Wednesday, April 28, 2010

ஆழ்கடல்... ஒற்றைப்படகு... உறுதியான மனம்

Solo Circumnavigation - உலகத்தை தன்னந்தனியாக ஒரு படகில் சுற்றி வருவது. இமயத்தின் உச்சியை அடைவது போல ஒரு உலக சாதனையாகக் கருதப்படும் இந்தப் பயணத்தை வெகு சிலரே முயற்சி செய்துள்ளனர். 15-ஆம் நூற்றாண்டில் மெகலனின் பயணத்தை ஒப்பிட்டு அதிலிருந்து சில விதிமுறைகளை வகுத்து இந்த "தனி உலகப்பயணம்" மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.

விதிகள் ரொம்பவே "சுலப"மானவை:
1. பூமியின் விட்டத்தில் இரண்டு நேரெதிர் இடங்களைக் கடக்க வேண்டும்.
2. பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை இவைகளை இரண்டு முறை கடக்க வேண்டும்.
3. குறைந்தது 40,000 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
4. பனாமா, சூயஸ் போன்ற பெருங்கால்வாய் வழிகளைத் தவிர்க்க வேண்டும். எனவே தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து போன்ற நாடுகளின் தென்முனைகளை சுற்றியே வர வேண்டும்.
5. பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து சேர வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு கடுமையான சாதனைப் பயணத்தை மேற்கொள்ள உடல்வலிமையை விட அதிகமான மனவலிமை தேவை. நமது இந்தியக் கடற்படையின் கமாண்டர் திலிப் டோண்டே சென்ற ஆகஸ்ட் 15 அன்று இந்த பயணத்தை மும்பையிலிருந்து துவக்கி கிட்டத்தட்ட 75% தூரத்தைக் கடந்து விட்டார். இந்த பயணத்திற்காகவே கோவாவில் உள்ள ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தால் "மாதெய்" என்ற கண்ணாடிநார் பாய்மரப்படகு (fibreglass sail) பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் விசேடமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்திய கடற்படை செய்துள்ளது. ஏறத்தாழ ஒரு வருட காலம் பிடிக்கும் இந்த பயணத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு சிறப்பு குழுவே அமைக்கப்பட்டிருக்கிறது.

சுவாரஸ்யாமான அவரது பயண அனுபவங்களை அவருடைய இந்த வலைப்பூவில் காணலாம். இந்திய விமானப்படையில் இருக்கும் என் அண்ணன் கமாண்டர் திலிப் டோண்டேவின் நண்பர் என்பது ஒரு பெருமையான செய்தி.



ஆகஸ்ட் 28, 2009



ஏப்ரல் 22, 2010


கொசுறு: இந்த செய்தியை ஒரு நண்பரிடம் மிகவும் சிலாகித்து சொன்னபோது, "அடப் போய்யா, நாட்டுல ஆயிரம் பிரச்னைக.... முக்காவாசி ஜனத்துக்கு கஞ்சிக்கு காசில்ல.... இவுங்க கடல்ல உலகத்தை சுத்தறாங்களாம்.... உருப்படியா எதாவது பண்ணச்சொல்லு" என்றார். ஒருவகையில் நியாயமான கேள்விதான் என்றாலும், சிக்கல்கள் தீர்ந்த பின்னரே சாதனை என்றிருந்தால் நாம் என்றுமே சாதனை புரிய முடியாது.

Monday, April 26, 2010

நான் என்றால் அது கவிதை !!


என் கவிதைகளைப் வாசித்ததும்
உன் கண்களில் வழியும் ரௌத்திரம்தான்
என் மகிழ்ச்சியின் இடுபொருளாகிறது,
காரணம் நானெனில் நொடிப்பொழுதில் மிதக்கிறேன்.

உனது கோபமோ அழகைக்கூட்டிச் செய்யப்பட்டது,
ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.
எனது மகிழ்ச்சியோ நறநறக்கும் உன் பற்களின் ஓசையில்
பிறந்து தொடரும் உனது சினத்தில் பல்கிப் பெருகுகிறது.
அந்தப்பல் வரிசையை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

எந்தக் கவிதையில் எந்த கருப்பொருளில் ஒளிந்திருக்கிறது
என் கவிதையின் ஜீவன் எனும் தேவரகசியங்களையெல்லாம்
நீதான் கற்றுத்தருகிறாய்.
உன் கோபங்கள் பசியாற்றுவதாய் ஒருபோதும் இருப்பதில்லை,
அதை மேலும் கிளறிக்கொண்டேயிருப்பதாயிருக்கின்றன.

நீ என் கவிதைகளின் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு ,
ஐ பி எல் போட்டி முடிவுகள் மீது ரசிகர்களுக்கிருக்கும்
எதிர்பார்ப்பை விடவும் அதிகமானது
என்பதை பெருமிதத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.

உன் சினம் அது என்னால், கவிதை எனில் அது நான் என்றிருக்க
நான் எண்ணத்தான் செய்கிறேன்.
ஆனால் நீ அதை சொல்லியே விடுகின்றாய் உன் பின்னூட்டத்தில்...

கவிதையின் முதல் வரிக்கு நீ சொல்வது,

'அய்யோ... அய்யோ... அய்யோ....'

உனக்கான எனது இரண்டாவது கவிதைக்கு நீ சொல்வது,

'முடியல.... முடியவே இல்ல....'


*****************************

கவிஞர் ஆதியின் விருப்பத்திற்கிணங்க நிகழ்ந்த கவிதை இது. இது அவருடைய இந்தக் கவிதைக்கு எதிர் கவிதையாக இருக்குமோ என்று நினைப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல.

@ ஆதி : ச்சாட்ல வந்து கவிதையா கேட்கிறீர் கவிதை? இந்த கவிதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?