Showing posts with label எதிர்பதிவு. Show all posts
Showing posts with label எதிர்பதிவு. Show all posts

Thursday, September 3, 2009

தலையில் தட்டியது யார்?

சனிக்கிழமை காலை. அவசரமாக ஒரு நண்பரை காணக் கிளம்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் கிச்சனுக்கும் ஹாலுக்கும் இடையே ஒரு குட்டி அறை உள்ளது (டைனிங் ஹாலெல்லாம் இல்லை. சும்மா ஒரு அறை, அவ்வளவுதான்). அதில்தான் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் வகையறாக்கள் வைத்திருக்கிறோம். அந்த அறையில் வலப்புறம்தான் பாத்ரூம் உள்ளது.

இங்கே ஹாலில் லதா மற்றும் உஷாவின் உணவு நேர போராட்டம் நடந்துகொண்டிருந்தது. சாப்பாடு மற்றும் உணவுப்பாத்திரங்களுக்கு நடுவே லதாவை வைத்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை (கொஞ்சம் பெரிது, ஏனெனில்.... ஹிஹி... இதெல்லாம் சொல்லணுமா பாஸ்..) எடுத்துத் தருவது எப்போதும் என்னுடைய பணியாகையால் என்னையே எடுத்துத வருமாறு பணித்தார். என் அவசரத்தில் 'என்ன மறுபடியுமா? வேணாம்.... அழுதுருவேன்..'' என்று பணிவாகச் சொல்லிவிட்டு என் வேலையைப் பார்க்கத் துவங்கினேன். வலிய வந்த சண்டையை விட அவருக்கும் மனமில்லாததால் அவரே எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து பூரிக்கட்டையை எடுக்க விரைந்தார். அதற்குள் எங்கோ லதாவை விட்டு விட்டு கிளம்பிவிட்டார் என நினைத்தாளோ என்னவோ லதா அவரைத் தடுக்கும் வண்ணம் 'யீயீயீயீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்' என அழத்துவங்கியிருந்தாள். பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு 'ஏம்ல உயில வாங்குத, இங்கனதான நிக்கேன்' என்று கூறிக்கொண்டே விருட்டென திரும்பினார். நான் அந்த நேரத்தில் சரியாக பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்ள எண்ணி அந்த அறைக்குள் நுழைய எத்தனித்தேன். ப்ச்... கொஞ்சம் டைமிங் மிஸ் ஆயிடுச்சு... அவ்வளவுதான், மிக பலமாக பிடித்திருந்தாரோ என்னவோ பூரிக்கட்டை என் தலையில் கொஞ்சம் அழுத்தமாகவே முத்தமிட்டது. ஹைய்ய்ய்யோ. அறை முழுதும் அலறல்....

அடுத்த விநாடியே உச்சஸ்தாயியில் கத்தினேன், "ஏன் இப்பிடி ஓங்கி அடிச்சிங்க?"

"அய்யய்யோ, பச்சைப்பொய்யி... லேசாத்தானே தட்டினேன்..." என்று அவள் பதிலுக்கு அலறினாள். அதற்குள் ஹாலில் லதா அவளால் முடிந்த சேவையாய் ஊளையிட்டுக்கொண்டே வாட்டர் ஜக்கை கொட்டிவிட்டிருந்தான். அந்த எரிச்சல், நானே எடுத்துத்தராத கோபம், அதிலும் ஓடி ஒளிய எத்தனித்தது, லீவு நாளில் நான் மட்டும் தப்பித்து வெளியே கிளம்பும் கோபம் என அனைத்தும் சேர்ந்து பூரிக்கட்டை என் தலையின் மீது விழுவது புரிந்தாலும் இதெல்லாம் அரசியலில் சகஜம். அடுத்தடுத்த வசனங்களிலேயே இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

"ஏங்க, நான் பூரிக்கட்டையால லேசாத் தட்டினதுக்கே இப்படி பழி போடுறியளே, நான் மட்டும் அந்த ஒலக்கையால தட்டியிருந்தேன்னா என்ன சொல்லியிருப்பியளோ?" என்றாள். அதற்கு அப்புறமும் அவர் சொன்னதைக் கேட்டுவிட்டுதான் பதில் பேச இயலாமல் நான் தலை வீக்கம் வெளியில் தெரியாமல் மறைக்கும் வழியைப் பார்க்க ஆரம்பித்தேன்.

முறைக்காமலே சொன்னார், "நான் பூரிக்கட்டையோட வர்றது தெரிஞ்சாவே எப்பவும் போல நீங்களாவே வந்து தலையைக் குனிஞ்சு வாங்கிக்கிட்டுப் போவ வேண்டியதுதான? இன்னிக்கு ஏன் ஓடி ஒளியப் பாத்திக?"


என்னவோ போங்க..... ஆதியோட இந்தப் பதிவுக்கும் இதுக்கும் எதாவது தொடர்பு இருந்தாலும் இருக்கலாம்.... அது புனைவாகவும் இது 'உள்ளது உள்ளபடி'யாகவும் இருக்கலாம்.... நமக்கு என்ன தெரியும்? அவரெல்லாம் அப்பளத்தை உடைச்சே சாப்பிடறவர். இட்லியை பிட்டு சாப்பிடறவர். தண்ணியை அப்பிடியே குடிக்கறவர்.

Wednesday, March 11, 2009

பரிசல் போல பதிவிடுவதில் உள்ள 11 சங்கடங்கள் !!

1) நிச்சயமாக எதிர்ப்பதிவு போட மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கையுடனோ, அடுத்த 10வது நிமிடத்தில் எதிர் பதிவு வரலாம் என்ற நம்பிக்கையுடனோதான் பதிவிட நேரும். இரண்டுமே பதிவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) பதிவு போட்ட அரை மணி நேரத்தில் "உனக்கு இது தேவையா?" என்று நம்மையே கேட்டுக் கொள்ள நேர்கிறது.

3) ‘இனிமேல் எதிர்பதிவு போட மாட்டேன்’ – இது பொதுவாக பதிவர்கள் சொல்லும் வாசகம். ஆனால் படக் படக்கென்று அதே நாளில் பத்து எதிர்பதிவுகள் வந்து விடுகின்றன.

4) எதிர் பதிவிடுபவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், பதிவுலகத்தில் வந்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்னோட அந்த நல்ல பதிவுக்கு எதிர்பதிவு போட்டவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘எதிர் பதிவு போட்டே கும்முபவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் போட்ட பதிவை ‘நம்மளே அந்தப் பதிவுக்கு எதிர் பதிவாத்தானே இதப் போட்டோம் ; அதுக்கு இவர் மறு எதிர் பதிவு போடறாரே" என்று மறு / மறு மறு எதிர் பதிவு போட்ட பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) ஒரிஜினல் பதிவிலிருந்து வாக்கியங்களை அப்படியே உபயோகிப்பது, அதே நடையை பின்பற்றுவது போன்றவற்றை செய்யும் சுதந்திரங்களை வாரி வழங்கி விடுகிறோம். அல்லது அப்படி அவர் அப்படி உபயோகிக்காமல் சொந்த நடையில் எழுதினால் ‘இதப் போய் எதிர்ப்பதிவுன்னு நினைச்சோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7) உண்மையாகவே அந்த எதிர்பதிவைப் போட்டவர் தெரியாமலே போட்டு விட்டதாக சொன்னால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. எதிர்பதிவு என்று தெரிந்தே போட்டும் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) எதிர்பதிவு வந்த கடுப்பில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் அவரும் எதிர்பதிவு போட்டுக்கொள்ள அனுமதி கேட்க, நாம் சூடு கண்ட பூனையாய் அவரைக் கடுப்படிக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் பணம், நட்பு இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, எதிர்பதிவு போட அனுமதி கொடுத்தால் நமது ஒரிஜினல் பதிவின் வீரியம், தாக்கம், ஒரிஜினாலிட்டி மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) எதிர்பதிவை முதலில் படிப்பவர்களுக்கு ஒரிஜினல் பதிவை உடனே படிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே, எதற்காக இந்த எதிர்பதிவு என்று நிஜமாகவே யோசிப்பவர்கள் ஒரிஜினல் பதிவின் மதிப்புணர்ந்து நிச்சயமாகப் படிப்பார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் பதிவிடுகிறோம். அதற்கு எதிர்பதிவு வருவதால் அந்த ஒரிஜினல் பதிவை எழுதிய பதிவருக்கு கிடைக்கும் பாராட்டுக்கு நாம் சிறிது தடையாக இருக்கிறோம்.
பரிசலின் ஒரிஜினல் பதிவு (பிராயச்சித்தம் தேடிக்கிறேன் இஃகி இஃகி இஃகி)
டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன் மூலம் உறுதியளிக்கிறேன் !!