண்டியதாயிடுச்சு. மயக்கம் தெளியில. எப்பிடியும் இன்னும் 2,3 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க. சேகரும் திரும்ப மில்லுக்கு போயிட்டான். இஞ்சினியர் பையனுக்கு வேற தமிழ் தெரியாது. என்ன பண்றதுன்னு புரியாம கனகு மட்டும் அங்கியே தொணைக்கு ஒக்காந்துட்டான்.

தனபால் கிர்லாஸ்கர் கோயமுத்தூர் ஆபீசுக்கு போனைப் போட்டு விசயத்தை சொல்லிட்டான். அவுங்க ஆளை அனுப்பி பாத்துகிறதா சொல்லிட்டாங்க. கோயமுத்தூர்ல இருந்து ஆள் வர அந்தா இந்தான்னு 4 ம்ணி ஆயிருச்சு. வந்தவன் கிட்ட விசயத்தை சொல்லிட்டு கனகு 5 மணியாச்சேன்னு வீட்டுக்கே போயிட்டான்.

மறுநா காலைல மில்லுக்கு போகைல மறுக்கா ஆஸ்பத்திரி வந்து எப்பிடி இருக்கு நெலமைன்னு பாத்துட்டு போனான். சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்களாம். எதிர்காத்துல மிதிச்சு மில்லுக்கு போய் சேர மணி 8:50.

"வாய்யா கனகு... என்னய்யா லேட்டு? மணியப் பாத்தியல்ல.... நீ இனிமே வெல்டிங்தாய்யா..."

"அய்யா.... இல்லீங்கய்யா... இஞ்சினீயரை பாக்க ஆஸ்பத்திரி போயிருந்தனுங்... எதிர் காத்துல மிதிச்சு வர லேட்டாயிருச்சுங்..."

"எதாச்சும் சாக்கு சொல்லிட்டே இரு... போ..... போய் மூர்த்திய ரிலீவ் பண்ணு... கத்திக்கிட்டு கெடக்கான்........."

பக்கத்துல இருந்த டைம் ஆபீஸ் முருகேசன் சிரிச்சுக்கிட்டான். ஸ்பின்னிங்ல இருந்து வள்ளி எட்டிப் பாத்து தோளை மோவாக்கட்டைல இடிச்சுக்கிட்டா. மேகத்துல மறைஞ்சு கெடந்த சூரியன் பொளீர்னு வெளிய வந்துச்சு.