Monday, May 18, 2009

"கடவுள் இருக்கின்றது"



எச்சரிக்கை : கொஞ்சம் நீளமான பதிவு. ரொம்ப இல்லாட்டாலும் கொஞ்சம் டெக்னிகலான விஷயங்கள் உண்டு. ஆற அமரப் படிங்க.

தலைப்பே ஒருமாதிரியா இருக்கா? இருக்கட்டும்... இருக்கட்டும்... கடவுள்னு ஒருத்தர் இருக்காரா இல்லையா? கடவுள் அஃறிணையா உயர்திணையா? இல்லை உயர்ந்ததிணையா? ஆத்திகனோ நாத்திகனோ, கல்லுக்குள்ள தேரை மாதிரி மனசோட அடி ஆழத்துல இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும். ஆன்மீக மார்க்கத்துல கடவுளை "விளக்க" அநேக வழிகள் இருக்கு. ஆனா பொதுவா எல்லா வழிகளுமே intangible or subtle or vague. Concrete-ஆ இதுதான் இதுன்னு எளிமையாச் சொல்ல முடியல - அல்லது சொல்வது convincing-ஆ இல்லை. ஆனா விஞ்ஞானத்துக்கு இந்த அசௌகரியமே கிடையாது. எதையாவது செஞ்சு நிரூபிக்க முடிஞ்சா சரி ; இல்லேன்னா ஒத்துக்கவே ஒத்துக்காது. பூமி தட்டையானது, பூமிதான் மத்தியில; மத்த கிரகங்கள் அதைச் சுத்தி வருதுங்கறதுல இருந்து பலப் பல மதம் சார்ந்த, கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை தகர்த்து 'இதுதான் உண்மை'ன்னு அறுதியிட்டுச் சொன்னது விஞ்ஞானம். ஆனா விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒண்ணுக்கொண்ணு எதிர்ப்பு மாதிரி தோணினாலும், உண்மைல ரெண்டுமே complimenting each other. இருக்கட்டுமே... எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இந்த பீடிகை எல்லாம்? சொல்றேன்.

நேற்று முன் தினம் இன்னொரு ஓய்வுக்கான வாய்ப்பு கிடைச்சதுனால சட்டுனு "செர்ன்" போகணும்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். என்னோட ட்ரீம் லிஸ்ட்ல இருந்த இடம். CERN - European Centre for Nuclear Reasearch. இப்பதான் கொஞ்ச நாளா பார்வையாளர்களுக்கு திறந்துருக்காங்க. இது 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளோட நிதி உதவியோட ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். போன செப்டம்பர்ல பேப்பர்ல படிச்சுருக்கலாம்..."ஏதோ டெஸ்ட் பண்றாங்களாம்... கொஞ்சம் ஏமாந்தாலும் உலகமே அழிஞ்சுரும்னு சொல்றாங்கடா மாப்ள... அடுத்த மாசம் கல்யாணத்த வெச்சுக்கிட்டு இதெல்லாம் நமக்குத் தேவையா?"னு எங்கயாவது டயலாக் கேட்டிருக்கலாம்... அந்த முக்கியமான சோதனையை நடத்தியது CERN. இந்த பரிசோதனைக்காக 5 இடங்கள்ல சோதனைக்கூடங்கள் இருக்கு. அதுல நாலு ஃப்ரான்சுக்குள்ள. ஒண்ணு ஜெனீவாவுக்கு பக்கத்துல ஸ்விஸ்-ஃப்ரான்ஸ் பார்டர்ல இருக்கற "மெய்ரின்"ங்கற கிராமத்துல இருக்கு. அங்கதான் நான் போனேன். ஜெனீவால இருந்து டவுன் பஸ் போகுது. 25 நிமிஷத்துல போயிடலாம்.


அப்பிடி இங்க என்னதான் சோதனை பண்றாங்க? அதுக்கு முன்னால கொஞ்சம் சயன்ஸ் ரிவைஸ் பண்ண வேண்டியிருக்கும். எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனது, அணுவோட ந்யூக்ளியஸ்க்கு உள்ள புரோட்டான்ஸ் இருக்கு, எலக்ட்ரான்ஸ் அதை சுத்தி வருதுங்கறது தெரியும். அப்பறம் புரோட்டான்களுக்கு உள்ள க்வார்க், எலக்ட்ரானுக்குள்ள லெப்டான்.... இதெல்லாம் இருக்குங்கறதும் தெரியும். ஆனா அதுக்கும் நுணுக்கமா ஒரு துகள் இருக்கலாம்... அதுதான் GOD Particle னு Higgs சொல்ற வரைக்கும் தெரியாது. அவர் சொன்னதால அதுக்கு Higgs Boson னு ஒரு பேரும் உண்டு. அதைத் தேடித்தான் இங்க சோதனை. பிரபஞ்சம் தோன்றினபோது அது இருந்துருக்கணும். பிரபஞ்சம் தோன்றிய (Big Bang) 10^-43 செகண்ட்க்கு என்ன நடந்திருக்கலாமோ அதை மறுபடி நிகழ வைத்து அந்த பரம ரகசியத்தை தெரிஞ்சுக்க கடந்த 40 வருஷமா இந்த திட்டம் நடக்குது. அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கற வரைக்கும் அறிவியலாளர்களுக்கு தூக்கமே வராது.

சரி.... அதை எப்பிடித் தேடறது? அணுவே கண்ணுக்குத் தெரியாத ஒண்ணு. அதையும் விட நுணுக்கமான ஒண்ணை எப்பிடி...? அங்கதான் நம்ம ஐன்ஸ்டீன் சொன்னது உதவிக்கு வரும். E=mc2. ஆற்றல்ங்கறது எந்த நிலைலயும் இருக்கு. ஆற்றலோட condensed form நிறை (mass). நிலையா இருக்கும்போது ஈர்ப்பு விசையைப் பொறுத்து ஒரு நில ஆற்றலும் (potential) இயங்கும்போது இயக்க ஆற்றலும் (kinetic) வெளிப்படுது. அப்ப ஒளியோட வேகத்துல ஒரு துகளோட ஆற்றல் எவ்வளவு இருக்கும்? நம்மால நினைச்சே பாக்க முடியாது. அந்த மாதிரி ரெண்டு எனர்ஜியை மோத விட்டா...? அப்பிடி ஒரு மோதல்ல... ஒரு ஆற்றல் மிக்க மூலத்துல இருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சுங்கற சித்தாந்தத்தின் அடிப்படைல இந்த சோதனை. அப்பிடி ஒரு மோதல் நிகழும்போது இந்த GOD Particle வெளிப்படலாம். எல்லாத்துக்கும்.. எல்ல்ல்ல்ல்லாத்துக்கும்... மூல சக்தியான அந்த சக்தி என்னதுன்னு ஒருவேளை விடை கிடைக்கலாம்ங்கற முயற்சிதான் இது.

எப்பிடி இந்த மோதலை நிகழ்த்தறது? ரெண்டு புரோட்டன்களை ஒளியோட வேகத்துல ஒண்ணோட ஒண்ணு மோத வைக்கலாம். ஆனா ஒளி வேகத்துல புரோட்டான் துகளை முடுக்கணும்னா நேர்கோட்டுப் பாதைல முடியாது. அவ்வளவு தொலைவுக்கு பூமில சோதனைக்கூடம் வைக்க முடியாது. மாற்று என்னன்னா, அதை ஒரு வட்டப் பாதைல முடுக்கறது. இதுக்காக பூமிக்கு 100 மீட்டர் கீழ 27 கிமீ நீளத்துக்கு ஒரு வட்டப் பாதை அமைச்சுருக்காங்க. பேரு Large Hadron Collider (LHC). அந்தப் பாதைல 5 இடத்துல சோதனைக் கூடங்கள். ஒரு துகள் முடுக்கி(Particle Accelerator) மூலமா சில பில்லியன் புரொட்டன்களை எதிரெதிர் பாதைகள்ல கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு (99.99%) முடுக்கி இந்த 27 கிமீ பாதைல அங்கங்க அதுக மோதறதுக்கு வசதியா பாதைகளை குறுக்க ஓடவெச்சு..... எங்கயாவது மோதினா அந்த நிகழ்வுகளை துல்லியமா சேகரிச்சு அனுப்ப சூப்பர் கம்ப்யூட்டர்க... எல்லாமே அதிவேக கடத்திகள். Super conductors.

ப்ரோட்டான்களை முடுக்கி அதுகளை deflect பண்ணி வட்டப் பாதைல ஓட வைக்க அதிவேகக்கடத்தி இருமுனை மின்காந்தங்கள் (super conducting dipole electromagnets), புரோட்டான்களை நெருக்கமா pack பண்ணி மோதலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கரதுக்கு நால்முனை மின்காந்தங்கள் (quadrupole). (இந்த Dipole / Quadrupole பத்தியே ஒரு நாள் முழுக்க பேசலாம்) இந்த மின்காந்தங்கள் எல்லாமே -271Cலதான் முழுத் திறன்ல வேலை செய்ய முடியும். எல்லாமே superconductingனால ஒரு தனி cooling system. திரவ நைட்ரஜன், திரவ ஹீலியம் - மில்லியன் லிட்டர்களுக்கு மேல - இதெல்லாம் பயன்படுத்தி குளிர்விக்கறாங்க. எல்லாமே extreme technologies.

மோதும்போது சிதறல்ல வேறு சில துகள்களும் - GOD particle உள்பட - கிடைக்கலாம். அதைக் கண்டுபுடிச்சு சேகரிக்க Particle Detectors இருக்கு. மேலும் இந்த பரிசோதனையின்போது TB கணக்குல சேகரிக்கற டேடாவை அனுப்ப, சேகரிக்க, ஆய்வு பண்ணன்னு பல நூதனமான தொழில்நுட்பங்கள் (grid computing) கூட இந்த ஆராய்ச்சியோட பக்க விளவுகளாக உருவாகியிருக்கு. இன்னும் சில வருடங்கள்ல அதெல்லாம் day-to-day computing முறைல வந்துடலாம். இப்பவே இந்த தொழில் நுட்பங்களை மருத்துவத் துறைல பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

போன செப்டம்பர் மாசம் இதை டெஸ்ட் பண்ணும்போது எதிர்பாராத ஒரு சின்ன மின் கசிவுல திரவ ஹீலியம் சூடாகி வாயுவாகி, அழுத்தம் அதிகமாகி 50 மின்காந்தங்களுக்கு மேல சேதமாயிடுச்சு. எல்லாம் சரியாகி மறுபடி அடுத்த டெஸ்டுக்கு இன்னும் வருஷங்கள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானம் "கடவுளை"த் தேடும் வேலையத் தொடர்ந்து செய்யும். விஞ்ஞானமும் மெய்ஞானமும் குவியற இடம் ரொம்ப தொலைவுல இல்லைன்னு தோணுது. மெய்ஞானத்துல கடவுளை "உணர" வைக்க முடியும்னா, அதை "காண" வைக்கறது விஞ்ஞானத்துனால முடியலாம். முடிக்கும். இப்பொதைக்கு இந்த Higgs Boson தான் அதுன்னு நாம தேடிக்கிட்டுருக்கோம். அதுவாகவும் இருக்கலாம் (அல்லது அதை விட சூட்சுமமான ஒன்றாகவும் இருக்கலாம்) அந்த ஆதார சக்தியை, மூலப் பொருளைத்தான் நம்ம வேதங்கள் எல்லாம் பரம்பொருள், மூலாதாரம், பரமார்த்த சத்யம், சத்தாமாத்ரம், சத்து அப்பிடின்னெல்லாம் பல பேர்கள்ல சொல்லுது. பார்க்கலாம்......

சரி... ரொம்ப நீளமாப் போச்சு.... ரொம்பவே மேலோட்டமா சொல்லியிருக்கேன். ஆழமா சொன்னா அறிவியல் பாடம் எடுக்கற மாதிரி ஆயிடும். சொல்ல நான் ரெடிதான்.... (கடைக்கு வர நாலு கஸ்டமரும் ஒடிட்டா?? :)))) இன்னும் சில interesting விஷயங்கள் - பொருள் ; அபொருள் (matter ; anti-matter) - சொல்ல வேண்டியிருக்கு... அடுத்த இடுகைல....
டிஸ்கி : இதைப் படிச்ச பிறகு, நான் ஆத்திகனா நாத்திகனா, அறிவியலாளனா ஆன்மீகவாதியான்னு கேட்டா.... முதல் பத்தில சொன்ன மாதிரி ரெண்டுமே complimenting each other.



















38 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

சி தயாளன் said...

angels & demons படத்திலும் இதை காட்டுவார்கள். anti matter, god's particle என்பதை religion vs science என்ற வகையில் திரில்லராக சொல்லியிருப்பார்கள்...

இந்த ஆய்வு தரப்போகும் முடிவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதால்....இதுவே இப்போ எல்லாருக்கும் கடவுள்...:-)

Mahesh said...

நன்றி டொன் லீ... அடுத்த பகுதியிலோ அல்லது தனியாக அந்தப் படத்தைப் பற்றியோ எழுதலாம் என்று இருக்கிறேன். படத்திலும் CERN பற்றிய காட்சிகள் உண்டு.

Mahesh said...

சும்ம ஒரு குறிப்புக்கு.....

anti-matter god particle
ரெண்டும் வேற.

ஸ்வாமி ஓம்கார் said...

நன்னா இருக்கு...

அப்படியே கடவுளையும் ஒரு போட்டோ பிடிச்சு போடுங்கோ...

ஷேமமா இருப்பேள்... :)

Mahesh said...

//அப்படியே கடவுளையும் ஒரு போட்டோ பிடிச்சு போடுங்கோ...
//

ஸ்வாமி... இது கிண்டலா சீரியசான்னு தெரியலயே? :(

ஸ்வாமி ஓம்கார் said...

கிண்டலை தவிர யாதொன்றும் அறியேன் பராபரமே :)

கட-வுள் இருக்கின்றது அப்படினு சொல்லிட்டேள்.

உள்ளே கடக்காமல் 27 கிமீ பைப் லைன் போட்டா சாத்தியமா?

ஆனா ஒன்னு... உபநிஷத்திலும் திருவருட்பாவிலும் சொன்னதை சொல்ல விரும்பறேன்...

பிரபஞ்சத்தில் ஒரு அணுவை அசைச்சாலும் அதன் அதிர்வு பிற அணுக்களுக்குள்ளும் ஏற்படும்.

Mahesh said...

//பிரபஞ்சத்தில் ஒரு அணுவை அசைச்சாலும் அதன் அதிர்வு பிற அணுக்களுக்குள்ளும் ஏற்படும்.//

அதுதானே Quantum Physics !!

இன்னும் சில வருஷங்கள்... அல்லது சில நூறு வருஷங்கள்... அப்பறம் கடவுளை யாருமே மறுக்க முடியாது :)
இல்லாட்டா இத்தனை நாள் proton neutron னு பேரு வெச்சவங்க GOD partcile னு பேர் வெப்பாங்களா?

அறிவியலும் ஆன்மீகத்துல வந்து லயிக்கும்...ஒடுங்கும்...

ஒளி துகளா, அலையான்னு தேடும்போது observer பாத்தா துகள், இல்லேன்னா அலைன்னு subjectiveஆ அறிவியல் ஆகும்போதே ஆன்மிகத்துக் கிட்ட நெருங்கிடுச்சு.

எம்.எம்.அப்துல்லா said...

இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றீர், ஞானத் தம்பிகளா !

:)

Mahesh said...

அதேதாண்ணே !! நாளைக்கே மறுபடியும் செர்ன் போய் டாக்டர்.நீலைப் பாத்து சொல்லிட்டு வந்துடறேன் :))))))))))))))))

I do appreciate both the quest for knowledge and the quest for enlightenment.

சீனு said...

E = MC2

அறிவிலி said...

//மெய்ஞானத்துல கடவுளை "உணர" வைக்க முடியும்னா, அதை "காண" வைக்கறது விஞ்ஞானத்துனால முடியலாம். முடிக்கும்//

நடந்தா, உண்மையிலேயே எவ்வளாவு நல்லா இருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகையை 3 முறைப் படித்து பார்த்த்த பின் புரிந்த விசயம்...

என் மூளைக்கு இந்த விசயங்கள் எல்லாம் புரியாது அப்படின்னு நல்லா புரிஞ்சுடுச்சு.

இருக்குன்னா இருக்கு, இல்லைன்னா இல்லை - அவ்வளவுதான்.

இராகவன் நைஜிரியா said...

ஒரு நல்ல விசயம் பண்ணிட்டேங்க. தமிழிஷில் ஓட்டுப் போட்டாசுங்க.

abarnashankar,usa said...

mikka arumai.
angels & demons vimarsanam expecting.

Prabhu said...

நீங்க ஸ்விட்சர்லாந்திலா இருக்கீங்க. அங்கதான செர்ன் இருக்கு. நீங்க டான் பிரவுனோட ஏஞ்சல்ஸ் அண்ட் டிமன்ஸ் படிச்சிருக்கீக்களா? அதுலயும் இதப் பத்தி சொல்லியிருப்பாரு.

Prabhu said...

நான் உங்கள பின்தொடர போறேன். பயந்திராதீங்க.

Mahesh said...

நன்றி ராகவன் சார்... 3 தடவை படிச்சும் புரியலயா.... அப்ப நான் பெரிய எழுத்தாளர் ஆயிட்டேன்னு சொல்லுங்க :))))

நன்றி சீனு... ரொம்ப எளிமையா எழுதியிருக்கீங்க...

நன்றி abarnashankar,usa...

நன்றி pappu...

தருமி said...

//angels & demons படத்திலும் இதை காட்டுவார்கள்//

aanaa vasikkumpothu CERN patri theriyathu

font rompa sinnatha irukkae!!

மங்களூர் சிவா said...

இந்த கடவுளின் துகளை பற்றிய ஆராய்ச்சியை ஏற்கனவே படித்திருக்கிறேன். படங்கள் மிக அருமை.

/
ஸ்வாமி ஓம்கார் said...

நன்னா இருக்கு...

அப்படியே கடவுளையும் ஒரு போட்டோ பிடிச்சு போடுங்கோ...

ஷேமமா இருப்பேள்... :)
/

ரிப்பீட்டு

Mahesh said...

நன்றி தருமி.... //font rompa sinnatha irukkae!!// உங்க உலாவியில எழுத்துரு சின்னதா இருக்கும்படி வெச்சுருக்கா? :(

நன்றி மங்களூர் சிவா.... எல்லாத்தையும் படிச்சு எல்லாத்துக்கும் பின்னூட்டமும் போட்டதுக்கு ஸ்பெஷல் நன்றி !!

வால்பையன் said...

அப்படினா கடவுல்கிறது, உயிரற்ற இயங்கி கொண்டிருக்கிற இயந்திரம் போன்ற ஒரு பொருளா?

ஹிஹிஹி

சர்ச்சைய கிளப்புவோம்ல!

Mahesh said...

வாங்க வால்பையன்.... இப்பிடி ஒரு தலைப்பு வெச்சும் இன்னும் யாரும் கேக்கலயேன்னு பாத்தேன்... கரெக்டா புடிச்சீங்க.

குட்டைய கலக்கி விட்ருவோம்.... கலங்கித் தெளியும் :))

Venkatesh Kumaravel said...

கடவுள் என்பது பிரபஞ்சத்தின் தொடக்கப்புள்ளி அவ்வளவு தானா? அந்த தொடக்கப்புள்ளியை வடிவமைத்தது யார்?
எனிவே, வலைப்பூவை தொடர்ந்துவாசித்து வருகிறேன்.. ரசிக்கும்படியாக இருக்கிறது!

நர்சிம் said...

இருக்கிறார் என்று போடாமல் இருக்கின்றது என்று போடும் போதே தெரியும்..அசத்தப் போறீங்கன்னு தெரியும்..அசத்திட்டீங்க..

சி தயாளன் said...

//anti-matter god particle
ரெண்டும் வேற.//

தெரியும்...இத பற்றி நான் இப்ப ஆராய்ந்து (.....???) கொண்டிருக்கிறன்...பதிவு போடிற சூழ்நிலையில்/மனநிலையில் நான் இல்லாத படியால் உங்களிடம் இருந்து அதனை எதிர்பார்க்கிறன் :-)

Mahesh said...

நன்றி வெங்கிராஜா... இப்பொதைக்கு அறிவியலால அவ்வளவுதான் துரத்த முடியும்.... :)))ஆனா... "கடவுளை"ப் பொறுத்தவரையில் எதுவுமே இறுதி என்று நிச்சயமாகச் சொல்வது ரொம்ப கடினம் :)))

நன்றி நர்சிம்...

நன்றி டொன்லீ... புரியுதுங்க... உலகத்தின் மொத்த தமிழினமும் ஊமை அழுகையில்.... :((

நசரேயன் said...

என் அறிவுக்கு ஏதும் எட்டலை

Mahesh said...

வாங்க நசரேயன்... ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி :)))

சின்னப் பையன் said...

கலக்கல்..

போன வருடம் நின்று போன அந்த ஆராய்ச்சி மறுபடி வெற்றிகரமா நடந்தா விஸ்வரூப தரிசனம் தெரியுமா?

Thamira said...

சிறப்பான பதிவு.! (இது டெம்பிளேட் பின்னூட்டம் இல்ல, பதிவ படிச்சாச்சுன்னு சொன்னா நம்பணும்)

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்... கிடைக்கும் கிடைக்கும்.

நன்றி ஆதி... நம்பிட்டோமுங்க :))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு. ஆனா விஞ்ஞானம் ஏற்கெனவே சொன்ன காந்தப் புலம்தான் ,நம்ம மக்கள் சொல்ற கடவுள் ங்கறது என் கருத்து.

chitravini said...

ஒரு நல்ல பதிவு மகேஷ். எளிய நடை. சில யோசனைகள். 1. விஞ்ஞானம் ஏன் கண்ணுக்குத் தெரியாத ஒன்றை 'God particle' என்று சொல்ல வேண்டும்? Is it lack of words in science to name more sub-sub-atomic particles or a subtle and tacit approval of the presence of an all encompassing energy called 'God"? 2. நமது முன்னோர்கள், ஒருவேளை இதுபோல் முயன்று, தோல்வியுற்றுத்தான், 'கடவுள்' என்பதை 'உணரத்தான்' முடியும், 'அறிய' முடியாது என்ற ஆத்மார்த்த நம்பிக்கையோடு, அதை உணர வைக்க இத்தனை உபநிஷத்துக்களையும், க்ரந்தங்களையும், வேதங்களையும் தோற்றுவித்தார்களோ? 3. அப்படியே, 'கடவுள் துகள்' என்ற ஒன்றை கண்டுபிடித்தாலும், அதன் சக்தியின் தோராயமான அளவு என்ன, அது எந்த நிலையில் இருக்கும், சக்தியின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்ற ஒரு அனுமானம் ஏதேனும் உள்ளதா? 4. அப்படியானால், 'பெரு வெடிப்பின்' போது, 'கடவுள் துகள்' எப்படி வெடித்தது? வேறொரு சக்தியின் உதவியினாலா?

ஏற்கெனவே நாம ரொம்ப புத்திசாலி! குழம்பறதுக்கு காரணமே வேண்டாம். இப்ப நம்ம மூளை (இருக்கற கொஞ்ச நஞ்சமும்) ஒளி வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கு. யாராச்சும் நிப்பாட்டுங்களேன்.

குசும்பன் said...

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி செய்தி வந்ததே பிளாக் ஹோல் பற்றிய ஆராய்சி பூமிக்கடியில் செய்ய போகிறார்கள் என்று அந்த இடமா இது?

குசும்பன் said...

//எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இந்த பீடிகை எல்லாம்? சொல்றேன்.//

உங்களுக்கு என்ன ஆச்சு??? ஏன் இப்படி எல்லாம்? பாவம் தானே நாங்க! (நாலு பேரும்:)

Ramanna said...

எக்ஸ்பெரிமென்ட் பத்தி புரிஞ்சுது அனா அவங்க GOD particle கண்டு பிடிபங்களா இல்ல நம்ம வேதமும் உபநிஷடுகளும் சொல்லற மாதிரி அதை உணர மட்டும் தான் முடியுமான்னு எக்ஸ்பெரிமென்ட் முடிஞ்ச அப்பறம் நமக்கு தெரியும்.

Kandavel Raja P said...

Good Article.....Nice work....

Ramprabhu said...

அண்ணே, அருமை அருமை & எளிமை எளிமை பதிப்பு