Saturday, August 23, 2008

மொளச்சு வரும்போது....2

உடுமலப்பேட்டைய சுத்தி இருக்கற 18 பட்டி கெராமங்களுக்கும் பஞ்சாயத்து யூனியன் ஆபீஸ் தளி ரோட்டுல இருக்கு. அதுக்கு பின்னால ஒரு கிலோ மீட்டர் போல போனா ஒட்டுக்குளம் வரும். அதுக்கு பக்கத்துல பெரிய கவுண்டர் தோட்டம். கவுண்டர் எங்க அப்பாவோட நண்பர். எப்பல்லாம் கரும்பு வெளஞ்சு அறுக்கறாங்களோ, சக்கர மில்லுக்கு அனுப்பிச்சது போக, வெல்லம் காச்சறதுக்காக கொஞ்சம் ஒதுக்கி வெச்சுருவாங்க. ஆலை போடறாங்கன்னு ந்யூஸ் வந்தாச்சுன்னா, ஒடனே வீட்டுலேருந்து ஒரு தூக்குபோசிய நம்ம கைல குடுத்து தேன்பாகு எடுத்துட்டு வர சொல்லிடுவாங்க. ரொம்ப ஆர்வமா எங்க அண்ணன் கூட கெளம்பிருவேன். சொன்ன ஒடனே கெளம்பறதுக்கு காரணம் இருக்கு. அங்க போனா கரும்பு ஜூஸ் கெடைக்கும். அதோட பக்கத்துல வாய்க்கால் ஓரமா இருக்கற நெகாப்பழ மரத்துல ஏறி பழம் பறிச்சு திங்கலாம். கவுண்டர் வீட்டுல வேற தெனமாவும் கடுங்காப்பியும் கெடைக்கும். இதெல்லாம் நெனப்பு வந்தொடனே, நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு ஒரே ஓட்டம்.

இந்த வெல்லம் காச்சறதே ஒரு ரொம்ப சுவாரசியமா இருக்கும். அனில் ஆயில் இஞ்சினோட பெல்ட் போட்டு கிரஷர் ஒண்ணு ஓடிக்கிட்டே இருக்கும். சோகையை வெட்டி, கணுவெல்லாம் சீவி நீள நீளமா கரும்புகள அடுக்கி வெச்சுருப்பாங்க. ரெவ்வெண்டு கரும்பா கிரஷர்குள்ள பல்லுகளுக்கு நடுவால குடுத்தா, அப்பிடி கரகரன்னு ஜூஸ புழிஞ்சுட்டு சக்க வெளிய வரும். மறுபடி ஒருவாட்டி புழிஞ்சு எடுப்பாங்க. பெரிய கார்ப்பொரேட்டுகள்லாம் இன்னிக்கு சிறு வியாபாரிகள புழியற மாதிரின்னு வெச்சுக்கங்களேன். நம்ம போயி பக்கத்துல நின்னோம்னா கூட ஒரு எலுமிச்சம் பழம், இஞ்சி, புதினாவெல்லாம் வெச்சு ஸ்பெஷல் ஜூஸு கெடைக்கும். அந்தப் பக்கம் சாளைக்குள்ள பெரிய பெரிய (பெரியன்னா...ஒரு 8 அடி விட்டமிருக்கும்) கடாய்ங்க அடுப்புல போட்டிருப்பாங்க. இந்த புழிஞ்ச சாற பக்கிட்டுகள்ள எடுத்துக்கிட்டு போயி, அந்த கடாய்ல ஊத்தி காச்ச ஆரம்பிப்பாங்க.

சைடுல ஒரு பக்கெட்ல காட்டு வெண்டக்காச் செடியோட தண்டுகள வெட்டி தண்ணீல ஊறப்போட்டு நல்லா கலக்கி, அது கொழ கொழன்னு ஒரு கூழ் பதத்துல இருக்கும். கரும்புச் சாறு நல்லா கொதிச்சு வரும்போது இந்த கலவையையும் அதுல ஊத்தீருவாங்க. சாறுல இருக்கற அசுத்தத்த எல்லாம் இது தனியா பிரிச்சு, அப்பிடி நொர மாதிரி மேல மெதந்துக்கிட்டு வரும். அத அப்பிடியே ஒரு பெரிய அகப்பையால அள்ளி எடுத்துருவாங்க. ரெண்டு ஆளுக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் நின்னுக்கிட்டு கொதிக்கிற சாற கலக்கிக்கிட்டே இருப்பாங்க. இன்னும் நல்லா கொதிச்சதும், ஒண்ணு ரெண்டு பாக்கெட் பொடிகள அதுல சேப்பாங்க. (அது என்ன பவுடர்கன்னு பின்னால தெரிஞ்சுது. சோடியம் ஹைட்ரோசல்பைடும், ஃபார்மல்டிஹைட் சல்ஃபாக்சிலேட்டும்) காட்டு வெண்டக்காயால எடுக்க முடியாத அசுத்தங்கள இது எடுத்துரும்.

இதுக்குள்ள அச்சுவெல்லம் போடற சட்டங்க, மண்ட வெல்லம் புடிக்கிற ஆளுங்க எல்லாம் ரெடியா இருக்கும். கொதிக்கிற சாற டின்னுல எடுத்திக்கிட்டு போயி அச்சுவெல்ல சட்டத்துல ஊத்துவாங்க. (சில சமயம் ஊத்தும்போதே அதுல பொட்டுகடலய கலந்து ஊத்தறதும் உண்டு. அது ஒரு தனி டேஸ்டா இருக்கும்.) மண்ட வெல்லம் புடிக்கிறவங்கதான் பாவம்....சுட சுட அப்பிடி திருப்பதி லட்டு புடிக்கிற மாதிரி உருட்டி உருட்டி காய வெப்பாங்க. ரொம்ப கஷ்டமான வேலை. இதயெல்லாம் ஆ..ன்னு வாய பொளந்துக்கிட்டு பாத்துக்கிட்டிருப்போம். இந்த பொடிக சேப்பாங்கன்னு சொன்னோமில்ல, அதுக்கு முன்னாடி கொஞ்சம் எடுத்து நம்ம தூக்குபோசியில ஊத்தி வெச்சுருவாங்க. (இதுக்குத்தானே போனது!)

ஆனா பாருங்க, இதுக்குள்ள நாம ஒரு 2 லிட்டர் ஜூஸு குடிச்சு, 2 டசன் அச்சு வெல்லம் சாப்ட்டு, 1 கிலோ நெகாப்பழம் தின்னு 'அது வயிறா வெள்ளாவிப் பானையா' ங்கிற மாதிரி இருக்கும். ஒருவழியா தேன்பாக எடுத்துக்கிட்டு வீட்டுக்கு கெளம்புவோம். அம்மாவுக்கும் தெரியும், இந்த வானரங்க என்னல்லாம் கூத்தடிச்சிருக்கும்னு. நம்ம ஊத்த வாய்தான் நெகாப்பழம் தின்னு தின்னு 'ஊதா' வாய் ஆகியிருக்குமே. மறுநா காப்பில நிச்சயம் 2 ஸ்பூன் வெளக்கெண்ண கலந்திருக்கும். இல்லாட்டி இந்த காயலாங்கடையயெல்லாம் கழுவி சுத்தம் பண்றது ரொம்ப கஷ்டம்.

தோட்டத்துக்கு போற வழில, தென்னந்தோப்புல சில மரங்கள்ல கள்ளுக்காக தென்னங்கைகள வெட்டி பானை சொருகி வெச்சுருப்பாங்க. அண்ணனுக்கு திடீர்னு ஒரு ஐடியா. கல்ல வீசி ஒரு பானைய ஒடச்சா என்னன்னு. ரெண்டு மூணு கல்ல விட்டெறிஞ்சு பாத்தோம். ரொம்ப ஒசரம்கறதால ஒரு கல்லும் கிட்ட கூட போகல. ஆனாலும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி எறிஞ்சுக்கிட்டே இருந்ததுல ஒரு கல்லு போயி பானைல பட்டு ஓட்டை போட்டிருச்சு. ஆனா சத்தம் நல்லா கேட்டிருச்சு. அந்தப்பக்கம் தேங்கா உரிச்சுக்கிட்டு இருந்தவங்க பாத்துட்டாங்க. ஒடியாந்து ரெண்டு பேரையும் புடிச்சுட்டாங்க. கள்ளு 6 ருவா, பான ஒண்ணார் ருவான்னு கணக்குப் போட்டு ஏழார் ருவா கேட்டு மிரட்றாங்க. நாம வேற சத்தமா அழ ஆரம்பிக்க, அந்தப் பக்கமா சைக்கிள்ள வந்த இன்னொரு கவுண்டர் (அவுரும் அப்பாவுக்கு நண்பர்தான்...உரக்கடை வெச்சுருக்காரு) பாத்துட்டு, அவுங்க கிட்ட சொல்லி விடுவிச்சு கூட்டிக்கிட்டு போயி அவுங்க வீட்டுல காப்பியெல்லாம் குடுத்து அனுப்பிச்சாரு. ஆனா நானும் அண்ணனும் நடந்தத வீட்ல சொல்லல. உரக்கடை கவுண்டரும் அப்பா கிட்ட சொல்லவே இல்ல.

பெரிய கவுண்டர் தோட்டத்துல ஒரு பெரிய கெணறு இருக்கு. அதுல அடிச்ச கூத்துக.... சொல்றேன் சொல்றேன்....

இன்னும் மொளைப்போம்...

23 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

Anonymous said...

பேச்சுத் தமிழில் ரொம்ப நல்லாவே பழைய உங்களது நினைவுகளை எங்களுடன் பகிர்ந்திருக்கீங்க. கவலைகளற்ற அந்த சிறுவயது அனுபவங்களின் இனிமையே தனிதான். பெரியவர்கள் ஆனதும், இக்காலத்திய நவீன அலைச்சல் பிடித்த வாழ்க்கை வாழ்வதற்கு மண், இயற்கை, சொந்தங்கள், சூழல்கள், நட்புகள், அனுபவங்கள் போன்ற அனைத்தையும் எடுத்து பரணையில் செருகிவிட்டு இயந்திர வாழ்க்கைக்குள் தள்ளப் பட்டு விடுகிறோம். இதன் வலிகள் இதனை அனுபவிக்கும் ஒருவருக்கு மட்டும்தான் தெரியும் மருந்தாயில்லாத உள்வலிகள்.

பரிசல்காரன் said...

போங்க மகேஷ்... எதுக்குடா உங்கள எழுதத் தூண்டினோமோன்னு நெனைக்க வெச்சுடுவீங்க போல...

இப்படியே எழுதீட்டிருந்தீங்கன்னா அப்பறம் நம்ம கடையை காலிபண்ண வேண்டியதுதான்!

ரொம்ப எதார்த்தமான நடை!

வேற வார்த்தையே வர்லீங்க!

பரிசல்காரன் said...

//அவுங்க கிட்ட சொல்லி விடுவிச்சு கூட்டிக்கிட்டு போயி அவுங்க வீட்டுல காப்பியெல்லாம் குடுத்து அனுப்பிச்சாரு. //

உடுமலைக்காரங்க மனசு இங்க தெரியுது பாருங்க...

பழமைபேசி said...

உங்க பதிவை படிச்சதுல, மணி விலாஸ்ல டிகிரி காப்பி குடிச்சுட்டு ஒண்ணாம் நம்பர் பஸ் எடுத்து ஊருக்கு போன மாதிரி இருக்கு!
நொம்ப நல்லா இருக்குது!!

Mahesh said...

@ பரிசல் : ரொம்ப நன்றிங்க..... எனக்கும் வேற வார்த்தை வர்லீங்க .... :D

@ பழமைபேசி : வருகைக்கு நன்றி....நீங்களும் உடுமலயா? வாங்க வாங்க.... அடிக்கடி வந்து போங்க...

@ மாசிலா : அண்ணே... வங்கண்ணே .... நன்றி நன்றி... ரொம்ப சரியா சொன்னீங்க... ஆனா அந்த கடைசி வரி "மருந்தாயில்லாத உள்வலிகள்" - பின்நவீனத்துவக் கிருமி கடிச்சுருச்சு போல இருக்கே....

Mahesh said...

@ பழமைபேசி : ஏஞ்சாமி.... இம்புட்டு அழகா மரபுக் கவிதையெல்லாம் எழுதிப்புட்டு, அதே கையால இந்த பதிவையும் நல்லா இருக்குன்னு சொல்றீங்களே... பெரிய மனசு உங்களுக்கு...

புதுகை.அப்துல்லா said...

உடுமலப்பேட்டைய சுத்தி இருக்கற 18 பட்டி கெராமங்களுக்கும்
//

18 பட்டி இல்லாத ஓரு ஊரை தயவு செய்து காட்டுங்கப்பா!!!

புதுகை.அப்துல்லா said...
This comment has been removed by the author.
புதுகை.அப்துல்லா said...

//அதுக்கு பக்கத்துல பெரிய கவுண்டர் தோட்டம்//

அப்ப நம்ப கேப்டன் அதாங்க சின்னக் கவுண்டர்...அவரு தோட்டம் எங்க இருக்கு?

புதுகை.அப்துல்லா said...

சொன்ன ஒடனே கெளம்பறதுக்கு காரணம் இருக்கு. அங்க போனா கரும்பு ஜூஸ் கெடைக்கும். அதோட பக்கத்துல வாய்க்கால் ஓரமா இருக்கற நெகாப்பழ மரத்துல ஏறி பழம் பறிச்சு திங்கலாம். கவுண்டர் வீட்டுல வேற தெனமாவும் கடுங்காப்பியும் கெடைக்கும். இதெல்லாம் நெனப்பு வந்தொடனே, நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு ஒரே ஓட்டம்.
//

அதான பார்த்தேன்...எலி ஏண்டா அம்மணமா ஓடுச்சுன்னு :)

Mahesh said...

@ அப்துல்லா : ஏன்... உங்க ஊருக்கெல்லாம் 18 பட்டி கெடயாதோ? அமெரிக்காவுக்கு பொடக்காளைல ** இருக்குதோ? அப்பறம்... சின்ன கவுண்டர்தான் வயக்காடெல்லாம் வித்துப் போட்டு நடிக்கப் போயிட்டாரில்ல... அதெல்லாம் பெரிய கவுண்டர் வாங்கீட்டாரு...ம்ம்ம்ம்.. அந்த எலி மேட்டர்.... நமக்குள்ளயே இருக்கட்டும். :)

** பொடக்காள : பின்புறம்

புதுகை.அப்துல்லா said...

அனில் ஆயில் இஞ்சினோட பெல்ட் போட்டு //

இப்பல்லாம் அந்த இன்ஜின் வர்றதே இல்லண்ணே. கிர்லோஸ்கர்தான் கிடைக்குது.

புதுகை.அப்துல்லா said...

பெரிய கார்ப்பொரேட்டுகள்லாம் இன்னிக்கு சிறு வியாபாரிகள புழியற மாதிரின்னு வெச்சுக்கங்களேன்//

அண்ணே! என்னா உவமானம்..
என்னா உவமானம்... நீங்க சொன்ன நெசத்துல நெக்குருகி போய்ட்டேன்னே.

புதுகை.அப்துல்லா said...

மண்ட வெல்லம் புடிக்கிறவங்கதான் பாவம்....சுட சுட அப்பிடி திருப்பதி லட்டு புடிக்கிற மாதிரி உருட்டி உருட்டி காய வெப்பாங்க//

நல்லா பெரியா சாக்கா ஓன்னோட ஓன்னு சேர்த்து தச்சு அதை பெரிசா விரிச்சு அதுல காயப் போடுவாங்க. காஞ்ச மண்டை வெல்லத்துல சாக்கு நூலும் கொஞ்சம் ஓட்டிக்கிட்டு இருக்கும். அத ஓக்காந்து ஓன்னொன்னா பிரிக்கிரதுல ஓரு குஷி அப்போ :)

புதுகை.அப்துல்லா said...

மறுநா காப்பில நிச்சயம் 2 ஸ்பூன் வெளக்கெண்ண கலந்திருக்கும்
//

:)))))))))))))))))

புதுகை.அப்துல்லா said...

//
தோட்டத்துக்கு போற வழில, தென்னந்தோப்புல சில மரங்கள்ல கள்ளுக்காக தென்னங்கைகள வெட்டி பானை சொருகி வெச்சுருப்பாங்க. அண்ணனுக்கு திடீர்னு ஒரு ஐடியா. கல்ல வீசி ஒரு பானைய ஒடச்சா என்னன்னு.//

உடைந்த பானையில் இருந்து ஊத்துற கள்ளை குடிக்கிறதுக்கு போட்ட ஐடியாதான அது?

புதுகை.அப்துல்லா said...

லாஸ்டு பின்னூட்டம் பட் நாட் லீஸ்டு பின்னூட்டம்.

// பரிசல்காரன் said...

இப்படியே எழுதீட்டிருந்தீங்கன்னா அப்பறம் நம்ம கடையை காலிபண்ண வேண்டியதுதான்!

ரொம்ப எதார்த்தமான நடை!

வேற வார்த்தையே வர்லீங்க!
//


அதேதான். உண்மையில் என்ன சொல்லிப் பாராட்ட என்று தெரியவில்லை. விரைவில் அப்துல்லா எனும் மொக்கச்சாமி அவர் கடையை காலி செய்தார்னு தகவல் குடுக்க வேண்டியதுதான்.

Mahesh said...

@ அப்துல்லா :

பின்னூட்டம் போட்டு தாக்கிட்டீங்க.... என்னதான் நான் எழுதினாலும் தூண்டி விட்ட பரிசலாருக்கும், உங்கள மாதிரி ஊக்குவிக்கிறவங்களுக்கும்தான் நன்றி சொல்லணும்.

ஆமா..வெல்லத்துல இருக்கிற சணல் துண்டுக எல்லாம் பிரிச்சு சாப்டற அளவுக்கு உஙளுக்கு பொறுமை இருக்கு... நாமெல்லாம் அப்பிடியே சாப்டறது... சணல் வாய்க்குள்ள் தட்டுப்பட்டா, முடிஞ்சா துப்பறது...இல்ல....ஏவ்வ்வ்வ்வ்வ்...தான்.

பழமைபேசி said...

மகேசு, உங்க எழுத்தில என்ன இருந்தாலும் நம்மூர் தன்னடக்கம் இருக்குது பாத்தீங்களா?
நீங்க நல்லா இருக்கணும் கண்ணு.... திருமூர்த்தி மலைத் தண்ணி குடிச்சு வளர்ந்த உசிரு இல்லயா உங்க உசுரு... ஸ்கூல் மைதானம் பத்தி எழுதினீங்க...... அப்படியே கிருஷ்னசாமி வாத்தியார் பத்தி தெரிஞ்சுக்கோங்க... பட்டி தொட்டி எல்லாம் நடுங்கின காலம் அது...

நான் அஞ்சாவது படிக்கும் போது எங்க மாமா, சித்தப்பா எல்லாம் நடுங்குவாங்க அவுரு பேரைக் கேட்டாலே.... அப்புறம் எங்க காலம்.... கல்பனா தியேட்டர் வாசல்ல மூணு சீட்டு விளையான்ட்டு UKP வளாகத்துல மொக்கை.....
கூடவே பட்சி பாக்கு ற து..... ம்ம்.... ஆத்துல விழுந்த எலை ஆத்தோட, என்னோட நெனப்பு என்னோட....

பழமைபேசி said...

மகேசு, நம்ம பக்கத்துக்கு வந்து ஒரு பொருள் பிழைய சரி செஞ்சதுக்கு நொம்ப நன்றிங்க!!!

Mahesh said...

@ பழமை பேசி :

என் கருத்தை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி....

பழமைபேசி said...

மகேசு,

ஆக்கப்பூர்வமான உங்கள் கருத்துக்களும் சுட்டிக்காட்டுதலும் வெகு நேர்த்தி! உங்களால் வலையகத்திற்குப் பெருமை!!
தமிழ் ஊடகவியலுக்கும் பெருமை!!!

Mahesh said...

@ பழமைபேசி : ரொம்ப நன்றி !!!